Friday, June 30, 2023

பொதுக்காலம் 13ம் ஞாயிறு மறையுரை - 02.07.2023

பொதுக்காலம் 13- ஆம் ஞாயிறு மறையுரை : 02.07.2023. 

2 அரசர் 4:8 -11, 14-16,
உரோமையர் 6:3-4, 8-11,
மத்தேயு  10: 37-42.

அருட்பணி. *ஜெரால்டு ஜெஸ்டின்* குழித்துறை மறைமாவட்டம்.
------------------------------------------------------------          
*நல்ல மதிப்பீடுகளால் சீடராவோம்*
-----------------------------------------------------------
♦️தெய்வ பயம், இறை நம்பிக்கை, அடுத்தவரை பற்றி அக்கரையின்றி வாழும் இக்காலத்தில்,  நாம் நமது நல்ல மதிப்பீடுகளால், நற்செயல்களால் ஆண்டவருக்குகந்த சீடராவோம் என்று சிந்திக்க அழைக்கிறது இன்றைய வழிபாடு.                                                     
♦️இறையச்சத்தோடு-இறைவனை அன்பு செய்கிறவர்கள் அயலாரையும் நிறை மனதோடு ஏற்று அன்பு செய்வர்.                              
♦️தங்கள் நம்பிக்கையை நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தி தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உயிரோட்டமானது என்று சான்று பகர்பவர்கள் சீடர்கள்.
♦️நாமும் நம் நல்ல செயல்களால் இறைவனுக்குரியவர்கள், அவரின் சீடர்கள் என்பதை உணர்த்துவோம்.

*நிகழ்வு:1* - *14.06.2023 ஊடகச் செய்தி*

திருவண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளி, அதில் 7 - ஆம் வகுப்பு படித்த ஒரு மாணவன் நன்றாக படிப்பவன் தாய் - தந்தை இருவரும் இல்லை. உடைந்த ஒரு சிறு குடிசை வீடு. அந்த மாணவனின் வறுமை நிலையை கண்ணுற்ற அந்தப் பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியர் திருமிகு. தமிழ்கனி தன் சொந்த செலவில் ஒரு சிறிய கான்கிரீட் இல்லம் கட்டிக் கொடுத்துள்ளார் அந்த ஏழை மாணவர்க்கு.

*நிகழ்வு: 2* - *25.06.2023 ஊடகச் செய்தி*

நாங்கள் உணவு சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆச்சு சார் - ன்னு மாற்றுத்திறனாளி ஒருவர் ஒரு தகவல் அனுப்ப, உடனடியாக அந்த மனிதரின் முகவரியைக் கண்டுபிடித்து அந்த வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்கள், அரிசி அதோடு பணம் கொடுத்து உதவி செய்தார்.  அதோடு அவர்களோடு தரையில் நீண்ட நேரம் அவரின் எளிய வீட்டில் அமர்ந்து உரையாடி, உறவாடிச் சென்றிருக்கிறார் விழுப்புரம் மாவட்டம் எஸ்.பி. ஜெயக்குமார்.

இந்த இரு நிகழ்வுகள், ஆசிரியர் தமிழ்கனியாகட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாராகட்டும் அக்குடும்பத்தார் பார்வையில் தெய்வமாகிறார்கள். மானுடர் நமக்கு மதிப்பீடுகளை நற்செயல்களால் உரக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

*இன்றைய முதல் வாசகத்தில்*

எலிசா இறைவாக்கினர் சூனேமுக்குப் போகிறார். அங்குள்ள செல்வ பெண்மணி உணவருந்த வற்புறுத்துகிறாள். இறைவாக்கினர் எலிசா அவ்வழி பயணம் செய்யும்போது அங்கு உணவருந்துவது வழக்கம். 2 அரசர் 4:9 *நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன்* என்றவர் வீட்டின் மேல் மாடியில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்குப் போன்ற வசதிகள் செய்து கொடுக்கிறார். எலிசா இறைவாக்கினார் அவளின் நல்ல, கரிசனையான செயலுக்கு கைமாறு செய்ய நினைக்கிறார். அப்பெண்ணிற்குக் குழந்தை இல்லை என்பதை தன் பணியாளர் கேகசி வழியாக அறிகிறார். அறிந்தவர் அவளை அழைத்து 2அரசர் 4:16 *"அடுத்த ஆண்டு இதேப் பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்"* என்று ஆசிவழங்கி வாழ்த்தினார்.

மத் 10:41 *"இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்று கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைமாறு பெறுவார்"*. இறைவாக்கினருக்கு அவள் வழங்கிய மதிப்பு, ஏற்படுத்திய வசதிகள் எல்லாம் அவளின் வாழ்வுக்கான ஆசீராய் நிரம்பி வழிந்தது. தொடக்க நூல் 18-ம் அதிகாரத்தில் மம்ரே பகுதியில் தேவதாரு மரங்களுக்கிடையில் கடவுள் தூதர் மூவர் தோன்ற, ஆபிரகாம் அவர்கள் மூவரும், கடவுளின் மனிதர்கள் என்பதை அறிந்து அவர்களை சிறப்பாக உபசரித்தார். குறிப்பாக எண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுத்து உணவருந்தச்  சொல்கிறார். அவர்கள் உண்ணும் வரை மரத்தடியில் நின்று கொண்டார். அவர்கள் போகும்போது *தொநூ 18:14 இளவேனிற்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன் அப்பொழுது சாராவிற்கு ஒரு மகன் பிறந்திருப்பான்* என வாழ்த்தி, வாரிசு வழங்கி ஆபிரகாமை ஆசீர்வதித்தார் இறைவன்.

நம்மை நாடி வருவோரையும், நம்மை தேடி வருவோரையும் மனமுவந்து, மதித்து, மாண்புடன் நடத்துகிறோமா? 

⭐அவர் ஆண்டவரின் மனிதரும் புனிதருமாய் இருக்கிறார் என்று இறைவாக்கினர் எலிசாவை அவருடைய செயல்களால் இனம் காண்பது போல், பிறர் நம்மை எத்தகையோராய் இனம் காண்கின்றனர், சிந்திக்க செயலாற்ற அழைக்கப்படுகின்றோம்.

இந்த நற்செய்தியில் சீடராய் இருப்பதற்கான தகுதிகள் சீடரின் குணநலன்களைக் குறித்து மத்தேயு விளக்குகிறார்.

சீடர் என்பது ஒரு தனி மனிதனை மட்டும் குறிப்பதல்ல மாறாக கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற எல்லாருக்கும் பொருந்தும், அருட்நிலையில் இருப்போரும், பொதுநிலையில் இருப்போரும் அவர்களின் நிலையில் கிறிஸ்துவை பிரதிபலிக்க அழைக்கப்படுகின்றோம்.

1. *கடவுளுக்கு முதலிடம் வழங்கல்*

சீடத்துவத்தின் தலையாய பண்பு கடவுளை முதன்மைப்படுத்துவது தான் நம் வாழ்வின் எல்லாமுமாய் இறைவன் அமைவது தான் சிடத்துவம்.

இணைச் சட்டம் 6.5 *"உன் முழு இதயத்தோடும் உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரில் அன்பு கூறுவது"* என்று திருவிவிலியம் அறிவுறுத்துகிறது. எனவே தான் இன்றைய நற்செய்தியில் மத் 10:37- *"என்னைவிடத் தன் தந்தையிடமோ, தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்பட தகுதியற்றவர்"* என்றார் இறைமகன் இயேசு. இதனால் பெற்றோரை, உறவுகளை, வெறுக்கவோ துறக்கவோ வேண்டும் என்பதல்ல, மாறாக கிறிஸ்து தான் நமக்கு வாழ்வும், வழியும், உண்மையும் என்பதை உணர்ந்து கிறிஸ்துவின் சீடராவதே மாட்சியும், மகிமையும் என்பதை உணர்த்துகிறது. கடவுளை வாழ்வின் மையமாக்கி, அவரை வணங்குவதும், பெற்றோர், உடன்பிறப்புகளை மதிப்பதும், நேசிப்பதும் தான் சிறப்பான ஆன்மீகம். இதனை லேவி 19:18 *"உன் மீது அன்பு கூறுவது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூறுவாயாக"* என்று ஆண்டவரே அறிவுறுத்துவதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

2. *சிலுவையைச் சுமத்தல்*

மத் 16:24 *"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்"* என்று சீடருக்கு அறிவுறுத்தினார் இறைமகன் இயேசு. ஒப்பற்ற செல்வமாகிய கிறிஸ்துவை தம் சொந்தமாக்கிய பின் தூய பவுல் பல்வேறு துன்பங்கள், அச்சுறுத்தல்கள், பழிச்சொற்கள், வேதனைகட்கு ஆளானர். அதனை அவரே 2கொரி 11:23 - *"பன்முறை சிறையில் அடைபட்டேன், கொடுமையாய் அடிப்பட்டேன், பன்முறை சாவின் வாயில் நின்றேன்"* 2 கொரி. 11:24 *ஐந்து முறை யூதர்கள் என்னை சாட்டையால் ஒன்று குறைய 40 அடி அடித்தார்கள்"* 2 கொரி 11:25 *மும்முறை தடியால் அடிப்பட்டேன். ஒருமுறை கல் எறிபட்டேன். மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன் ஓர் இரவும் பகலும் ஆள் கடலில் அல்லலுற்றேன்"* என்று கூறுவதைப் பார்க்கின்றோம். இது தூய பவுல் மட்டுமல்ல, அவருடைய உண்மை சீடர்கள் எல்லாருக்கும் இது பொருந்தும். எனவேதான் ஆண்டவர் இயேசு என்னைப் பின்பற்றுகிறவர்கள் *சிலுவையைச் சுமக்க வேண்டும்* என்று தீர்க்கமாய்ச் சொன்னார்.

உண்மைச் சீடர்களை துன்பங்கள் நெருக்கடிகள் ஒருபோதும் சிதறடித்துவிட முடியாது. அவர்கள் எத்தகையத் துன்பங்களிலும் நெருக்கடிகளிலும் கிறிஸ்துவை உறுதியாய் பற்றிக் கொள்வர். உரோமையர் 8:35 - *"கிறிஸ்துவின் அன்பின்னின்று நம்மைப் பிரிக்க கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்."* என்பதிலிருந்து உண்மைச் சீடனை எதுவும் எச்சூழலிலும் அசைக்க முடியாது. சிலுவைகள் நெருங்கும்போது சிதைந்து போகாமல் உறுதியாய் நிலைத்து நிற்பான்.

3. *ஆன்மாவைக் காத்துக் கொள்வோம்*

மத் 10:34 *"தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவார். என் பொருட்டு தம் உயிரை இழப்போரே அதைக் காத்துக் கொள்வார்"* ஆண்டவருக்காக தம் உயிரை இழப்போர் ஆன்மாவைக் காத்துக் கொள்வார்.

🔴ஆண்டவரின் சீடர்கள் உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சமாட்டார்கள். மாறாக ஆன்மாவை அளிக்க வல்ல இறைவனுக்கு மட்டுமே அஞ்சுவார்கள்.

🔴நாம் ஆன்மாவை இழந்தால் அதற்கு ஈடாக எதையும் வழங்க இயலாது என்பதை உணர்ந்தவர்களாய் வாழ அழைக்கப்படுகின்றோம்.

எபே. 6:12 - *"நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை ஆட்சி புரிவோர், அதிகாரம் செலுத்துவோர்,  இருள் நிறைந்த இந்த உலகின் மீது ஆற்றல் உடையோர், வான்வெளியில் உள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோரோடும் போராடுகின்றோம்"* எனவே விசுவாசத்தில் தளர்வு வராது நிலைத்து நின்று ஆன்மாவைக் காத்து, ஆண்டவருக்காய் பல ஆன்மாக்களை அறுவடை செய்வது சீடத்துவம்.

*நமது வாழ்வுக்குக் கடப்போம்*

இன்றைய உலகில் நல்ல சீடராய் வாழ்வது என்பது:

✝️நம்மை நாடி வருபவரிடம் அன்பாலும், ஆற்றல் படுத்தும் சொற்களாலும் உரையாடி,  எந்நிலையிலும் நாம் அவருடன் உண்டு என்ற நம்பிக்கையை வழங்குகிறோமா?

✝️நம் வாழ்வில் பல்வேறு தருணங்களில் பல்வேறு மனிதர்கள் நமக்கு உதவியாக, உற்றதுணையாக இருந்திருப்பார்கள். அவர்களுக்கு எலிசாவைப் போல் நன்றி பாராட்டியிருக்கிறோமா?

✝️பிறரின் தேவைகளை, மனதின் வலிகளை நாம் முழுவதும் அறிந்திருந்தும், அவ்வலிகளை மாற்ற, கேகசி போல் முன் வருகிறோமா?

✝️நம் வாழ்வில் வாழ்வு தந்து பராமரித்து வழிநடத்தும் கடவுளை முதன்மைப்படுத்தி, அவரின் சீடராக வாழ்கிறோமா? இல்லை பணம், பதவி, அதிகாரம் இவற்றை முதன்மைப்படுத்துகிறோமா?

✝️நானும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன் என்கிற தூய பவுலின் மனநிலை நம்மிடையே நிலைபெற்றுள்ளதா?

*சிந்திப்போம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. *ஜெரால்டு ஜெஸ்டின்* குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋
*தேனருவி மீடியா*
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.

பாடல்


 

இன்றைய இறைவாக்கு சிந்தனை மற்றும் வாசகங்கள் - 01.07.2023


 

Tamil Whatsapp Status song - இதயம் எழுப்பும் ஓசை கூட (01.07.2023)

 இதயம் எழுப்பும் ஓசை கூட (பாடலைக் காண இங்கே க்ளிக் செய்யவும்)

இன்றைய இறைசிந்தனை (01.07.2023) - நேர்மறை சிந்தனைகளை வளா்ப்போம்

 நோ்மறை சிந்தனைகளை வளா்ப்போம் - இன்றைய இறைசிந்தனை

Saturday, June 24, 2023

Whatsapp Status Song

இராகங்கள் இல்லாத

இன்றைய இறைசிந்தனை - 25/06/2023

இன்றைய இறை சிந்தனை | இறை ஒளியில் நிறைவாழ்வு - 25/06/2023

இன்றைய அருள்வாக்கு மற்றும் இறைசிந்தனை - 25/06/2023

பொதுக்காலம் 12- ஆம் ஞாயிறு மறையுரை - 25.06.2023.

 பொதுக்காலம் 12- ஆம் ஞாயிறு மறையுரை - 25.06.2023. 

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

   

முதல் வாசகம் - எரேமியா 20:10-13,

இரண்டாம் வாசகம் - உரோமையர் 5:12-15, 

நற்செய்தி வாசகம் - மத்தேயு  10:26-33.

------------------------------------------------------------          

அஞ்சாதீர்

------------------------------------------------------------   

♦️அறிஞர் ஒருவர் கூறுவார் மனிதரிடம் உள்ள பெரிய பாவம் பயமும், கவலையும் தான் என்று. யாரிடம் அதிகமாக பயம் குடி கொண்டிருக்கிறதோ அவர்கள் அதிகமாக கலக்கம், கவலை அடைவார்கள்.                                          

♦️இன்றைய வழிபாட்டில் இறைவன் அஞ்சாதே என்று எத்தகைய நிலையில் அழைப்பு விடுக்கிறார் என்று ஆராயும் போது,                                

♦️வாழ்வில் நெருக்கடிகள், இனி வாழவே முடியாது என்று நினைக்கக்கூடிய சூழ்நிலை, தொடர் தோல்விகள், சுமக்க முடியாத கடன் தொல்லை, அடுத்தவரின் அவமானப்பேச்சு, நோய்கள், அச்சுறுத்தல்கள் நெருங்கும் போது மனித மனங்கள் விசுவாச தளர்வுற்று, உள்ளம் சோர்வடைந்து போகும் போது இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பு அஞ்சாதே உன்னோடு நான் உண்டு. மத்தேயு 28:20 இதோ உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் என்பதுதான். இந்த உடனிருப்பை நாம் உணர்கிறோமா?

நிகழ்வு

2001 மே மாதம் 17-ஆம் தியதி வியாழக்கிழமை அதிகாலை 3:30 மணிக்கு மணிப்பூரில் இறுதி ஊர்வலம் ஒன்று புறப்பட்டது. அவ்வூர்வலம் திம்மாப்பூர் பேராலயம் நோக்கி சென்றது.     மே மாதம் 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மணிப்பூரில் குருமாணவர்கள் இல்லத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் 27 குருமாணவர்களை பிணைக்கைதிகளாக வைத்து பணம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லையெனில் 27 குருமாணவர்களையும் கொன்று போடுவதாகக் கூறினர். இந்த 27 குருமாணவர்களையும் காப்பாற்றத் துடியாய் துடித்து அருட்தந்தை ரபேல் பள்ளிக்கரா, அருட்தந்தை அந்திரியாஸ் சிண்டே, அருட் சகோதரர் ஷினு ஜோசப் என்ற மூன்று பேரையும் தீவிரவாதிகள் கொன்றார்கள். இந்த மூன்று பேரின் இறுதி ஊர்வலம் தான் பேராலயம் நோக்கி சென்றது. இந்த மூவரும் மணிப்பூரின் மங்கா மணிகளாய், விடியலின் விருட்சமாய், விசுவாசத்திற்கு சான்றாய் மாறினார்கள்.

மூன்று ஆயர்கள், 200-க்கு மேற்பட்ட குருக்கள், 500-க்கு மேற்பட்ட அருட்சகோதரிகள், 1500-க்கு மேற்பட்ட மக்கள் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அதில் உரையாற்றிய ஆயர் "உறுதியில்லா எதிர்காலத்திற்காக உறுதியுள்ள நிகழ்காலத்தைச் சிதறடித்தார்கள்" ஆனால் அவர்கள் மூவரும் கோதுமை மணியாய் மடிந்தார்கள். அவர்களின் வாழ்வு மத்தேயு 10:28  "ஆன்மாவை கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும், உடலையும் நரகத்தில் அளிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" என்ற வார்த்தையில் நிலைத்தது. எனவே பயனளிக்கும் கோதுமை மணியானார்கள் துணிவுடன்.

இன்றைய முதல் வாசகத்தில், கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைவாக்கினர் எரேமியாவின் துணிச்சல் மிகு இறைவாக்கு பகுதி கொடுக்கப்பட்டுள்ளது.

பாபிலோனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் இனம் எகிப்தியரோடு கூட்டு சேர்ந்து பாபிலோனியரை எதிர்க்க திட்டம் தீட்டினர். இதனை விரும்பாத எரேமியா அதனைத் துணிவுடன் கண்டித்தார். அதோடு இஸ்ரயேல் அரசைத் தண்டிக்கும் சாட்டைப் போன்று பாபிலோனிய பேரரசு அமையும் என்றும் இறைவாக்குரைத்தார் துணிவோடு. எனவே இஸ்ரயேல் மக்கள் எரேமியாவுக்கு எதிரிகளாக மாறினார். யூதக்குருக்களும், யூத தலைவர்களும் எரேமியாவை சிறையில் அடைத்தனர். பாழ்கிணற்றில் தூக்கிப் போட்டனர். இறுதியில் அவர்களே எரேமியாவைக் கொன்றுப் போட்டனர் என்றும் கூறுவர். இவ்வேளை எரேமியா உள்ளத்தால் மிகுதியாக துயருற்றார். எரேமியா 18:18 "அவர்கள் வாருங்கள் எரேமியாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்வோம்" என்று அவருக்கு எதிராக குற்றம் சாட்டினர். மிகுந்த மனக்கலக்கமுற்ற எரேமியா ஆண்டவரை நோக்கி எரே  20: 7 "ஆண்டவரே நீர் என்னை ஏமாற்றி விட்டீர் நானும் ஏமாந்து போனேன்" என்று புலம்பிய போது ஆண்டவர் நம்பிக்கையூட்டித் திடப்படுத்துகிறார்.

எரேமியா 15 : 20 "நான் உன்னை அவர்கள் முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன். அவர்கள் உனக்கெதிராய் போராடுவார்கள், ஆனால் உன் மேல் வெற்றிகொள்ள மாட்டார்கள். ஏனெனில் உன்னை விடுவிக்கவும், காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன்" என்று நம்பிக்கையூட்டி, உறுதிப்படுத்தினார். எரேமியா அனுபவித்த துன்பங்கள், அவமானங்கள், புறக்கணிப்புகள், சூழ்ச்சிகள் எல்லாம் இயேசுவின் பாடுகளின் முன்னடையாளமாய் அமைந்தது.

இத்துன்பங்களின் மத்தியில் இறைவன் வலிமை மிகுந்த போர் வீரரைப் போல் தம்முடன் இருப்பதையும், வலியவர் எளியவரை துன்புறுத்துவதையும் விரும்ப மாட்டார் என்றும் உறுதியாய் நம்பினார். எனவே தான் எரே 20 :13 "அவர் வறியோரின் உயிரை தீயோரின் பிடியினின்று விடுவித்தார்" என்றுரைத்தார். இது எரேமியாவின் ஆழமான இறை நம்பிக்கையை வெளிப்படுத்துவதாய் அமைகிறது.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் உண்மைக்குச் சான்று பகரவே வந்தார். அதற்காக தன் உயிரையும் கொடுத்தார். தம் சீடர்களும் அந்த உண்மை நெறியில் நிலைபெற கற்பித்தார் ஆண்டவரின் சீடர்கள் எல்லாச் சூழலிலும் அஞ்சாது உண்மையை உரைத்திட வேண்டும் என்று விரும்பி அவர்களை அதற்காகவே பயிற்றுவித்தார்.

உண்மையை அஞ்சாமல் உரக்கச் சொன்னால் ஊறு விழைவிப்பவர்கட்கு உறுத்தும், அது சங்கடமாய் அவர்கட்கு மாறிப்போகும். ஆண்டவர் இயேசு தன்னையே முன்மாதிரியாகக் காட்டி, தன்னைப் பின்பற்றி வாழ அழைப்பு விடுத்தார்

ஆண்டவரை உறுதியாய் நம்புகிறவர்கள் எத்தகைய சூழலிலும் அஞ்சமாட்டார்கள். துணிவோடு கடவுளுக்குச் சான்று பகர்வார்கள். பழைய ஏற்பாட்டில்  2மக்கபேயர் நூலில் நாம் காண்கின்ற தாய் மற்றும் ஏழு பிள்ளைகள் அந்நிய தெய்வங்களுக்கு பணிவிடை செய்யவும், யூதநெறிகளை மீறவும் செய்யச் சொல்லியபோது அதைச் செய்யவில்லை என்றால் கொலை செய்யப்படுவார்கள் என்ற போதும் அந்த ஏழு சகோதரர்களுள் ஒருவர் 2மக்கபேயர் 7:2 "எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதை விட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்" என்று பதில் கூறினார். எனவே மன்னர் சீற்றம் கொண்டு, அவர் நாக்கைத் துண்டிக்கவும், குடுமித்தோலை கீறி எறியவும், கை கால்களை வெட்டவும் ஆணையிட்டான். இத்தகைய துன்பங்களின் மத்தியிலும் அவர்களின் எண்ணமெல்லாம், துன்புறுத்தல்களுக்கு அஞ்சாமல் உண்மைக் கடவுளை நேசிப்பதே. 2மக்கபேயர் 7:9 "நீ எங்களை இம்மை வாழ்வில் இருந்து அகற்றி விடுகிறாய், ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்" என்று துணிந்து விசுவாச சான்று பகந்தார்கள்.

இஸ்ரயேலர்களோடு பகைமை பாராட்டிய பெலிஸ்தியர்கள், அவர்களின் படையைக் தலைமையேற்று வழி நடத்திய கோலியாத். மிகப்பெரிய உருவத்தைக் கொண்ட அவன் இஸ்ரயேலர்களையும், யாவே கடவுளையும் பழித்து இகழ்ந்தான். இதைக் கண்ணுற்ற தாவீது ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து, கோலியாத்தைக் கண்டு அஞ்சாமல் அவனை எதிர்க்க விரைந்தான். 1சாமு 17:37 "என்னைச் சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்த பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்" என்று துணிந்து சென்றான். தாவீதை கண்ட பெலிஸ்தியன் ஏளனமாக பேசியபோது தாவீது 1 சாமு 17:45 "நீ வாளோடும் ஈட்டியோடும், எறிவேலோடும் என்னிடம் வருகிறாய். நானும் நீ இகழ்ந்த இஸ்ரேலின் படைத்திரள் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் தம் பெயரால் வருகிறேன்" என்று சொல்லி பெலிஸ்தியனை வீழ்த்தினார்.

இந்த நிகழ்வுகள் இரண்டு உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது

1. பிரச்சனைகள், துன்பங்கள், எதிர்ப்புகள் வரும்போது பதற்றமடையாமல் துணிந்து எதிர்கொள்ள வேண்டும்.

2. படைத்த பரம்பொருளை உறுதியாய் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதாகும். எனவேதான் சொன்னார் ஆன்மாவை கொல்ல இயலாதவர்கட்கு அஞ்ச வேண்டாம் என்று.

✝️நாம் வாழும் இந்த சமகாலத்தில் வாழ்ந்து பழங்குடி மக்கள் வாழ்வு பெற வளம்பெற 45 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து, பாசிச அரசால் பொய் குற்றம் சுமத்தி சிறையில் அடைத்து அவரின் நோய், வயது இவற்றை கூட பொருட்படுத்தாமல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய போதும் விசுவாச சாட்சியாய் மரித்த ஸ்டேன் சுவாமி இன்று நமக்கு ஒரு முன்மாதிரி.

✝️மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயர, அடிமை நிலை மாற மக்களுள் ஒருவராகி நின்று சமூகநீதிக்காய் உழைத்ததால் நிலக்கிழார்களின் பகைமைக்குள்ளாகிய போதிலும் துணிந்து இறையாட்சி மதிப்பீடுகளை சுமந்ததால் சமுந்தர்சிங் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட - ராணி மரியா நமக்கு ஒரு வரலாற்றுச் சான்று.

✝️அரசின் உயர் பதவியில் இருந்தாலும், உண்மைக்கானத் தேடலில் நானே வழியும், உண்மையும் வாழ்வும் என்ற அருள்நாதர் இயேசுவை தன் வாழ்வில் இரட்சகராக ஏற்றுக்கொண்டதால், பல்வேறு நெருக்கடிகள், துன்பங்கள், புறக்கணிப்புகளுக்கு உள்ளாகி, சித்திரவதைச் செய்யப்பட்டு காற்றாடி மலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட போதும், கடுகளவும் அச்சமின்றி துணிந்து விசுவாச சான்று பகர்ந்த மறைசாட்சி, புனித தேவசகாயம் நமக்கோர் எடுத்துக்காட்டு.

நாமும் நம் வாழ்வில் துன்பம், துக்கம், கவலை, கண்ணீர், பழிச்சொல், அவதூறு, ஏமாற்றம் வரும்போது துவண்டு விடாமல் ஆவியானவரால் முத்திரையிடப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து அஞ்சாமல் துணிந்து நம்பிக்கையில் பயணப்பட அருள் வேண்டுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.