Monday, April 29, 2024
Sunday, April 28, 2024
Friday, April 26, 2024
பாஸ்கா 5- ஆம் ஞாயிறு மறையுரை -28.04.2024.
👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
பாஸ்கா 5-ஆம் ஞாயிறு
28.04.2024
திபணி. 9: 26 - 31,
1 யோவான் 3:18 - 24,
யோவான் 15: 1- 8.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
இணைந்து கனி தருவோம்
🟢"பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்
பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர்" ஆலய திருஇசைப்பாடல் இது.
🟡திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட நாம், நம் வாழ்வில் சான்று பகர அழைக்கப்படுகின்றோம்.
சான்று என்பது
♦️சாட்சிய வாழ்வு
♦️பயனுள்ள வாழ்வு
♦️கனி தரும் வாழ்வு
🔵கிறிஸ்தவ விழுமியங்கள் கனிகளாய் வெளிப்பட வேண்டும்
🟣நம் வாழ்வின் ஒவ்வொரு செயலும் கிறிஸ்துவைப் பிரதிபலிப்பதாய் அமைதல் வேண்டும்.
🔴அன்புப் பணிகளால், இரக்கச் செயல்களால், நல்வாழ்வு பணிகளால் மானுட நேய செயல்களால் நல்ல கனிக் கொடுப்போம்.
நிகழ்வு
கேரளா மாநிலம், பால காட்டில் உள்ள குடும்பம் சரங்மேனன், அதிதிநாயர். இவர்கள் பணிநிமித்தம் மும்பையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தை அதன் பெயர் நிர்வான்.
15 மாத குழந்தை நிர்வான் 2023 ஜனவரியில் நோயற்றது. மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் குழந்தையை மருத்துவச் சோதனைச் செய்த மருத்துவர்கள், இக்குழந்தை SMA (Spinal Muscular Atrophy) அதாவது முதுகுத் தண்டுவட தசை செயலிழப்பு என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இது மரபணு சார்ந்த மிக அரிய கொடிய நோய். குழந்தைக்கான மருத்துவச்செலவு 17.5 கோடிக்கு மேலாகும் என்ற நிலையில், செய்வதறியாது திகைத்த பெற்றோர் முகநூல் வழி கிரவுட்பண்டிங் (Crowdfunding) என்ற குழு வழியாக விண்ணப்பித்தனர். 19.02 2023 வரை கிட்டத்தட்ட 72 ஆயிரம் மக்கள் இணைந்து 5.42 கோடி சேர்த்தனர். இச்செய்தியை நிர்வானின் பெற்றோர் தங்கள் முகநூலில் பகிர்ந்தனர். இதனைப் பார்த்த ஒரு நல்ல மனிதர், பெயர், ஊர், தொழில், தான் யார் என்பதை இதுவரை வெளியே சொல்லாத ஒருவர் 1.4 மில்லியன் அதாவது 11 கோடியை தானமாக ஈந்து குழந்தை நிர்வான் உயிர் பிழைக்க உதவி இருக்கிறார். இன்று வரை அவர் யார் என எவரும் அறியவில்லை. இணைந்த முயற்சியும், நல்ல உள்ளமும் வாழ்வு என்னும் கனியை சுவைக்க வைத்தது. இந்த இணைந்த நல்ல முயற்சிக்கு நிர்வானின் பெற்றோர் தங்கள் கண்ணீரை நன்றிக்கடனாய் உள்ளம் நெகிழ்ந்து தெரிவித்தனர்.
தனி மனிதர்கள் ஓர் இயக்கமாய் இணைந்த போது ஒரு குழந்தையின் வாழ்வில் விடியலை கொணர முடிந்தது.
🟢இத்தகைய நல்ல ஒன்றிணைதலும், நல்ல பகிரும் உள்ளங்களும் வாழ்வதாலேயே இந்த உலகு இன்று நிலைபெறுகிறது.
ஒன்றிணைதல்
♦️ஆக்க சக்தியாய்
♦️வாழ்வின் சக்தியாய்
♦️பயன் ஈதலின் ஆற்றலாய் புலப்படுகிறது.
இன்றைய நற்செய்தி
🔵நம்பிக்கை கொண்டோர் இறைவனில் ஆழமாக நிலை பெற்றாலன்றி இறையாட்சியைக் கொணர இயலாது.
🔴இறையாட்சிப் பணியின் பேராபத்து என்பது படைத்து, பராமரித்து, பணிக்கு அனுப்பியவரை மறந்து, தனிமனித புகழ் மற்றும் சுயநலத்திற்காக உழைப்பது.
🟣இத்தகைய சமூக எதிரிகளைக் களைந்து, நல்ல உறவு நிலையில் ஒன்றித்து கனிதர நமக்கு அழைப்பு கொடுக்கிறது.
1.இணைந்து கனிதர
2.இணைந்து புதிதாய் பிறக்க
1. இணைந்து கனிதர
இணைதல் எதற்காக? பயன்தர, கனிதர. இயேசு என்னும் கொடியோடு கிளைகள் எனும் நாம் இணைந்தால் மிகுந்த கனிதருவோம். யோவான் 15:14 "கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றி கனி தரஇயலாது”
இணைதல் என்பது
♦️வலிமை
♦️ஆற்றல்
♦️சக்தி
🟡இணைவது பலன் கொடுக்க, கனி கொடுக்க
🟣கனி கொடுக்காத கிளையோ, மரமோ சபிக்கப்படும் அது வெட்டி எறியப்படும், உலர்ந்த பின் எரிக்கப்படும்.
மத் 21: 9 "வழியோரத்தில் ஓர் அத்திமரத்தை அவர் (இயேசு) கண்டு அதன் அருகில் சென்றார். அதில் இலைகளைத் தவிர வேறு எதையும் காணாமல், இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய் என்று அதைப் பார்த்துக் கூறினார். உடனே அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று"
🔴பார்ப்பதற்கு செழுமையாக, வளமையாகத் தெரிபவை எல்லாம் கனி கொடுப்பவை அல்ல. (சீன் போடுறதால ஒரு பயனும் இல்லை)
🔴நீ உன்னை செழுமையாய், வளமையாய் காட்டினால் பலன் கொடுக்க வேண்டும். செயல்களில் புலப்பட வேண்டும்.
🔴கிறிஸ்துவோடு இணைந்து கனி, பலன் கொடுப்போம்.
🔴சீடன் கனி கொடுப்பான்
🔴கனி கொடுக்கும் சீடன் தந்தையை மாட்சிப்படுத்துவான்.
2. இணைதல் -புதிதாய் பிறக்க
🟢தனிமனித விருப்பில் மூழ்கி, தூய்மை நெறியில் ஆர்வம் கொண்டு, யூத மரபில் பற்று கொண்ட, சட்ட நுணுக்கங்களை அறிந்த சவுல், கிறிஸ்துவோடு இணைந்த பிறகு பவுலாகி, கிறிஸ்துவை சுமந்து கொண்டு, பல ஆயிரம் மைல்கள் நடந்து, தொடக்க கால கிறிஸ்தவ சபைகளை உருவாக்கி, வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்து வாழ்கிறார் என்று அறிக்கையிட்டு புறவினத்தாரின் அப்போஸ்தலராய் பயன் ஈந்தார்.
🟡எந்த அளவிற்கு கிறிஸ்துவை எதிர்த்தாரோ, அதைவிட பதின்மடங்கு உறுதியோடு, பற்றோடு, தணியாத்தாகத்தோடு, கிறிஸ்துவைச் சுமந்து சென்றார்.
🟡நற்செய்தி அறிவிக்காவிட்டால் ஐயோ எனக்கு கேடு என்றவர், நற்செய்தியாகவே வாழ்ந்து மிகுந்த கனி தந்தார்.
நான் என்னை இழப்பது ஆதாயம் என்றார். அந்த அளவிற்கு கிறிஸ்துவோடு இணைந்த பிறகு மாறிப்போனார்.
பிலி 1:21 "நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே" என்ற நிலைப்பாட்டில் உறுதி பெற்றார் தூய பவுல்.
🟡புகழ், ஆழ்ந்த அறிவு, மக்கள் வியக்கும் ஆற்றல், சிறந்த நாவன்மை, பன்மொழிப்புலமை, உலகமே தன் அருள்வாற்றல் முன் மண்டியிட வேண்டும் என்று துடித்த பிரான்சிஸ் சவேரியார், ஆண்டவர் இயேசுவை சுவைத்தப் பிறகு, திருச்சபையில் மிகுந்த கனி தந்தார். ஆன்மாக்களை அதிகமாக அறுவடை செய்தார்.
நம் வாழ்வில்
🟣சுயநலமும், செருக்கும், அதிகார திமிரும் நம்மை கடவுளோடு இணைய விடாது, நாம் கனியும் கொடுக்க மாட்டோம்.
தொநூ 11 - ஆம் அதிகாரம் சுயநலம், செருக்கின் அடையாளம். தொநூ 11:4 "வாருங்கள் உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாத படி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காக கட்டி எழுப்பி நமது பெயரை நிலை நாட்டுவோம்" என்று ஆணவம் கொண்டனர். ஆண்டவர் அவர்களை சிதறடித்தார்.
🟢பேராசை நம்மை கடவுளிடம் இருந்து பிரிக்கும், அழிவைக் கொணரும். தீயவன், ஏவாவிடம் வஞ்சனை புகுத்த அவரும் வீழ்ந்தார்.
தொநூ 3:5 "ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில், உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப்போல் நன்மை தீமை அறிவீர்கள்" என்றதும் ஏவா பழத்தை பறித்து உண்டு, கடவுள் அன்பிலிருந்து விலகினாள்.
🔵பொறாமை உறவு வாழ்வை சிதைக்கும். தொநூ - 4 ஆம் அதிகாரத்தில் காயின் ஆபேல் மேல் கொண்ட பொறாமை கொலையில் முடிந்தது. எப்போது இறை அன்பிலிருந்து விலகுகிறோமோ அப்போதே அழிவைத் தேடிக் கொள்கிறோம்.
நம்மைக் குறித்து இறைவன் கொண்ட எதிர்பார்ப்பை இறைவாக்கினர் எரேமியா வழி வெளிப்படுத்துகிறார்
எரேமியா 2:21 "முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன். நீ கெட்டுப்போய் தரங்கெட்ட காட்டுத் திராட்சை செடியாய் மாறியது எப்படி?" என்று ஏங்கும் கடவுளின் மனநிலை அறிந்து அவரோடு இணைந்து நல்ல கனி கொடுப்போம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
Thursday, April 25, 2024
Wednesday, April 24, 2024
Saturday, April 20, 2024
Friday, April 19, 2024
பாஸ்கா 4- ஆம் ஞாயிறு மறையுரை -21.04.2024.
👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
பாஸ்கா 4-ஆம் ஞாயிறு
21.04.2024
திருத்தூதா் பணிகள் 4: 8-12,
1 யோவான் 3:1-2,
யோவான் 10: 11-18.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
🔵நல்ல ஆயன் ஞாயிறு நல்ல தலைமைப் பண்பை நமக்கு எடுத்தியம்புகிறது.
🟣ஆயன் என்று சொல்லாடல் இன்றையச் சூழலில் இல்லாமல் அருகி இருந்தாலும் இயேசுவின் தலைமைத்துவம் மண்ணின் மணம் கமழும், ஆயனுக்கும், மந்தைக்கும் உள்ள உறவைப் புலப்படுத்தும் ஒன்றாக அமைகிறது.
🔴தலைவன் வெறும் பேச்சளவில் அல்ல, மாறாக செயலளவிலும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
🟢பணிச்சீடத்துவமே, பணி தலைமைத்துவத்திற்கு அடிப்படை என்பதை உறுதி செய்கிறார்.
🟡அதிகாரம் அல்ல மாறாக பணிவான பணி வாழ்வே சிறந்தது, உயர்ந்தது என்பதை எடுத்தியம்புகிறார்.
🔵நாம் பணி செய்ய அழைக்கப்பட்டிருக்கின்றோம். நம் கிறிஸ்தவ விசுவாசம் நம்மை பணி செய்ய அழைத்துச் செல்கிறதா? என்று சிந்திப்போம்.
நிகழ்வு
டார்ஜிலிங் - குளுனி அருட்சகோதரிகள் நடத்தும் பள்ளியில் பூட்டான் நாட்டு அரச குலத்தைச் சார்ந்த கின்லி ஷெர்லிங் படித்தான் (பௌத்த சமயம் சார்ந்தவன்) கல்லூரி படிப்பை இயேசு சபை குருக்கள் நடத்தும் கல்லூரியில் படித்தான். ஒருநாள் கல்லூரியில் இருக்கும் ஆலயத்திற்குச் சென்றான். அமைதியாக ஆலயத்தில் அமர்ந்திருந்தவனை, சிலுவையில் அறையப்பட்டு, ஆடையின்றி, இரத்தம் ஒழுகும் அந்த சிலுவை ஈர்த்தது. அவரைக் குறித்து சிந்தித்தான் ஏன் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்? என்ன குற்றம் செய்தார்? நாட்கள் செல்லச் செல்ல கிறிஸ்துவின் மேல் ஈர்ப்பு பெற்றவனாய் கிறிஸ்தவனாக மாறினான். ஜோசப் கின்லி ஷெர்ரிங் என்று தனது பெயரை மாற்றினான். 1986 - ஆம் ஆண்டு விமான பயணத்தின் போது அன்னை தெரசாவைச் சந்தித்தான். அவர் அவனிடம் "நீ உன்னை இறைவனுக்கு ஏன் அர்ப்பணிக்க கூடாது"? என்று கேட்டார். அது அவனது உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, அன்னையின் அழைப்பை ஏற்றான். குருமடத்தில் இணைந்தான். 1996 ஆம் ஆண்டு ஜனவரி 4 - ஆம் நாள் டார்ஜிலிங் மறைமாவட்ட பேராயரால் பூடான் நாட்டின் முதல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டான்.
ஜோசப் கின்லி ஷெர்ரிங்
1. கிறிஸ்துவுக்காக அரச குடும்ப பாரம்பரியத்தை இழந்தான்.
2. ஏழைகளுக்கு உழைக்கும் பணித் தெளிவு பெற்றான் அன்னை தெரசாவைப் போல்.
3. சவால்களை சந்திக்கும் ஆற்றல் பெற்றார். ஆண்டவரின் அழைப்பு அர்த்தம் பெறுகிறது.
ஆண்டவர் நேரடியாக இறங்கி வந்து யாரையும் அழைப்பதில்லை. ஒவ்வொருவரையும் அவரவர் இருக்கும் சூழலில், அவர்களது பணியில் தான் அழைத்து வலுப்படுத்துகிறார்.
நம்மை அழைத்த கடவுள், ஒரு ஆயன் தன் மந்தையை பேணி பாதுகாப்பது போல் பேணிபாதுகாக்கிறார்.
ஒரு ஆயன்
1. மந்தையை நன்கு அறிந்தவராக
2. மந்தையை வழிநடத்தும் பாதைத் தெரிந்தவராக
3. மந்தையைப் பாதுகாக்கும் பண்புடையவராக விளங்குகிறார்.
1. மந்தையை நன்கு அறிந்தவர்
மக்களை வழிநடத்தும் ஒரு தலைவனின் தலைமைப் பண்பு என்பது, மக்களை, மக்களின் வாழ்வியல் நிலைகளை நன்கு அறிதல் வேண்டும்.
மக்களைப் பாதிக்கும் அனைத்து பிரச்சினைகள் சூழ்நிலைகள் ஆகியவற்றின் பின்புலங்களை நன்கு அறிந்தவராக இருப்பார்.
மக்களைப் பாதிக்கும், சமூக, பொருளாதார அரசியல், பண்பாட்டு, சூழ்நிலைகளை அறிந்து வழி நடத்துவார்.
யோவான் 10:3 "அவர் தம் சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார்"
யோவான் 10:5 "அறியாத ஒருவரை அதை பின்தொடரா அவரை விட்டு அவை ஓடிப்போகும்" - நல்ல ஆயனின் குணம், குரல் அறிந்து மந்தை பின் தொடரும். ஏனெனில், திபா 23:1 "ஆண்டவர் என் ஆயன், எனக்கேதும் குறையில்லை" என்ற அளவிற்கு குறைவிராதபடி மக்களின் தேவை அறிந்து வழிநடத்துவார். மந்தையின் மனம் அறிந்து நடத்துவார். நிறை குறை அறிந்து நெறிபடுத்துவார் நல்ல ஆயன்.
2. ஆயன் பாதை தெரிந்தவராக இருப்பார்
🔵 பாலை நிலப்பகுதியில் பாதைகள் தெளிவாய் அமைவதில்லை தெளிவில்லாத பாதையில் அழைத்துச் சென்றால் அவை பெரும் ஆபத்துக்குள்ளாகும்.
🟡மந்தைக்குத் தேவையான மேய்ச்சல், குடிநீர் இல்லாமல் அவதியுறலாம்.
🟢காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கு நேரிடலாம் எனவே ஒரு நல்ல ஆயன் மந்தைக்கு முன் வருவார்.
யோவான் 10:4 "தம் சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்த பின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரை பின்தொடரும்" எதற்காக முன் செல்வாரெனில் குறைவராதபடி வழிநடத்த, நல்ல மேய்ச்சலை கண்டடைய, புதிய வாழ்வுக்கு அழைத்துச் செல்ல.
திபா 23:2 "பசும்பில் வெளி மீது எனை அவர் இளைப்பாற செய்வார். அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்"
தி பா 23:3 "அவர் எனக்கு புத்துயிர் அளிப்பார்" என்று தாவீது தன் அனுபவத்தை வெளிப்படுத்துகிறார்.
🔴பாதையும், பார்வையும் தெளிவில்லாத சுயநலமிக்க தலைமை எங்கும் ஆபத்தானது.
🟣தானும் வாழ்வதில்லை, பிறரையும் வாழ்விப்பதில்லை என்பதை உணர்த்துகிறது.
3. ஆயன் மந்தையை காப்பார்
🔵மந்தையை தாக்கும், மந்தைக்கு வரும் தீங்குகளை இனம் கண்டு, அவற்றின் விளைவுகளை அறிந்து மந்தையை காக்கும் நல்ல ஆயராக இருப்பார்.
யோவான் 10:11 "நல்ல ஆயர் ஆடுகளுக்காக தன் உயிரைக் கொடுப்பார்"
தன் உயிரைக் கொடுத்தேனும் மந்தையை பேணிக்காத்து வாழ்வுக்கு வழி நடத்தும் ஆயராக இருக்க பணிக்கிறார் இறைவன். நல்ல ஆயன் இயேசு தன் பணியைக் குறித்துச் சொல்லும் போது
யோவான் 10:10 "நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு அதுவும் நிறைவாய் பெறும் பொருட்டு வந்துள்ளேன்" என்றார்.
ஒரே மந்தையும், ஒரே ஆயரும் உருவாகும் நிலை ஏற்பட வேண்டும் என்பதே நல்லாயன் இயேசுவின் விருப்பு. நல்ல ஆயரின் பணியாக எசேக்கியேல் இறைவாக்கினர் கூறும் போது,
எசே 34:16 "காணாமல் போனதை தேடுவேன் அலைந்து திரிவதை திரும்ப கொணர்வேன் காயப்பட்டவற்றிற்கு கட்டுப்போடுவேன், நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன்" என்று நல்லாயனின் பணியை எடுத்துரைக்கிறார். இதைவிட மேலான பாதுகாப்பு எந்த ஆயனும் தந்துவிட இயலாது.
நல்லாயன் இயேசுவின் பணி🟡காணாமல் போன சக்கேயு, அலைந்து திரிந்த சமாரியப் பெண் இவர்களை நிறைவாழ்வுக்கு அழைத்து, மீட்பை வழங்கியதாய் இருந்தது.
🔵ஆயன் இல்லா ஆடுகளைப் போல் தவித்த மக்கள் மேல் பரிவு கொண்டு உணவளித்தது அவரது கரிசனையை உணர்த்துகிறது.
🟣நல்ல சமாரிய உவமை, விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண் நிகழ்வுகள் காயப்பட்ட மக்களின் காயங்களை கட்டி நிறைவாழ்வுக்கு அழைத்ததை புலப்படுத்துகிறது.
🔴முடக்குவாதமுற்றவரை குணப்படுத்தியதும், பார்வையற்றவர்களுக்கு பார்வை வழங்கியது, நலிந்தவர்களை திடப்படுத்தி வழிநடத்தியதற்குச் சான்றாகிறது.
இன்று நம் வாழ்வில்
🟢இன்று நம்மை வழி நடத்தும் தலைவர்கள் நம்மை நம் தேவையை அறிந்திருக்கிறார்களா?
எசேக்கியேல் 34: 4 "நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை, பிணியுற்றவற்றிற்கு குணமளிக்கவில்லை, காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை, வழி தவறியவற்றைத் திரும்பக் கூட்டிவரவில்லை, காணாமல் போனவற்றை தேடவில்லை"
🔴மாறாக தங்களை மேய்த்துக் கொள்ளும் ஆயர்களாக மாறிப் போனார்கள். இந்நிலை மாற வேண்டும்.
🟣சரியான பாதையில் இருந்து சரியான பாதையில் வழி நடக்கிறோமா?
🔵வறுமையில் வாடியவர்களை நாம் இனம் கண்டு உதவியதுண்டா?
🟡அநீதிகளை எதிர்த்ததுண்டா?
🟢மனித மாண்புக்குக்கெதிரான செயல்களைக் கண்டித்ததுண்டா?
நல்ல ஆயன் குறைவின்றி வழி நடத்தியது போல நாமும் வழிநடத்தவும், வழி நடக்கவும் இறையருள் இரஞ்சுவோம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*