Saturday, September 30, 2023
ஆண்டின் பொதுக்காலம் 26 - ம் ஞாயிறு மறையுரை -01.10..2023.
இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
(பொதுக்காலம் 26- ஆம் வாரம் ஞாயிறு) 01.10.2023.
எசேக்கியேல் 18 : 25 - 28,
பிலிப்பியர் 2: 1- 11,
மத்தேயு 21: 28 - 32.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
முரண்களை முறியடிப்போம்
♦️அழகிய வாழ்வை அர்த்தமிழக்கச் செய்வது, முரண்பாடான செயல்பாடுகளும், பேச்சுக்களும்.
♦️நல்லவர்கள் போல் காட்டிக்கொள்ளும் மனிதர்களில் நாற்றமடிக்கும் தீமைகள் புதைந்து கிடப்பது வாழ்வியல் முரண்கள்.
♦️தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற அரசியல்வாதிகள் அதன்படி நடப்பதில்லை.
♦️செருப்பாய் தேய்ந்து உழைப்போம் என்பவர்களுக்கு, மக்களின் தேவையின் குரல்கள் செவிகளில் ஒலிப்பதில்லை. ஆனால் இன்றைய வழிபாடு சுயம் அறிந்து, தன்னிலை உணர்ந்து வாழ்வில் முரண்பாடுகளை முறியடித்து நேர்மையோடும், உண்மையோடும் வாழ அழைக்கிறது.
நிகழ்வு
அன்பான அழகான குடும்பம். கணவன் மனைவி ஒரு மகன் என்று மகிழ்வோடு வாழ்ந்தனர். அவர்கள் வாழ்வின் நலனுக்காக கார் ஒன்றை வாங்கினர். குடும்பத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பானது. குடும்பத் தலைவர் மிக கவனமாக அந்த வாகனத்தை ஓட்டிச்செல்வார். சிறு சிராய்ப்புகள் வராதபடி பார்த்துக் கொண்டார். கார் வாங்கிய பின் ஒரு நாள் தன் மனைவி, மகனோடு நேரத்தைச் செலவிட்டபோது தன் மகனை அணைத்துக் கொண்டு தந்தைச் சொன்னார். மகனே! உன்னை நான் அதிகம் அன்புச் செய்கிறேன். உனக்காகத்தான் இந்தக் கார் என்றார். 1- ஆம் வகுப்பு படித்த அந்தக் குழந்தையின் உள்ளத்தில் மகிழ்ச்சியின் மத்தாப்புகள் பூத்தது.
ஒரு நாள் தந்தை அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். சிறுவன் தன் தாயோடு வீட்டில் இருந்தான். தந்தை சொன்ன அன்பு மொழிகள், அவன் நினைவுக்கு வந்தது தந்தைக்கு நன்றி சொல்ல நினைத்து, அக்குழந்தை ஒரு சிறு கல்லை எடுத்து காரின் கதவில் thank you Daddy என்று எழுதினான், அப்படி காரில் எழுதக்கூடாது என்று அக்குழந்தைக்கு தெரியாது.
மாலை தந்தை வந்தவுடன் குழந்தை தான் எழுதியதை, தன்னை அதிகமாய் அன்பு செய்கிறேன், எனக்காகத்தான் இந்த கார் வாங்கினேன் என்ற தந்தையிடம் காட்டியது. காரில் சிராய்வுகளைக் கண்ட தந்தை கோபத்தின் உச்சிக்கு சென்றார். அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து அக்குழந்தையின் விரல்களைப் பிடித்து வைத்து ஓங்கி அடித்தான். அக்குழந்தை வலியால் துடித்தது. இரத்தம் கசிந்தது, சற்று நேரத்தில் குழந்தை வலியிலேயே மயங்கி போனது.
குழந்தையை காரில் ஏற்றிக்கொண்டு தந்தையும், தாயும் மருத்துவமனைக்கு போனார்கள். மருத்துவர் "XRay" எடுக்கச் சொன்னார் எடுத்தார்கள். மருத்துவர் பெற்றோரை அழைத்துச் சொன்னார், குழந்தையின் இரு விரல் நன்றாய் சிதைந்து போயிற்று உடனடியாக விரல்களை நீக்க வேண்டுமென்று, துடித்துப் போனான், அலறினான், அழுதான், மருத்துவம் செய்யுங்கள். எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை விரல்களை வெட்ட வேண்டாம் என்று, மருத்துவச் சொன்னார் விரல்களை எடுக்கவில்லை எனில் உயிருக்கு ஆபத்து என்று, குழந்தையின் இரு விரல்கள் அகற்றப்பட்டது. சோகத்தோடு குழந்தை வரைந்ததை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் தந்தை. அப்போதுதான் அவன் கண்ணில் அக்குழந்தை எழுதியது பட்டது. Thank you Daddy என்று நன்றி சொன்ன குழந்தையின் வாழ்வில் பெரிய வடுவை ஏற்படுத்தி விட்டேனே என்று அழுதான். பெயிண்ட் அடித்தால் இந்த இந்த சிராய்ப்பு மாறிப்போகும். ஆனால் என் குழந்தையின் விரல் மீண்டும் வராதே என்று புலம்பினான்.
🟣பொருள் மைய உலகில் மனித உறவுகள் அர்த்தமிழக்கிறது.
🟣சுயம் அறிந்து, தன்னிலை உணராத போது நாம் வாழ்வில் முரண்பட்டுக் கிடக்கிறோம் இந்த தந்தையைப் போல்.
குழந்தைதான் என் உயிர், குழந்தையை அன்பு செய்கிறேன் என்றவன் ஆத்திரத்தில் அறிவிழந்தது அவனது பலவீனம். பல நேரங்களில் நாம் இவ்வாறு தான் முரண்பட்டு நிற்கின்றோம்.
இன்றைய நற்செய்தியில் தந்தையிடம் திராட்சைத் தோட்டத்திற்கு போகிறேன் என்றவர் போகவில்லை. போகமாட்டேன் என்றவர் போகிறார். தன்னிலை உணர்ந்து, தேவை அறிந்து மாற்றம் பெற வழிபாடு அழைக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில் தீயவர்கள், தீமையின் பாதையில் நடந்து அழிவுறுவதை கடவுள் ஒரு போதும் விரும்புவதில்லை. தீயவர்களும் தன் தவற்றை உணர்ந்து நல்ல பாதையில் நடக்கவே விரும்புகிறார். அப்போது அவர்கள் தங்களைக் காத்துக் கொள்கிறார்கள்.
எசே . 18:27 "பொல்லார் தாம் செய்த பொல்லாப்பின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைபிடித்தால் தம் உயிரைக் அவர்கள் காத்துக் கொள்வார்" என்று இறைவாக்கினர் எச்சரிகின்றார்.
மத்தேயு நற்செய்தி 26 ஆம் அதிகாரத்தில் மூன்று முரண்பட்ட நிகழ்வுகளை மத்தேயு நமக்கு விளக்குகின்றார்.
1. மத்தேயு 26: 34 "இன்றிரவில் சேவல் கூவும் முன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்று எச்சரித்தார். பேதுரு மறுதலித்தார். மனம் வருந்தினார்.
2. மத்தேயு 26:40 "ஒரு மணி நேரம் கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா, மத்தேயு 26:41 உங்கள் மனம் ஆர்வமுடையதுதான் ஆனால் உடல் வலுவற்றது" என்று கூறி சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபிக்க அழைக்கின்றார்.
3. மத்தேயு 26:47 - 50 ஆண்டவர் இயேசு சீடர்களோடு பந்தியில் அமர்ந்த போது தம் சீடர்களிடம் என்னை உங்களில் ஒருவன் காட்டிக் கொடுப்பான் என்றார், எல்லோரும் ஆதங்கப்பட்டனர். நானோ, நானோ என்று அங்கலாய்தனர். அவரைக் காட்டி கொடுத்த யூதாசும் ரவி நானோ என்று அவரிடம் கேட்டான். இயேசு அவரிடம் நீயே சொல்லிவிட்டாய் என்று சொல்லி அவனின் செயலை முன் உணர்த்தினார். ஆனால் தன்னிலை மறந்து, பொருளுக்கு அடிமையான யூதாசு படை வீரர்களிடம் நான் யாரை முத்தமிடுகிறேனோ அவரை பிடித்துக் கொள்ளுங்கள் என்று அடையாளப்படுத்தியிருந்தான். அதேபோன்று ஆண்டவரிடம் வந்து மத்தேயு 26:49 "ரபி வாழ்க எனக்கூறி கொண்டே அவரை முத்தமிட்டான்" அன்பின் அடையாளமான முத்தம் துரோகமாக மாறிப்போனது வாழ்க! என்ற வாழ்த்தொலி ஒழிக என்று அழிவினை ஓங்கி ஒலித்தது.
இவை நமக்கு உணர்த்தும் செய்தி, மனிதர் நாம் நம்மிலே முரண்பாடுகளோடு வாழ்கிறோம். எனவே தான் தூய பவுல் உரோமையர் 7:15 "நான் செய்வது என்னவென்று எனக்கேத் தெரியவில்லை எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை, எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்" என்று தன் மனப்போராட்டத்தை வெளிப்படுத்தினார்.
இன்றைய நற்செய்தி தந்தைக்கும் இருமகன்களுக்குமான உரையாடல், திராட்சைத் தோட்டத்தில் பணியாற்ற இருவருக்கும் அழைப்பு கொடுக்கிறார். மூத்த மகனிடம் அழைப்பு விடுத்த போது, அவன் நான் போக விரும்பவில்லை என்றான். ஆனால் மனம் மாறிச் சென்றான். இளைய மகனிடம் அழைப்பு விடுத்தார். உடனே போகிறேன் என்றான் ஆனால் போகவில்லை.
இந்த நிகழ்வு இரு உண்மைகளை உணர்த்துகிறது.
1) நாம் கொடுத்த வாக்குறுதியை மீறுவது, நான் போகிறேன் என்று தந்தையிடம் கூறிவிட்டு, உதாசீனப்படுத்துவது, இது பிரமாணிக்கம் தவறுவது ஆகும்.
(எகா.) திருமண நிகழ்வில் கணவன் மனைவி கொடுத்த வாக்குறுதி மீறப்படும் போது, இளைய மகனின் மனநிலையில் நாம் செயல்படுகின்றோம்.
பிள்ளைகள் பெற்றோரின் அறிவுரைகள், வழிநடத்துதல்களுக்கு எதிராக செயல் புரியும்போது, இளைய மகனின் வழியைத்தான் தேர்ந்தெடுக்கின்றோம். எனவே ஆண்டவர் இயேசு மத்தேயு 5 : 37 "நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள்" என்று தீர்க்கமாய் அறிவுறுத்தினார்.
2) கடவுளின் அன்பு உறவில் நாம் நிலைக்க வேண்டும் எனில் அவரின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டும் மூத்த மகன் மேலோட்டமாய் முடியாது என்றாலும் பிறகு தன் எண்ணத்தை மாற்றி தந்தை விருப்பத்தை நிறைவேற்றினார்.
ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு உண்மையான, ஆழமான, எதார்த்தமான உறவு எது என்பதை உணர்த்திய போது மத்தேயு 12 : 50 "விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார்" என்று கூறினார்.
லூக்கா 1:38 "நான் ஆண்டவரின் அடிமை உன் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்ற அன்னை மரியா தந்தை கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றியவர். அவரைப் போல கடவுள் நம்மையும் அழைக்கின்றார். இன்றையச் சூழலில் இறைவன் நம்மை
🟡நீதியை நிலைநாட்ட
🔵உண்மையை உறுதியாய் சொல்ல
🟢நிபந்தனையற்ற அன்பு செய்ய
🔴இயற்கையை பாதுகாக்க
அழைக்கிறார். நம் பதில் என்ன, முரண்களைத் தவிர்த்து, ஆம் என்று பதில் கொடுப்போம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
Friday, September 29, 2023
Thursday, September 28, 2023
Wednesday, September 27, 2023
Tuesday, September 26, 2023
Monday, September 25, 2023
Sunday, September 24, 2023
Saturday, September 23, 2023
Friday, September 22, 2023
ஆண்டின் பொதுக்காலம் 25 - ம் ஞாயிறு மறையுரை -24.09.2023.
இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
(பொதுக்காலம் 25- ஆம் வாரம் ஞாயிறு)
24.09.2023.
எசாயா 55 :6 -9,
பிலிப்பியர் 1: 20-24, 27
மத்தேயு 20: 1 - 16.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
கடவுள் - நீதியும் இரக்கமும் உடையவர்
♦️நீதி, இரக்கம், மன்னிப்பு நம் வாழ்வில் இணையும் போது நாம் கடவுளின் முகங்களாக புலப்படுகிறோம்
♦️கடவுள் பல்வேறு அருட்கொடைகளால் நம்மை நிரப்பியிருந்தும் நாம் ஏழை, எளியவர், தேவையில் இருப்போர்க்கு இரக்கம் காட்ட தயங்குகிறோம்.
♦️நாம் வாழும் சமகாலத்தில் வாழும் ஒருவர் தேவையில் இருக்கிறார் எனத் தெரிந்தும் அவருக்கு உதவ முடியாதப்படி உள்ளங்கள் இறுகிப்போவது ஏன்?
♦️அவரவர்க்கு உரியதை அவரவர்க்கு வழங்குவது நீதி, அதை அவர் கேட்டு தான் கொடுக்க வேண்டும் என்பதெல்ல மாறாக, நாம் உணர்ந்து உரிய நேரத்தில் வழங்கும் போது நாம் கடவுளின் முகமாய் மாறுகிறோம்.
♦️இன்றைய நற்செய்தி சுட்டும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் நீதியும், பரிவும், இரக்கமும் உள்ளவராக விளங்குகிறார்.
♦️நாமும் இத்தகைய மனநிலையைப் பெற்று வாழத்தான் வழிபாடு அழைக்கிறது.
நிகழ்வு:
அலுவலகம் செல்லும் போது காரில் இருந்து இறங்கி, ரோட்டோரம் அமர்ந்து காலணிகளுக்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்த இளைஞர் அருகில் வந்தான் அருள். தன்னுடைய காலணிகளுக்கு பாலிஷ் போட வேண்டும் என்றான். பாலிஷ் போடும் இளைஞனுக்கு 20 வயதிருக்கும். அவனிடம் அருள் கேட்டான் இளைஞனாக இருக்கிறாயே! இதைவிட நன்கு உழைத்து அதிக வருமானம் வரும் வேலையை ஏன் நீ செய்யக்கூடாது என்று கேட்டான். உடனே அந்த இளைஞன் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு, தன் காலை மூடியிருந்த துணியை விலக்கினான். அப்போதுதான் அவன் கால் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அருள் உள்ளத்தால் அதிர்ந்து போனான் அவனுடன் அன்பொழுக பேசினான். அவனை பற்றிய விவரத்தை அறிந்தான். அவன் பெயர் ராம். இவனது உழைப்பை நம்பி ஓர் அக்கா, அம்மா தம்பி வாழ்ந்து வருகின்றனர். அக்காளை திருமணம் செய்து கொடுத்த கடன் இன்னும் இருக்கிறது என்றான்.
அருள் தன் நண்பர் வழியாக ஜெய்ப்பூரில் தயாரிக்கப்படும் செயற்கை கால் கிடைப்பதற்கான ஏற்பாடு செய்தான். ராமுவின் கால் அளவு அளக்கப்பட்டு, மிகக் குறைந்த நாட்களில், செயற்கை கால் வரவழைக்கப்பட்டு, மிக அவசரமாக, ராமுவிற்கு செயற்கை கால் பொருத்தும் பணியை அருள் தன் நண்பர் வழியாக செய்து முடித்தான். இந்நிகழ்வு சில வினாக்களை நம் முன் வைக்கிறது.
1. பொருள் மயமாகி போன உலகில் பிறரின் தேவைகளை உணரும் ஆற்றல் நம்மிடம் உண்டா?
2. அருள் என்ற இளைஞன் இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்?
3. நம்மைக் கடந்து பிறருக்கான உணர்வுபூர்வமாக நேரம் செலவிட முன் வருவோமா?
இன்றைய வழிபாடு, பிறருடைய தேவையை உளப்பூர்வமாக உணர்ந்து, அவர்கள் கேட்காமலே, உரிய நேரத்தில் நாம் செய்தோம் எனில் அது நீதியாய், இரக்கமாய் பார்க்கப்படுகிறது.
தோட்ட உரிமையாளரின் செயல் உலகத்தார் பார்வையில் அநீதியாய் தெரிந்தாலும் கடவுளின் பார்வையில் அது நீதியாய் பட்டது. எனவேதான் ஆண்டவர் எசாயா 55 :8 "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" என்றார்.
இன்றைய முதல் வாசகம், பாபிலோனில் அடிமை வாழ்வு வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள், புலம்பி அழுத போது, இஸ்ரயேல் இனத்தை இறைவன் காப்பார், மீட்பார் என்ற ஆறுதல் மொழிகளை எசாயா வழங்குகிறார். ஏனெனில் கடவுள் மக்களோடு நெருங்கி, மக்கள் உணர்வுகளோடு வாழ்கிறார். இணைச்சட்டம் 4 : 7 "நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகி ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?" என்ற இறைவார்த்தை வழி கடவுளின் இரக்கத்தை, உடனிருப்பை நாம் உணரலாம்.
மன்னிக்கும் மாபரன்:-
இஸ்ரயேல் மக்கள் எப்போதெல்லாம் கடவுளை விட்டு விலகி சென்றார்களோ, அப்போது அவர்களை பிற நாட்டிற்கு அடிமையாக்கினார். (எகா: எகிப்து, பாபிலோன், அசீரியா, உரோமை) அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் நாளடைவில் தன்னிலை மறந்து போயினர் அதனால்
1. வாழ்வு தரும் நீரூற்றாம் ஒரே கடவுளை மறந்தனர்.
2. கடவுள் இஸ்ரயேல் மக்களோடு செய்த உடன்படிக்கையை மறந்தனர்.
3. சிலை வழிபாட்டுக்குட்பட்டனர்.
4. படைப்பு பொருட்களை, படைத்த கடவுள் இவர்தான் என்று வணங்கினார்.
5. ஒழுக்க கேடான வாழ்வு வாழ்ந்தனர்.
இந்நிலையில் இறைவாக்கினர் எசாயாவின் குரல் இடியென ஒலித்தது. ஆண்டவரின் தண்டனைக்கு நீங்கள் ஆளாவீர்கள் என்றார். எசாயா 55:7 "கொடியவர் தம் வழிமுறைகளையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டு விடுவார்களாக" என்று கண்டிப்புடனும், உரிமையுடனும் எசாயா கேட்டுக்கொண்டார். அதே நேரம் ஆண்டவரின் அன்பையும், மன்னிப்பையும் விளக்கினார் ஆண்டவரிடம் திரும்பி வந்தால் எசாயா 55:7 "அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார். அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும், ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்" என்று கடவுளின் மன்னிக்கும் அன்பை எடுத்துரைத்தார். திபா. 86.15 "என் தலைவரே நீரோ இரக்கம் மிகு இறைவன், அருள்மிகுந்தவர், விரைவில் சினமுறாதவர், பேரன்பும், உண்மையும் பெரிதும் கொண்டவர்" என்று தாவீது ஆண்டவரின் அன்பையும் இரக்கத்தையும் விளக்குகிறார்.
கடவுள் தம் எண்ணங்களுக்கு ஒத்துப் போகிறவர்களை தன் கருவியாக பயன்படுத்துவார் என்பது, புற இனத்தாராகிய சீருஸ் வழியாக இஸ்ரயேல் மக்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அழைத்து வந்தார். இதன் வழி கடவுளின் எண்ணங்கள் நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்த்தி, கடவுளின் மன்னிப்பை, வழி நடத்துதலை, பராமரிப்பை வழிபாடு நமக்கு உணர்த்துகிறது.
இன்றைய நற்செய்தி கடவுளின் பேரிரக்கத்தை உணர்த்துகிறது. நிலைக்கிழார் தன் திராட்சைத் தோட்டத்தில் 1 நாள் கூலி 1தெனாரியம் பேசி விடியற்காலையில் பணியாளர்களை அனுப்புகிறார். பின் 9 மணி, 12 மணி பிற்பகல் 3 மணி இறுதியாக மாலை 5 மணி என ஐந்து நேரங்களில் பணியாளர்களை அனுப்புகிறார். மாலை ஒரு மணி நேரம் உழைத்தவனுக்கும் 1 தெனாரியம் வழங்குகிறார். எனவே விடியற்காலையில் வந்தவன் தான் 1 தெனாரியம் கூலி பேசியதை மறந்து, தனக்கு அதிகமாய் கிடைக்கும் என எண்ணினான். தான் நினைத்தபடி நடக்காத போது புலம்புகிறான்.
சாதாரண நிலையில் ஒருவர் உழைத்த நேரத்தின் அடிப்படையில் நிலக்கிழார் செய்தது தவறாகத் தெரியலாம். ஆனால் நிலக்கிழார் நீதியும், இரக்கமும் உள்ளவர்.
1. விடியற்காலையில் திராட்சை தோட்டத்திற்கு வந்தவரிடம் 1 தெனாரியம் கூலி பேசப்பட்டப் படி கூலி வழங்கினார்.
2. நிலக்கிழாருடைய செல்வத்தை அவர் விரும்பும் நபருக்கு பகிர்ந்து கொடுப்பது அவரது உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது.
3. நாம் மேலோட்டமாக பார்க்கின்றோம். நிலக்கிழார் அவரின் தேவைக்கு ஏற்ப கூலி வழங்கினார்.
1 சாமு 16:7 "மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பது இல்லை மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்" என்பதற்கு ஏற்றார் போல் கடைசியாய் வந்தவரின், உள்ளத்து வலிகள், அவரின் குடும்பச் சூழல், தேவை அறிந்து உதவினார். இது கடவுளின் பேரன்பை உணர்த்தி நிற்கிறது.
🟢மற்றவருக்குத் தன்னை விடத் குறைவாக கிடைத்தால் போதும் என்ற குறுகிய மனம்.
🔵நான் முதலில் வந்தவன் எனவே நான் முதன்மையானவன் என்ற சுயநலம்.
🟣உரிமையாளரின் செல்வத்தைப் பங்கிடுவது அவரின் உரிமை என்பதை உணர முடியாத, ஏற்க முடியாத, இறுகிய மனம்.
🟡இவற்றைக் கடந்து தான் நிலக்கிழாருடைய செயல், கடவுளின் பேரிரக்கமாக பார்க்கப்படுகிறது.
நாம் யாராக இருக்கிறோம்:
🔴குறுகிய மனதோடு பிறரைக் குறித்து அக்கறையின்றி முறையிட்ட மனிதனா?
🟡தேவை உணர்ந்து கூலி கொடுத்த நிலக்கிழாரா?
தன்னிடம் சுயநலத்தோடு முறையிட்டப் பணியாளரையும் பண்போடு "நண்பா" என்று அழைத்தது, ஆண்டவர் இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த யூதாஸை "தோழா" என்று இயேசு கனிவோடு அழைப்பதை நினைவூட்டுகிறது. (மத் 26:49 "தோழா எதற்காக வந்தாய்")
இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு
🟢கடவுளுக்குப் பிரமாணிக்கத்தோடு வாழ்கிறேனா? இல்லை இஸ்ரயேலரைப் போல் புறக்கணித்து வாழ்கிறேனா?
🟣கடவுளின் பேரிரக்கத்தையும், மன்னிப்பையும் உணர்ந்து திரும்பி வாழ முயல்கிறேனா?
🔵நமக்கு எதிராய் செயல்படுகிறவர்களையும் தோழமையோடு மாண்போடு நடத்தும் பண்பட்ட மனநிலை உடையவராய் இருக்கிறோமா?
🟡தேவையில் இருப்பவரை இனம் காணும் பரிவுள்ளம் நம்மிடை உண்டா?
🟣தேவைக்கு ஏற்ப உதவுதலே நீதி என்பதை ஏற்கும், வழங்கும் மனபக்குவம் உண்டா?
சிந்திப்போம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*