Friday, August 4, 2023

ஆண்டின் பொதுக்காலம் 18 - ம் ஞாயிறு மறையுரை - 06.08.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 18- ஆம் வாரம் ஞாயிறு)

06.08.2023. 


தானியேல்  7 : 9-10, 13 -14,

2 பேதுரு 1: 16- 19,

மத்தேயு  17: 1 - 9.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


ஆண்டவரின் உருமாற்ற நிகழ்வு

இயேசு ஆண்டவரின் இறையனுபவத்தை வெளிப்படுத்திய முக்கிய நிகழ்வு ஆண்டவரின் உருமாற்ற நிகழ்வு.


♦️இயேசு தான் அனுபவித்த "அப்பா அனுபவம்" இயேசுவின் இலட்சியபணி வாழ்விற்கு ஆற்றல் வழங்கியது.

♦️இயேசுவின் உருமாற்ற நிகழ்வு - இயேசுவின் உயிர்ப்பை, மாட்சியை வெளிப்படுத்தும் ஒரு முன் நிகழ்வு.

♦️சிலுவைகள் இல்லாமல் சீடத்துவமும் இல்லை. சிலுவைகள் இல்லாமல் மீட்பும் இல்லை என்பதை உறுதியாய் புரிய வைத்த ஒரு தருணம்.

♦️துன்பமில்லாமல் வெற்றி இல்லை என்பதை இயேசு தன் வாழ்வால் முன்கூட்டியே புரிய வைத்த புனித செயல் உருமாற்றம்.

♦️உடைகளை மாற்றுவதால் நாம் உயர்ந்துவிடமாட்டோம் மாறாக உள்ள மாற்றமே நம்மை மக்கள் மனங்களில் உயர்த்திப் பிடிக்கும்.

♦️சீரிய, தெளிவான, தொலைநோக்குப் பார்வைகள் நம்மை - சமூகத்தை உருமாற்றும் சமூகத்தை வாழ்விக்கும்.

♦️சுயநலம் அறுத்து பொதுமை வாழ்வை வாழ்வாக்கிய சிலர் மக்கள் மனங்களில் வரலாறாய் ஏற்றம் பெற்றனர்.


நிகழ்வு : 25.07.2023 ஊடகச் செய்தி

இந்தியாவில் அதிக அளவிலான படுக்கை வசதிகளைக் கொண்ட

மருத்துவமனைகளில் முக்கியமானது, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, 2400 படுக்கை வசதிகளைக் கொண்டது. இங்கு இந்தக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டுவதற்கு

பெருந்தலைவர் காமராசர், முடிவெடுத்தார். திருநெல்வேலியில் அதற்குப் பொருத்தமான இடம் தேடுகிறார். பொருத்தமாய் ஒன்றும் அமையவில்லை. கர்மவீரர் காமராசரின் இந்த நல்ல

நோக்கத்தை அறிந்த காமராசரின் நண்பரும், திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா பெட்டைக்குளத்தைச் சார்ந்த திரு. காதர் மீரா ஷாகிப் அவர்கள் தனக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்

பொதுநலனுக்காக. அந்தப் பகுதியே இன்று நெல்லை ஹை கிரவுண்ட் என்று அழைக்கப்படுகிறது. அங்கு தான் திருநெல்வேலி அரசு மருத்துவக்

கல்லூரியும், மருத்துவமனையும் இயங்குகிறது. இன்று அந்த இடத்தின் மதிப்பு சுமார் 60,000 கோடி. மக்களுக்கு நன்மையான காரியத்திற்காக திட்டத்தை முன்னெடுத்த பெருந்தலைவர் காமராசரும், நிலத்தைத் தானம் செய்த திரு. காதர் மீரா ஷாகிப் அவர்களும் மக்கள் மனங்களிலும், வரலாற்றுப் பதிவுகளிலும் ஏற்றம் பெற்றார்கள். 


ஆண்டவரின் உருமாற்ற நிகழ்வு சீடர்களுக்கும், அவரை பின் தொடர்ந்தவர்களுக்கும் பலத் தெளிவுகளைக் கொடுத்தது. ஆண்டவர் இயேசு இறையாட்சிப் பணியை இலட்சியத் தெளிவோடு மக்களுக்கு புரிய வைத்து, மக்கள் மனங்களில் இறையாட்சி மதிப்பீடுகளை பதியவிட்டார்.

🟢விண்ணரசைப் பற்றிய பல உவமைகளைச் சொல்லி புரிய வைத்தார்.

🔴மக்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்து பரிவுக் கொண்டு

(i) அப்பங்களைப் பலுகச் செய்தார்.

(ii) கடல் மீது நடந்தார்.

(iii) கெனசரேத் பகுதியில் நோயாளிகளுக்கு நலம் வழங்கினார்.

இப்படி இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களால், புதுமைகளால் மக்களை விட, அழைக்கப்பட்ட சீடர்கள் ஆனந்தப்பட்டார்கள்.

🔵சீடர்களின் மனங்களில் மகிழ்ச்சியின் மத்தாப்புகள் வெடித்தபோது தன்னுடைய சாவை முதல் முதலாக அறிவித்தார்.

🟡ஆண்டவரின் புதுமைகளால் ஆனந்தக் கூத்தாடிய சீடர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் துன்பம், கொலை, உயிர்ப்பு போன்ற வார்த்தைகள் பேரதிற்ச்சியை,

மனச்சோர்வை, மனக்கலக்கத்தை வழங்கியது எனவே தான் பேதுரு.

மத். 16:22 "ஆண்டவரே இது வேண்டாம் இப்படி உமக்கு நடக்கக் கூடாது" என்றார் ஆண்டவர் பேதுருவை "என் கண்முன் நில்லாதே சாத்தானே" என்று கடிந்து கொள்கிறார். ஏனெனில் ஆண்டவரின் எண்ணங்களும், சீடர்களின் எண்ணங்களும்  வேறுவேறாய் அமைந்தது.

எசா. 55:8 "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" என்று புரிய வைக்கவே, ஆண்டவர் இயேசு தோற்றம் மாறினார். இந்த உருமாற்ற நிகழ்வில் பல உண்மைகள் பொதிந்துக் கிடக்கிறது.

🟣இயேசுவின் உருமாற்றத்தின் போது திருச்சட்டம் மற்றும் இறைவாக்கு  இவற்றின் அடையாளமாக மோசே மற்றும் எலியா தோன்றி உரையாடுவதைக் பார்க்கின்றோம்.

வி.பா. 20:1-17, மற்றும் இச. 5:1-21 ஆகிய பகுதிகளில் மோசே ஆண்டவரிடமிருந்து பெற்றுக் கொண்ட கட்டளைகளை மக்களுக்கு வழங்கிய போது.

வி.ப. 20:1 "கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே" என்றுச் சொல்லித்தான் 10 கற்பனைகளை விளக்குகிறார். ஆகவே மோசே திருச்சட்டங்களை நினைவுக் கூர்கிறார். 1அரசர் 1 8 - ஆம் அதிகாரத்தில் எலியாவுக்கும், பாகாலின்

பொய்வாக்கினருக்குமான போட்டியில் கர்மேல் மலையில் இறைவாக்கினர் எலியா கடவுளின் துணையோடு தனி ஒரு மனிதனாக பாகாலின் 450 பொய் வாக்கினர்களை தோற்கடித்து யாவே கடவுளை உண்மைக் கடவுள் என்பதை நீருபணமாக்கினார். 1அரசர் 18:38 - "ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலிகளையும், விறகுக் கட்டைகளையும் கற்களையும் மணலையும் சுட்டெரித்தது" 1அரசர் 18:39 - "மக்கள் அனைவரும் முகங்குப்புற விழுந்து ஆண்டவரே கடவுள் ஆண்டவரே கடவுள் என்றனர்"

உண்மைக்கடவுள் "யாவே" என்பதை தன் நம்பிக்கையால் நிலை நிறுத்தி பகைவரையும் பணிய வைத்ததால் இறைவாக்கினர் எலியா, இறைவாக்கின் அடையாளமானர்.


🟣எலியாவும், மோசேயும் தோன்றியது ஆண்டவர் கிறிஸ்துவில் திருசட்டமும் இறைவாக்கும் முழுமை பெறுகிறது என்பதை உணர்த்துகிறது.

மத.; 5:17 "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் என்ன வேண்டாம் அவற்றை அழிப்பதற்கல்ல நிறைவேற்றுவதற்கே வந்தேன்" என்பதன் மூலம் எலியாவும், மோசேயும் தோன்றியது இறைவாக்கும், திருச்சட்டம் கிறிஸ்துவில் முழுமை பெற்றதை உணர்த்துகிறது.

🟡இயேசு தன் பாடு, மரணம், உயிர்ப்பு இவற்றைச் சொன்னபோது உள்ளம் கலங்கிய சீடர்களுக்கு, ஏற்பட்ட மனச்சோர்வு, கலக்கம் இதனால் ஏற்பட்ட பணிச்சோர்வு இவற்றை மாற்றி புதிய ஆற்றலுடன் பணியாற்றவே இந்த உருமாற்ற நிகழ்வு. பாடுகளை வேண்டாம் என்ற பேதுரு, மலையில் பெற்ற இறையனுபவத்தால் இங்கே இருப்பது நல்லது என்ற மனநிலைக்குக் கடந்து வந்தார். எனவே துன்பங்கள் வழிதான் மாட்சிமை உண்டு என்பதை புரிய வைத்த ஒரு அனுபவமாகப் பார்க்கப்படுகிறது.

🔵ஆண்டவரின் உருமாற்ற நிகழ்வின் போது இயேசுவின் ஆடைகள் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. இவ்வாறு ஒளிவீசிய ஆடைகளும், பாடுகளுக்குப் பின் அடையப்போகும் மாட்சியை விளக்குவதாய் அமைந்தது.

🔴ஆண்டவரின் உருமாற்ற நிகழ்வு, இயேசு தன்னை தந்தை கடவுளுக்கு முழுமையாக கைளித்ததன் ஒரு அடையாளம். தந்தையின் விருப்பப்படி, பாடு, மரணம், உயிர்ப்பு எல்லாவற்றையும் வாழ்வாக்க நான் என்னைக் கையளிக்கின்றேன் என்ற ஒரு ஒப்புதல் வழங்கிய இடம். எனவே தான் தந்தை இறைவன்.

மத் 17:5 "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன். இவருக்குச் செவி சாயுங்கள்" என்று உள்ளம் மகிழ்ந்து பெருமைப்படுத்தினார்.

🟢ஆண்டவரின் உருமாற்ற நிகழ்வில் தோன்றிய மோசே இஸ்ரயேல் மக்களை வாழ்வின் நாட்டிற்கு வழிநடத்திய போது "மோவாபு" நாட்டில் இறந்தார். அதற்கு முன்பாக ஆண்டவர் மோசேயிடம்.


இச. 34:4 "ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்ணால் நீ பார்க்கும்படி செய்து விட்டேன்ஆனால் நீ அங்கு போக மாட்டாய்" என்று மொழிந்தார். மோவாவில் இறந்த மோசே, ஆண்டவர் கிறிஸ்து வழி வாக்களிக்கப்பட்ட நாட்டை அடைந்தார் அல்லது பார்த்தார் என்று பொருள் கொள்ளலாம்.

🟢உருமாற்ற நிகழ்வு நமக்கு விடுக்கும் அழைப்பு, இயேசு தந்தை கடவுளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, தந்தையின் திட்டத்தை நிறைவேற்றியது போல், நாமும் அவரின் அன்பு கட்டளைகளை வாழ்வாக்கி நம்மைக் குறித்து ஆண்டவர்

பூரிப்படைய செய்ய வேண்டிய கடமை நமக்குண்டு என்பதையும் இவ்விழா உணர்த்துகிறது.

🟣இன்று வழிபாடு நமக்கு உணர்த்துவது கூடாரம் கட்டி கொண்டாடுவது அல்ல வாழ்வு மாறாக, மலையில் இருந்து இறங்கி மக்கள் வாழ்வியல் நிலைகளோடு இயைந்து அழுவாரோடு அழுது, மகிழ்வாரோடு மகிழ்ந்து சாட்சிய வாழ்வு வாழ அழைக்கிறது.

நம் வாழ்வில் இயேசுவின் பணி வாழ்வில் அவரின் மலை அனுபவமும் (அப்பா அனுபவம்) செப அனுபவமும் அடிநாதமாய் அமைந்தது. அது போல நாமும் கிறிஸ்துவில் ஆழமாய் வேருன்றியிருக்கிறோமா?





🟢புகழ்ச்சியில் புழகாங்கிதம் அடைந்து முடங்கிப் போகாமல் மக்களின் அன்றாட வாழ்வியல் நிலைகளோடு கலந்து பணி செய்கிறோமா?

🔴பணிவாழ்வில் வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ளக் கூடிய மனபக்குவம் பெற அழைக்கப்படுகின்றோம். ஏனெனில் ஆண்டவர் இயேசு மலையிலே தங்காமல் மக்களோடு மக்களாய் கீழே இறங்கியதைப் போல் எதார்த்தத்தை வாழ்வாக்க அழைக்கப்படுகின்றோம்.

🟣சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு சமூகத்திற்காய் இழக்கும் மனத்துணிவு அல்லது நல்ல மனம் கொண்டிருக்கிறோனா?

🟣ஆடம்பர வாழ்வால் அல்ல எளிய அன்புப்பணிகளால் எளிய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெறும் நிலை பெறலே ஆண்டவரின் உருமாற்றம் உணர்த்தும் பொருளாகும்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

1 comment:

  1. நல்ல அவசியமான சிந்தனை...தேனருவிக்கும், அருட்பணி. ஜெரால்டு அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete