Sunday, September 15, 2024
Friday, September 13, 2024
பொதுக்காலம் 24-ம் - ஞாயிறு மறையுரை -15.09.2024.
👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
பொதுக்காலம் 24-ம் ஞாயிறு
15.09.2024
எசாயா 50: 5 - 9,
யாக்கோபு 2 : 14 - 18,
மாற்கு 8: 27- 35.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
இயேசு நமக்கு யார்?
🔴என்னே அதிகாரம் கொண்ட போதனை? பேய்களும் இவருக்கு கீழ்படிகின்றன. புயல் காற்றையும் இவர் அடக்குகிறார் என்னே இவரால் ஆகும் செயல்கள்? என்று வியப்படைந்தாலும், இயேசவை மெசியாவாக ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருந்தது.
🔵பன்நெடுங்காலமாய் மெசியாவிற்காக காத்திருந்த இஸ்ரயேல் மக்கள், மெசியா ஆடம்பரத்தோடும், அதிகாரத்தோடும் பெரும்படையோடும் வந்து மீட்பார் என்ற கருத்தியல் கொண்டவர்களுக்கும் இயேசுவை மெசியாவாக ஏற்பதில் சஞ்சலம் இருந்தது.
🟣அவர்கள் எண்ணப்படி மெசியாவிற்குரிய ஆடம்பரமும், புறவினத்தாரை அடக்கி ஆளும் அதிகாரத்தில் கடுகளவும் ஆர்வம் இயேசுவிடம் இல்லாததால் அவரை ஒரு சாதாரண இறைவாக்கினராகத்தான் நினைத்தனர்.
🟡இத்தகைய சூழலில் இயேசு மெசியாவை , நற்செய்தியாளர் மாற்கு துன்புறும் மெசியாவாகக் காட்டி, மக்களின் எண்ணங்களில் ஒரு புதிய செய்தியை பதிய வைக்கிறார்.
எசா 55:8 "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" என்ற எசாயாவின் வார்த்தைகள். இயேசுவின் வாழ்வை பணியைப் பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது.
🟢இன்றைய வழிபாடு இயேசு நமக்கு யார்? அவருக்கும் நமக்குமான உறவு என்ன, அவரின் எண்ணங்களை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்று சிந்திக்க அழைக்கிறது வழிபாடு.
நிகழ்வு
இங்கிலாந்து நாட்டின் 19. ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கட்டுரையாளர் திரு சார்லஸ் லேம்ப். இவருடைய காலத்தில் ஒரு விவாதத்தில் இவ்வுலகில் மிகச்சிறந்த ஆளுமை கொண்ட இருவர் என்ற தேடலில் இருவரைத் தேர்வு செய்தனர். (1) ஆண்டவர் இயேசு (2) 17 - ஆம் நூற்றாண்டின் ஷேக்ஸ்பியர். இந்த இருவரில் யார் மிகப்பெரிய ஆளுமை என்ற விவாதம் மீண்டும் தொடர்ந்தது அப்போது விவாதத்திற்கு நடுவராக இருந்தவர் மிக நுட்பமான பதிலை வழங்கினார்.
இந்த இரு நபர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்பது யாதெனில் நாம் அமர்ந்திருக்கும் இந்த அறையில் இப்போது ஷேக்ஸ்பியர் வந்தால் நாம் எல்லாரும் எழுந்து நின்று வாழ்த்து சொல்வோம். பாராட்டுவோம். அதே வேளையிலேயே இயேசு வந்தால் அனைவரும் பணிந்து வணங்கி வழிபடுவோம். ஏனெனில் ஷேக்ஸ்பியர் ஒரு சாதாரண இலக்கியவாதி இயேசுவே இவ்வுலகை மீட்ட மீட்பர் என்றார்.
இன்றைய வழிபாடு நம்மை நாம் ஆய்வு செய்யவும் நமக்கு இயேசு யார் என்று இனம் காணவும், அவர் வழியில் பயணமாகவும் அழைக்கிறது.
துன்புறும் ஊழியர்
இன்றைய முதல் வாசகமான எசாயா நூல் துன்புறும் ஊழியனை குறித்து விளக்குகின்றது. இறைவாக்கு பணிக்காக அழைக்கப்பட்டவர்களை ஆண்டவரே உடன் பயணித்து பண்படுத்துகிறார். எதை? எப்படி? யாரிடம் ? எங்கு? பேச வேண்டும்? என்பதை ஆண்டவர் தெளிவுபடுத்துகிறார்.
எரே 1:9 "இதோ பார் என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்" என்று அறிவுறுத்துகிறார் ஆண்டவரின் வார்த்தைகளின் வல்லமை என்ன?
எபி 4:12 "கடவுளின் வார்த்தை உயிர் உள்ளது, ஆற்றல் வாய்ந்தது, இரு பக்கமும் வெட்டக் கூடிய எந்த வாளினும் கூர்மையானது. ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவிற்கு குத்தி ஊடுருவுகிறது" என்று பார்க்கின்றோம். இந்த வார்த்தையின் வல்லமையால் இறைவன் துணை கொண்டு செய்ய வேண்டிய இறைவாக்கு பணி எப்படிப்பட்டது எனில்
எரே 1:10 "பிடுங்கவும், தகர்க்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நடவும் இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும், அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தினேன்" என்ற இறைவார்த்தை வழி அறிந்திருக்கின்றோம்.
♦️பிற்போக்கான, மக்கள் நலனில் அக்கறையற்ற செயல்களை, சிந்தனைகளை பிடுங்கி பறிக்கவும்.
♦️தன்னல , சுயநல சுவர்களை இடித்து தவிர்க்கவும்.
♦️அநீதியான, அக்கிரமான செயல்களை அளிக்கவும்
♦️காழ்ப்புணர்ச்சிகளை, கடவுள் விருப்புக்கு எதிரான செயல்களை கவிழ்த்துப் போடவும்.
♦️மானுடத்தை, மானுடய நேயச் செயல்களை, மக்கள் சமூகத்தைக் கட்டி எழுப்பவும்.
♦️நல்ல, உயர்வான, மதிப்பீடுகளை நட்டு வைக்கவும் அழைக்கப்பட்டனர்.
இத்தகைய பணியை செய்த போது அனுபவித்த துன்பங்களைத்தான் முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா இயம்புகிறார்.
♦️என் முதுகை, தாடியைப் பிடுங்கினார்கள்.
♦️என்னை இல்லாதது பொல்லாததுச் சொல்லி பரிகசித்து நிந்தனை செய்தார்கள்.
♦️என் மேல் காறி உமிழ்ந்து என்னை அவமானப்படுத்தினார்கள்.
♦️என்னைக் குற்றவாளி போல் தீர்ப்பிட்டனர். ஆனால் நான் அவமானம் அடையவில்லை,
இழிநிலை அடையவில்லை ஏனெனில் ஆண்டவரின் அருள் துணை என்னோடு உண்டு. எசாயா 50:7 "ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கிறார் நான் அவமானம் அடையேன்" என்ற இறைவார்த்தை வழி இறைவனுக்காக, இறைப்பணிக்காக துன்புறும் ஊழியன் நிலை விளக்கப்படுகிறது. ஆயினும் உன்னை மீட்கவும் உன்னை விடுவிக்கவும் நான் உன்னோடு இருக்கின்றேன் என்ற இவ்வார்த்தை வலிமை பெற வழிபாடு அழைக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மெசியா தன் மக்களுக்காக பணியாற்றி, பாடுபட்டு, இறக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். நற்செய்தியாளர் மாற்கு தன் நற்செய்தியின் மையப் பகுதியாகிய 8 -ம் அதிகாரத்தில் தன் பாடுகளை தன் சீடர்களுக்கு அறிவிக்கின்றார்.
🔵மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள் என்று கேட்பதன் வழி இருத புரிதல்களைப் பெற்றுக் கொள்கிறார்.
1. மக்களின் புரிதல்:
இயேசு இறைவாக்கினருள் ஒருவர் எனவேதான் திருமுழுக்கு யோவான், எலியா, மற்றும் முற்கால இறைவாக்கினருள் ஒருவர் என பதிலை வழங்கினர்.
2. சீடர்களின் புரிதல்:
சீடர்களில் முதல்வரான புனித பேதுரு ஒற்றை வார்த்தையில் பதில் வழங்கினார் "நீர் மெசியா" ஆனால் மெசியா என்று பேதுரு அறிக்கை விட்டாலும், பேதுரு மற்ற யூதரை போலவே, மெசியா அன்னியரை வீழ்த்தி, வெற்றி கொண்டு எதிரியை அடக்கி, இஸ்ரயேலுக்கான புதிய அரசை நியமிப்பார் என்று எதிர்பார்த்தார்.
இவ்வேளையில் இயேசு சீடர்களிடம் மானிட மகன் பலதுன்பங்கள் படுவார், மறைநூல் அறிஞர், மூப்பர்கள், தலைமைக் குருக்கள் ஆகியோரால் புறக்கணிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படுவார் என்று தன் பாடுகளை பற்றி கூறியதும் பேதுரு இயேசுவை தனியே அழைத்துச் சென்று கடிந்து கொண்டார்.
இயேசு தந்தைக் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற வந்தவர். தந்தையின் விருப்பத்திற்கு எதிரானவை அனைத்தும் தீயவையாக கருதப்படுகிறது. ஆண்டவர் இயேசு பணிவாழ்வை தொடங்கும் முன்பு 40 நாள் உண்ணா நோன்பிருந்து தந்தை கடவுளிடம் மன்றாடிய பின்பு, தீயவன் அவரை அணுகி 3 முறை சோதித்தான். அப்போது அவரை மலை உச்சியில் நடத்தி என்னை ஒரு முறை வணங்கு, எல்லாவற்றையும் உனக்குத் தருகிறேன் என்று சோதித்த வேளை, ஆண்டவர் இயேசு மத் 4:10 "அகன்று போ சாத்தானே" என்று கடிந்தார். இன்றைய நற்செய்தியில் பேதுரு, தந்தை கடவுளின் விருப்பிற்கு மாறாக, இத் துன்பங்கள் உமக்குக் கூடாது என்ற போது
மாற்கு 8:33 "என் கண் முன்னே நில்லாதே சாத்தானே" என்று கடிந்து கொள்கிறார். இயேசுவின் பார்வையில் தந்தை கடவுளின் விருப்பிற்கு எதிரானவை எல்லாம் தீயவரின் எண்ணங்களே என்பதை உறுதி செய்கிறார்.
மத் 16:17 "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன், என்ற இயேசு மத் 16:23 "இயேசு பேதுருவை திரும்பிப் பார்த்து என் கண்முன்னே நில்லாதே சாத்தானே" - நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய் என்றார். இன்றைய வழிபாடு நமக்கு இரு வினாக்களை நம்மில் வைக்கிறது.
1. இயேசு நமக்கு யாராக இருக்கிறார்?
2. நாம் இயேசுவின் பார்வையில் பேறுபெற்றவராக இருக்கின்றோமா?
சிந்தித்து பேறுபெற்றவராக வாழ அழைக்கப்படுகின்றோம். நாம் பேறு பெற்றவராக வாழ இறைவன் விடுக்கும் அழைப்பு
1. நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்ய வேண்டும் (1 யோ 3:18)
2. நம் நற் செயல்களைக் கண்டு பிறர் விண்ணகத் தந்தையை போற்றி புகழும் படி வாழ அழைக்கப்படுகின்றோம் (மத் 5:16)
அவ்வாறு வாழ வேண்டுமானால் நம் தலைவரும், தந்தையும் ஆண்டவருமான மீட்பர் இயேசுவின் அழைப்புக்கு செவிமடுப்போம். அவர் விடுக்கும் அழைப்பு யாதெனில், சிலுவைகளை சுமந்து, அவரைப் பின்பற்றிச் சென்று, ஆன்மாவை இழந்து விடாமல் காத்துக் கொள்ள அழைக்கும் இயேசுவின் அழைப்புக்கு செவிமடுக்கும்போது இயேசுவின் விருப்பத்திற்கு உரியவராக மாறவும்.
🔵சீமோனை போன்ற பேறுபெற்றவராக மாறுவோம்.
🔴அப்போது இயேசு நமக்கு மெசியாவாக, வாழும் கடவுளின் மகனாக புலப்படுவார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👏👏👋👋👋👋👋👋👋👏👏👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
Thursday, September 12, 2024
Tuesday, September 10, 2024
Sunday, September 8, 2024
Saturday, September 7, 2024
பொதுக்காலம் 23-ம் - ஞாயிறு மறையுரை -08.09.2024.
👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
பொதுக்காலம் 23-ம் ஞாயிறு
08.09.2024
எசாயா 35: 4 - 7,
யாக்கோபு 2 : 1 - 5,
மாற்கு 7: 31 - 37.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
🔴மாற்றுத்திறனாளிகள் மேல் இறைவன் காட்டும் அக்கறையை இது சுட்டுகிறது.
🟡இயேசு பிற இனத்தார் வாழும் தீர், சீதோன் பகுதியில் இறையாட்சிப் பணியை முடித்துவிட்டு தெக்கபோலி வருகிறார். அங்கு காது கேளாத, திக்கி பேசும் ஒருவருக்கு வாழ்வு வழங்குகிறார்.
🔵பரிசேயர், சதுசேயர்கள் எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி தான் இயேசு அன்பு, பரிவு, மானுட நேயம், இரக்கம், மன்னிப்பு போன்ற இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்கினார். ஆயினும் இயேசு
திபா 10:38 "எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்"
♦️இயேசுவின் உள்ளம் நோயாளிகள், பாவிகள். உடல் ஊனமுற்றோர் ஆகியோரை மாண்புடனும், பரிவுடனும் நடத்துவதில் விழிப்பாய் இருந்தது.
♦️இறையாட்சிப் பணிச் செய்ய நடந்து சென்ற பகுதிகளில் நடக்க இயலாதோர், பேச முடியாதவர், பார்வையற்றோர், நோயற்றோர் ஏன் மரித்தவருக்குக் கூட புது வாழ்வு வழங்கி நலமுடன் வாழச் செய்தார்.
♦️இதன் இறைவன் வழியாக நமக்கு விடுக்கும் அழைப்பு யாதெனில் நம்முடைய இதயக் கதவுகள் திறக்கப்பட வேண்டும்.
♦️பிறரை அதிகாரத்தோடும், ஆணவத்தோடும், இழிவோடும், வெறுப்போடும் பார்க்கும் நம் விழிகளும், இதயமும் மூடப்பட்டு பாசத்தோடும், அன்போடும், பணிவோடும், கனிவோடும் பார்க்கக் கூடிய இதயங்கள் திறக்கப்பட வேண்டும்.
♦️அப்போது மகிழ்வும், சமாதானமும், நிறை வாழ்வும் குடிகொள்ளும் சமூகம் கட்டி எழுப்பப்படும்.
நிகழ்வு
மீரா புரூக்ஸ் என்பவர் எழுதிய "Touch of the Master's Hand" என்ற கவிதை நூலில், ஒரு சிறிய கதை ஒன்றை கவிதையாக வடிக்கிறார்.
தெருவோரத்தில் பழைய பொருட்களை ஒருவன் ஏலமிடுகின்றார். அப்போது தூசு படிந்த பழைய வயலின் ஒன்றும் அங்கே ஏலம் இடப்பட்டது. மற்ற பொருட்களை வாங்க முண்டியடித்து, போட்டிப் போட்டு வாங்கிய கூட்டம் இதைக் கண்டு கொள்ளவே இல்லை. கூட்டத்தினின்று வந்த முதியவர் ஒருவர் யாரும் வாங்காத அந்த வயலினை எடுத்தார். தன் கைக்குட்டையால் அதில் படிந்திருந்த தூசை தட்டினார். தளர்ந்து, குலைந்து கிடந்த நரம்புகளை இறுக்கிக் கட்டினார். பின்னர் அந்த வயலினை வாசிக்க தொடங்கினார். அழகிய, இதயத்தை உருகச் செய்யும் இசை எல்லாரின் செவிகளையும், இதயத்தையும் திறந்து, யாரும் வாங்க முன்வராத வயலினை வாங்க இப்போது போட்டிப் போட்டனர்.
ஒருவரின் கண்கள் திறக்கப்பட்ட போது அந்த வயலின் சிறப்பு பெற்றது. அதனால் அதன் மதிப்பு உயர்ந்தது. இந்த நிகழ்வு நமக்குத் தரும் செய்தி இதுதான்.
1. எதையும், யாரையும் குறைத்து மதிப்பிடவோ, இழிவாக பார்க்கவோ வேண்டாம்.
2. நம் கண்களையும், இதயத்தையும் விசாலப்படுத்தி பார்க்கும்போது, பிறர் நம்மை விட மதிப்புக்குரியவர்கள், மாண்புக்குரியவர்கள் என்ற உண்மை புலப்படும்.
🟢தெக்கபோலியில் யாரும் கண்டுகொள்ளாத மனிதனை ஆண்டவர் கண்டார். எவருடைய இதயங்களும் திறக்கப்படாத போது, இயேசுவின் இதயம் பரிவிரக்கத்தால் திறந்தது.
லேவி 19:4 "காது கேளாதோரைச் சபிக்காதே, பார்வையற்றோரை இடறச் செய்யாதே, உன் கடவுளுக்கு அஞ்சி நட நான் ஆண்டவர்" என்ற இறைவாக்கிற்கு ஏற்ப நமது ஆண்டவர் இயேசு பாிவோடு செயல்பட்டு அந்த மனிதனின் காது, நாவை திறப்பதைப் பார்க்கின்றோம்.
பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் துன்புற்றனர். நம்பிக்கையின் கதவு அவர்களில் அடைக்கப்பட்டது. இவ்வேளையில், ஒரு நாள் நாம் நம் சொந்த நாட்டில் குடியேறுவோம், இந்த அவலமான அடிமை வாழ்வு தகர்க்கப்படும், விடுதலையின் மக்களாய் வாழ்வோம் என்ற நம்பிக்கையின் கதவை இறைவாக்கினர் எசாயா வழியாக ஆண்டவர் திறந்தார்.
எசேக்கியல் 11:20 "என் நீதி நெறிகளுக்கு செவி கொடுத்து அவற்றை கடைபிடிப்பார்கள் அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்"
இது இஸ்ரயேல் மக்களுடன் இறைவன் செய்த உடன்படிக்கை. இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளைகளுக்குப் பணிந்து நடந்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் நாளடைவில் உடன்படிக்கையை மீறினர். வேற்றுத் தெய்வங்களை வழிபட்டனர், இறை உறவை இழந்தனர். இதனால் பிற இனத்தவரால் அடிமைப்படுத்தப்பட்டனர். நம்பிக்கையின் கதவுகள் அடைக்கப்பட்டது, அவா்கள் அவநம்பிக்கையின், விரக்தியின் உச்சத்தில் இருந்தனர். இவ்வேளையில் தான் இறைவன் இறைவாக்கினர் எசாயா வழி நம்பிக்கையின் விழிகளைத் திறக்கின்றார்.
எசாயா 35:4 "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள். இதோ உங்கள் கடவுள் பழி தீர்க்க வருவார். அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்" என்று நம்பிக்கை ஒளியூட்டுகிறார் அதோடு. எசாயா 41:10 "அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கின்றேன் கலங்காதே நான் உன் கடவுள் நான் உனக்கு வலிமை அளிப்பேன். உதவி செய்வேன், என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்" என்ற இறைவன், பாபிலோனிய அடிமைத்தளையை சைரஸ் அரசன் வழியாக தகர்த்தார்.
பாவத்தளைகளை அழித்து நம்மை தந்தை கடவுளோடு இணைக்கும் இயேசு மெசியாவின் முன்னோடியாக மன்னன் சைரஸ் விளங்கினார். இஸ்ரயேலின் அடிமைதளைகள் திறக்கப்பட்டது. இயேசு மெசியாவின் காலத்தின் அறிகுறிகளாக அல்லது இறையாட்சியின் அடையாளங்களாக எசா 35:6 பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும், காதுகேளாதோரின் செவிகள் கேட்கும்.
எசா 35:7 "காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக் குதிப்பர் வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்" என்று உண்ர்த்தப்படுகிறது.
இவற்றை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கின்றோம், காது கேளாத, திக்கி பேசுகிறவர் மீது கைவைத்து தொட்டு குணப்படுத்துமாறு மன்றாடினார்.
🔴 தன் விரல்களால் காதுகளையும், உமிழ்நீரை அவர் நாவில் வைத்து அவன் செவியையும், நாவையும் திறக்கின்றார்.
🟡 உமிழ்நீரைத் தடவி பேய்களை ஓட்டும் பழக்கம் யூதர்களிடையே உண்டு.
🟢 மேலே அண்ணார்ந்து பார்ப்பது தந்தை இறைவனோடு ஒன்றிக்கிறார், உறவாடுகின்றார் என்பதையும்
🔴 பெருமூச்சு விடுவது - இயேசுவின் கனிந்த இதயத்தையும் சுட்டுகிறது. வலியவரின், எளியவரின் உற்ற நண்பனாக இயேசு வெளிப்படுகின்றார்.
🟡இயேசுவின் ஒரு வார்த்தையில் ஆர்ப்பரித்த கடல் அடங்கியது. இலாசரே! வெளியே வா என்ற போது இலாசர் உயிர்த்தார். தலித்தாகூம் என்ற போது சிறுமை உயர் பெற்றார் அத்தகைய ஆற்றல்மிகு செயல் செய்த இயேசு உமிழ்நீரை குணமாக்கும் கருவியாக்கினார்.
🟣உமிழ்நீரும் திறக்கப்படு என்ற சொல்லும் இயேசுவின் கனிவை, கருணையை, இரக்கத்தைச் சுமந்து செல்லும் கருவிகள்.
🔵எதையும் கண்டும், கேட்டும், தொட்டும் அறியத் துடிக்கும் மக்களுக்கு ஏற்ற வகையில் இந்த புதுமை அமைந்துள்ளது.
இன்று சமூகத்தில் இரு வித பார்வை பெற வேண்டும்
1. உடல் திறக்கப்பட வேண்டும்
2. உள்ளம் திறக்கப்பட வேண்டும்
உடல் பார்வை
இன்றைய நற்செய்தியில் காதும், நாவும் - திறக்கப்பட்டது.
உள்ளப்பார்வை
♦️சக்கேயு உள்ளம் திறந்த போது - சென்ற இடமெல்லாம் நன்மை செய்த இயேசுவைப் பார்த்தான்.
♦️சிலுவையில் கள்வன் ஒருவர் - இயேசு மெசியா, நீதிமான் என்பதை தன் உள்ளத்தால் பார்த்தான்.
♦️காது, கண், நாவு, உடல் உறுப்புகள் நன்றாக செயல்படும் நாம் இந்த சமூகத்தை மறு வாசிப்பு செய்ய வேண்டும்.
♦️ மறு வாசிப்பு செய்யாதவரை நம் கண்களும், நமது செவியும் நமது நாவும் திறக்கப்படவில்லை.
எடுத்துக்காட்டாக - பலர் கண்ணிருந்தும் பார்வையற்றவராகத்தான் இருக்கின்றோம்.
♦️அநீதிகள், அவலங்கள், அக்கிரமங்கள் நம் கண்முன் நடக்கும் போதும்.
♦️வறியவர்களுக்கு எதிராக பிறர் அநீதிகள் புரியும் போதும் இந்தத் தவறுகளைச் தவறு என்று சுட்டி காட்டவில்லை எனில் நம் இதயமும், கண்களும், நாவும் திறக்கப்படவில்லை அடைபட்டு கிடக்கிறது.
♦️துன்பங்களை, துயரங்களை, அநீதிகளைக் கண்டு துடித்தெழாத மனிதன் பார்வையற்றவன்.
♦️பொய்யும், அவதூறும், பிறருடைய பெயரை கெடுக்கும் செயல்களிலும் நாம் மௌவுனிக்கிற போது நம் செவிகள் திறக்கவில்லை.
♦️உண்மைக்கு எதிரான, நீதிக்கு எதிரான, பிறர் வாழ்வை கெடுக்கும் செயல்களை, நாம் பேசித் திரியும்போது நம் நாவுகள் கட்டப்பட்டிருக்கிறது.
♦️இறைவன் நமக்கு நல்லவற்றைப் பார்த்து, பேசி, கேட்டு வாழ்வாக்க கூடிய சூழலை அமைத்து தந்திருக்கும் போது நம் கண், செவி, இதயங்கள் நல்லவற்றிறக்காய் திறக்கப்படுகிறதா?
♦️அநீதியான முறையில் ஒரு எபிரேயன் கொல்லப்பட்டதை கண்ட மோசேயின் கண்கள் திறக்கப்பட்டது போல
♦️இயேசு மெசியாவை காண சக்கேயுவின் கண்களும், இதயமும் திறக்கப்பட்டது போல
♦️இன்று, இப்போதே வான் வீட்டில் இருப்பாய் என்று இயேசுவால் வாழ்வு வழங்கப்பட்ட நல்ல கள்ளனின் கண்கள் திறக்கப்பட்டது போல்
♦️இவரே எதிர்பார்த்த மெசியா என்று உணர்ந்து இரவோடு இரவாக இயேசுவை சந்தித்த நிக்கோதேமின் கண்கள் திறக்கப்பட்டதைப் போல்
♦️கிறிஸ்து வாழ்வு வழங்குபவர் என்பதை கண்ட நூற்றுவர் தலைவரின் கண்கள் திறக்கப்பட்டதைப் போல்
♦️இயேசுவால் மட்டுமே தனக்குப் பார்வை தர முடியும் என்று உணர்ந்து, மன்றாடி பார்வை பெற்ற பார்த்திமேயுவின் கண்கள் திறக்கப்பட்டதைப் போல
♦️அவர் நம்மோடு பேசி, அப்பத்தை பிட்கும் போது நாம் உள்ளம் பற்றி எாிய வில்லையா? என்று உணர்ந்து தங்கள் இதயத்தை திறந்த திருத்தூதர்களைப் போல் நம் இதயத்தையும் திறப்போம்!
🔴பகைமையை ஒழித்து அன்பு இதயத்தை திறப்போம் !
🔴அநீதியை விலக்கி நீதியின் கதவை திறப்போம் !
🔴சமத்துவமற்ற பிரிவினை தவிர்த்து சமத்துவ கதவை திறப்போம் !
🔴வன்முறை என்னும் தீமையை தவிர்த்து அமைதியின் கதவை திறப்போம்!
இறைமகன் இயேசுவின் குரலை கேட்டு இதயக் கதவை திறப்போம்!
இறைவன் வாழும் இல்லமாவோம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*