Friday, July 28, 2023

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (நல்லவை எப்போதும் உயா்ந்து நிற்கும்) - 30.07.2023 (ஞாயிறு)


 

Tamil Catholic Status song (இறைவா உந்தன் பாதம்) - 30.07.2023


 

இன்றைய இறைசிந்தனை (நல்லவை எப்போதும் உயா்ந்து நிற்கும்) - 30.07.2023 (ஞாயிறு)


 


ஆண்டின் பொதுக்காலம் 17 - ம் ஞாயிறு மறையுரை - 30.07.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 17- ஆம் வாரம் ஞாயிறு)

30.07.2023. 

1 அரசர்கள் 3 : 5, 7 -12,

உரோமையர் 8 : 29 - 30,

மத்தேயு  13: 44 - 52.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

ஞானமுடன் விண்ணரசைத் தேடுவோம்

♦️ஒவ்வொருவர் வாழ்விலும் தேடல் மிக அவசியம். ஒன்று இன்னொன்றைத் தேடுவது இயற்கையின் நியதி. அதை எதை இழந்தாவது அடைய மனது உறுதிக் கொள்கிறது.

♦️இந்தத் தேடலில் வரும் தடைகளைத் தாண்டி, தான் தேடியதை அடைய மனது முயல்கிறது. 

♦️இந்தத் தேடலை இயேசு நமக்கு இன்றுக் கற்றுத் தருகிறார்.

♦️உலகை மீட்க வந்தக் கடவுள் தன் உயிரை இழந்து நமக்கு மீட்பைக் கொணர்ந்தார்.

♦️நமது இறையாட்சிக்கான தேடலில் நல்ல முத்தையும், புதையலையும் பெற, மற்றவற்றை இழந்து அவற்றை அடைவது போல நாம் நம் வாழ்வில் ஞானத்தையும், விண்ணரசையும் தேட வழிபாடு வழியாக அழைக்கிறார் இறைவன்.

நிகழ்வு (12.07.2023 ஊடகச் செய்தி)

டெலிகாம் உலகின் ஜாம்பவனாக திகழ்பவர் ஏர்செல் நிறுவனத்தின் தலைவரான திருமிகு. ஆனந்த கிருஷ்ணா, அவருடைய ஒரே மகன் வென் ஆஜன் சிரிபான்யோ.  

டெலிகாம் உலகில் ஆனந்த கிருஷ்ணனை A.K. என்றுதான் அழைப்பர். A.K. - யின் நிகரச் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பு படி 40,000 கோடி.

தமிழைத் தாயகமாகக் கொண்டு பிறந்த சிரிபான்யோ, A. K. யின் பில்லியன் டாலர் சாம்ராஜ்யத்தை முன்னெடுப்பார் என்பது எழுதப்படாத விதி. டெலிகாம், மீடியா, எண்ணெய், கேஸ், ரியல் எஸ்டேட் மற்றும் சாட்டிலைட் போன்ற நிறுவனங்கள் சொந்தமாக இயங்குகிறது. கிட்டத்தட்ட ஒன்பது நிறுவனங்களில் A.K. முதலீடு செய்திருக்கிறார். இதிலிருந்து ஈட்டிய லாபம் மலேசியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது. 

தாய்மொழி தமிழாக இருந்தாலும் A.K. புத்த மதத்தைச் சார்ந்தவர். A.K. கல்வி மற்றும் சேவை மையங்களுக்கு வாரி வழங்குவதில் வள்ளல். இவரது தொழில் சாம்ராஜ்யத்தை இவரது மகன் சிரிபான்யோ தொடர்ந்து நடத்துவார் என்று எதிர்பார்த்த நேரத்தில், தனது 18-வது வயதில் சிரிபானியோ புத்தமத துறவியாக மாறினார். 

சிறிது காலம் வேடிக்கை, ஓய்வு, தியானம், ஆன்மீக உரையாடல் என்று துறவறம் மேற்கொண்ட சிர்பான்யோ - வுக்கு இந்த வாழ்வு பிடித்து விட இந்த துறவர வாழ்வு நிரந்தரமாயிற்று.

பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான சிரிபான்யோ எளிமையாக தினமும் யாசித்து உணவு உண்ணும் எளிய துறவற வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். துறவி சிரிவானியோ தன் வாழ்வைக் குறித்து சொல்லும் போது இவ்வாறு மக்களிடம் யாசித்து உண்டு எளிமையாக வாழும் வாழ்வு என் மனதிற்கு மகிழ்வை, நிறைவை, நீங்கா ஆனந்தத்தைத் தருகிறது என்கிறார்.

தூய பவுல் பிலிப் 2:8 "கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாக கருதுகிறேன்" என்று சொன்னது போல, சிரிபானியோ உலக செல்வம் அனைத்தையும் குப்பையாக கருதி எளிய வாழ்வை அணிந்து மன ஆனந்தத்தை உரிமையாக்கியது இறையாட்சியின் செயலாய், ஞானமிக்க செயலாய் அமைந்துள்ளது.

இன்றைய முதல் வாசகம்

சாலமோன், மக்களை இறைவிருப்பப்படி வழி நடத்த இறைவனிடம் ஞானத்தை வேண்டிப் பெற்றதை சுட்டுகிறது. சாலமோன் பொன், பொருள், மண், எதிரி நாடுகள், செல்வம் வேண்டும் என்று கேட்கவில்லை, மாறாக கடவுளின் உரிமைச் சொத்தாகிய உம் மக்களுக்கு நான் நீதி வழங்க ஞானம் வேண்டும் என்றார்.

சாலமோனின் தாழ்ச்சியும், பணிவும்

சாலமோன் இறைவனிடம் மன்றாடும் போது கடந்த காலத்தை நினைவு கூர்கின்றார். ஆடு மேய்த்தத் தன்னுடைய தந்தை தாவீதை ஆண்டவர் கடைக்கண் நோக்கியதை நினைத்து நன்றி கூறினார்.

1 அரசர் 3.6 "என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும், நீதியுடனும் நேரிய உள்ளத்துடன் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர்" இந்த இறை வார்த்தைகள் கடந்த காலத்தை நன்றியோடு நினைவு கூர்ந்ததைக் குறிக்கிறது.

தான் ஆண்டவரிடம் வேண்டும் போது எளிய உள்ளத்தோடும் பேரன்போடும் ஆண்டவரோடு சாலமோன் உரையாடினார்.

1 அரசர் 3.7 "என் கடவுளாகிய ஆண்டவரே" என்று அழைத்த சாலமோன் கடவுளின் முன்னிலையில் தான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து,    1அரசர் 3.7  "தான் செய்வதறியாத சிறுபிள்ளை" என்று ஆண்டவர் முன் பணிந்து மன்றாடுகின்றார். ஆண்டவர் என்ன வரம் வேண்டும் என்ற போது 1 அரசர் 3.9 "உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும், தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்" என்று பணிவோடு வேண்டினார்.

சாலமோனின் இந்த எளிய, பணிவான வேண்டுதல் ஆண்டவருக்கு உகந்ததாய் பட்டது, ஏனெனில் சாலமோன்

1. நீடிய ஆயுளை கேட்கவில்லை,

2. பணம், புகழ் செல்வத்தைக் கேட்கவில்லை,

3. எதிரிகளின் நாடு, எதிர்களின் அழிவை கேட்கவில்லை. 

மாறாக மக்களை நீதியோடு வழிநடத்த ஞானத்தை மட்டும் தாரும் என்று மன்றாடினார். எனவே ஆண்டவர், சாலமோனின் எளிமை, தாழ்ச்சி, ஞானத்தின் மீது கொண்ட வேட்கை இவற்றால் உளம் மகிழ்ந்து சாலமோனை ஆசீர்வதித்தார்

1 அரசர் 3:12 "நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை"  என்று எளிமையுடைய சாலமோனை வானளாவ உயர்த்தி மாட்சிப்படுத்தினார். ஏனெனில் ஞானம் ஆண்டவரிடம் இருந்தே வருகிறது.

சீராக் 1:1 "ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்தே வருகிறது. அது என்றும் அவரோடு இருக்கிறது."

ஞானம் உள்ளவனின் செயல்பாடு எவ்வாறு அமையும் எனில்

ஞானமுள்ளவர்

*நீதியோடு,

விவேகத்தோடு,

விரைவாக - செயல்படுவார்*

🟡ஞானத்திற்கான தேடல், தாகம் உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும். ஞானத்தை நாம் பெற்றால் இருக்காரியங்கள் நிறைவேறும். சீராக் 4:11 "ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும் தன்னைத் தேடுவோர்க்குத் துணைநிற்கும்" என்று சீராக் எடுத்துரைக்கின்றார். எனவே ஞானத்தை ஆர்வமாய் தேட இறையருள் இரஞ்ச வழிபாடு அழைக்கிறது.

🔴மத்தேயு 13 - ஆம் அதிகாரத்தில் விண்ணரசை விளக்க எட்டு உவமைகளைக் கையாள்வார்.

🟣இன்றைய நற்செய்தியில் புதையல், முத்து, வலை என்று மூன்று உவமைகள் வழி இறையாட்சியை உரிமையாக்க அழைக்கின்றார். விண்ணரசு என்பது நாம் இறந்த பின் நமக்குக் கிடைக்கும் வாழ்வின் பரிசல்ல, வாழும் நாட்களில் இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்பற்றி, இயேசுவின் சீடர்களாக மாறி, அவரின் நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனாக செயல்படுவது.

♦️இது மனநிறைவு, அமைதியைத் தரும்.

🔵இன்றைய நற்செய்தியின் முதல் இரு உவமையில் (புதையல், முத்து) விலைமதிப்பற்ற, பொக்கிஷமாகிய புதையலையும், முத்தையும் உரிமையாக்க எல்லாவற்றையும் இழந்துப் புதையலையும், முத்தையும் தனதாக்கிக் கொள்வதைப் பார்க்கின்றோம்.

⭐முதன் முதலில் இவை விலை மதிப்பற்றவை என்பவற்றை அறியும் ஆற்றல் ஞானம் அமைகிறது.

⭐அறிந்தவுடன் தன்னுடைமையாக்க விழைகிறார்.

⭐அதற்கான செயல்பாடு தனக்குள்ளே எல்லாவற்றையும் விற்று பொருளீட்டுவது

⭐இறுதியில் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் ஞானம் நிறைந்த செயல்.

⭐இது, தூய பவுல் கிறிஸ்து என்னும் புதையலைக் கண்டவுடன் எல்லாவற்றையும் குப்பையாய் கருதி, கிறிஸ்துவை ஆதாயமாக்கியதற்கு ஒப்பாகும் என்பதை உணர்த்துகிறது.

🟣மூன்றாவது உவமையாகிய வலை உவமையில்


♦️யார் யார் விண்ணரசுக்கு உரிமையாவர்

♦️யார் யார் விண்ணரசுக்கு வெளியே அழுகையும், அங்கலாய்ப்பு உள்ள தீச்சூளையில் தள்ளப்படுவர் என்பதை குறிக்கிறது. எது எப்படியாயினும் நாம் ஞானத்தோடும், விவேகத்தோடும் விரைந்து செயல்பட்டு இறையாட்சிக்குரியவராக மாற அழைக்கப்படுகின்றோம்.

🔴நல்ல மீன்களுக்கு ஒப்பானோர் யாரெனில் மத் 25:40 - ல் கூறப்படுவது போல "மிகச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்" எந்த இறை வார்த்தையில் வரும் மிகச்சிறியோர் யாரெனில் பசியாய், தாகமாய், அன்னியராய், ஆடையின்றி, நோயுற்று, சிறையில் இருப்போரை குறிக்கிறது. இவர்களைப் பேணுகிறவர்கள் இறையாட்சிக்கு உரியவராகவும், இவர்ளை மதியாதோர், பேணாதோர் அழுகையும், அங்கலாய்ப்பும் உள்ள தீச்சூளையில் தள்ளப்படுவர் என்று அறிவுறுத்தப்படுகிறது.

🔵எனவே நம் செயல்பாடுகள், ஞானமிக்கதாய் விரைந்து செயல்பட்டு இறையரசை உடமையாக்க வேண்டும். இவ்வாறு செயலாற்றும் போது   மத் 13:52 "தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக் கொணரும் வீட்டு உரிமையாளரை போல் இருக்கின்றனர்" என்கிறார். அதாவது

♦️இறையாட்சியின் சீடர்கள் பழைய யூத பாரம்பரியம் தரும் நல்ல மதிப்பீடுகளையும், 

♦️இயேசு கொணர்ந்த புதிய இறையாட்சியின் கூறுகளையும், மீட்பையும், நற்செய்தியையும் வெளிக் கொணர்வதாக அமையும்.

இன்று நம் வாழ்வில்

🟡குடும்பங்கள் ஞானத்தால் கட்டி எழுப்பப்பட வேண்டும். தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம். தெய்வ பயத்தாலும், ஞானத்தாலும் கட்டி எழுப்பப்படும் குடும்பங்கள் தீமையை விலக்கி விழிப்புடன் செயல்படுவர். 

நீமொழி. 14:16 "ஞானமுள்ளவர் விழிப்புடையவர் தீமையை விட்டு விலகுவார்"

🔴ஞானமுள்ளவர் ஊனியல்பின் செயல்களைத் தவிர்ப்பார்.

(எ.கா) அழுக்காறு, குடிவெறி , பொறாமை, சண்டை, கட்சிமனப்பான்மை இவற்றை தவிர்க்கும் போது விண்ணரசுக்கு உரியவராவர்.

🔵இன்று நாம் விண்ணரசுக்குரியவராக மாற வேண்டுமெனில் பகைமையை விலக்கி அன்பையும் அநீதியை ஒழித்து நீதியையும், ஆணவத்தை அழித்து அருளையும், பிரிவினை மாற்றி சமாதானத்தையும் வாழ்வாக்குகிற சமூகமாக மாறுவோம்.

🟢புனித பிரான்சிஸ் அசிசியார் மன்றாடியது போல் அமைதியின் கருவியாய் என்னை மாற்றும் இறைவா என்று வேண்டுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (தீமைகளை அழிப்போம்) - 29.07.2023 (சனி)


 

Tamil Catholic Status song (மாா்த்தாளைப் போல்) - 29.07.2023


 

இன்றைய இறைசிந்தனை (தீமைகளை அழிப்போம்) - 29.07.2023 (சனி)


 

Friday, July 21, 2023

ஆண்டின் பொதுக்காலம் 16 - ம் ஞாயிறு மறையுரை - 23.07.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 16- ஆம் வாரம் ஞாயிறு)

23.07.2023. 

சாஞா.  12 : 13, 16 -19,

உரோமையர் 8 : 26 - 27,

மத்தேயு  13: 24 - 43.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

ஆற்றல் வழங்கும் இறைவன்

♦️கடவுளின் திட்டங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை.

♦️இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களை அவர்களின் வாழ்வின் வரலாற்றில், அவர்களைப் பாதுகாத்து, இரக்கத்தோடு, நீதி வழங்கி பாதுகாக்கின்ற ஆற்றல் மிகு இறைவனை சாலமோனின் ஞான நூல் விளக்குகிறது.

♦️இன்றைய நற்செய்தியில் விண்ணரசை உவமை வாயிலாக புரிய வைக்கின்றார். இறையாட்சியில் நாம் பெறும் வாழ்வு என்பது இவ்வுலக வாழ்வின் நீட்சியே என்பதனை இன்றைய நற்செய்தியில் வரும் பயிர், களைகள் உவமையில் பயிர் ஒருபோதும் களையாக முடியாது. ஆனால் மனிதர் ஒருவர் நல்லவர் கெட்டவராகவும், கெட்டவர் நல்லவராகவும் முடியும். ஆனால் இறை விருப்பம் என்பது எல்லாரும் மீட்படைய, வாழ்வடைய வேண்டும் என்பதே.

♦️தீய வழி முறைகளின்று திருந்தி வாழ வேண்டும் என்பது இறை விருப்பு. எனவே, எசாயா 55:7 "மன்னிப்பதில் அவர் தாராள உள்ளத்தினர்" என்று இறைவாக்கினர் எசாயா உணர்த்துகிறார். இறைவன் எளியவர்களை வலுப்படுத்தி, ஆற்றல்படுத்தி, தம் இரக்கத்தால் வாழ செய்கிறார்.

நிகழ்வு

பிரான்ஸ் நாட்டில் ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தின் பிள்ளைகளைக் கவனிக்கும் பணியில், மேரி என்ற ஏழை பெண் நியமிக்கப்பட்டார்.

அப்பெண் (மேரி) அழகு, பொறுப்புணர்வு, விவேகம், செயல்திறன், தொலைநோக்குப் பார்வை, கொள்கை பிடிப்பு, விடாமுயற்சி போன்ற நற்பண்புகளை தன் வாழ்வில் வாழ்வாக்கினாள். அந்த செல்வந்தர் குடும்பத்தின் மூத்த மகன் மேரியை விரும்பினான். அவளின் கண்ணியமிகு செயல்பாடு அவனை ஈர்த்தது. தன் விருப்பத்தை தன் தந்தையிடம் சொன்னான். தந்தை  தன் மகனிடம், 5 காசுக்கு வழியில்லாத, வக்கில்லாத வேலைக்காரியை நீ விரும்புகிறாயா? உன் குடும்ப அந்தஸ்து என்ன? கௌரவம் என்ன? என்று பேசினார். இதனை மறைவாய் நின்று கேட்டாள் மேரி. உடனே வீட்டை விட்டு வெளியேறி, பாரிஸ் - நகர் சென்று, கடினமாக உழைத்து அதில் கிடைத்த வருவாயைக் கொண்டு தன் அறிவை பயன்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதன் பயனாக புற்று நோயைக் குணமாக்கும் மருந்தை கண்டுபிடித்தார். அவர்தான் மேடம் மேரிகியூரி. அவள் கூறும்போது, "கடவுளின் அளப்பரிய ஆற்றலை வாழ்வில் உணர்கிறேன். ஏனெனில் நான் இயலாமையில் இருந்த நாட்களில் என்னை இழிவாய், கேவலமாய் பேசிய வார்த்தைகள் என்னை வலுப்படுத்தியது" சாஞா. 12:19 "உம் மக்களை தன்னம்பிக்கையில் நிரப்பினீர்" என்பது போல, வலுவற்ற மேரியை நம்பிக்கையூட்டி மாண்புற செய்தார் இறைவன். எத்தகைய பண்பு நெறிகளால் இறைவன் மக்களை வழிநடத்துகிறார் என்பதை வழிபாடு உணர்த்துகிறது.

1. பாதுகாத்து வழிநடத்தும் கடவுள்

இஸ்ரயேல் மக்கள் பலகால கட்டங்களில்  பல்வேறு நாடுகளுக்கு அடிமையாக மாற்றப்பட்டனர். எகிப்து, பாபிலோன் மற்றும் உரோமையருக்கு அடிமைகளாக இருந்தனர். எகிப்தில் பாரவோனின் அடிமையில் இஸ்ரயேல் மக்களின் துன்பத்தைக் கண்டு, நாம் இறங்கி வந்தோம் என்றுச் சொல்லி, மோசேயை அழைத்து, வலுவூட்டி, ஆற்றல்படுத்தி, மோசே வழியாக-இஸ்ரயேல் மக்களுக்கு வாழ்வு வழங்கினார். பாலைவனப் பயணப் பாதையில் அவர்களின் அன்றாட தேவையில் இறைவன் உடனிருந்தார்.

பசிக்கு - மன்னாவும், காடையும், குடிக்க - நீரும், இரவு - பகல் நேரங்களில் நெருப்பாய், மேகமாய் இருந்து குறை ஒன்றும் வராதாபடி பாதுகாத்தார் இதனை தாவீது தி.பா. 121 : 3 "அவர் உன் கால் இடறாத படி பார்த்துக்கொள்வார். உம்மைக் காக்கும் அவர் உறங்கிடமாட்ட்டார். தி.பா.12:4 இதோ இஸ்ரயேலைக் காக்கிறவர் கண்ணயற்வதுமில்லை உறங்குவதுமில்லை" என்று இறைவனின் பாதுகாப்பை எடுத்துரைத்தார்.

2. நீதியும் இரக்கமும் உடையவர்

இறைவனின் அளப்பெரும் செயல்களில் எல்லாம் நீதியும், இரக்கமும் அடிஒற்றி செல்லும். இன்றைய முதல் வாசகமாகிய சாலமோனின் ஞானநூலில் இதை நாம் காணலாம்.

சா.ஞா. 12:13 - "முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை"

சா.ஞா. 12:16 - "உமது ஆற்றலே நீதியின் ஊற்று"

சா.ஞா. 12:18 - "நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்" என்று சாலமோனின் ஞான நூல் இயம்புகிறது.

விடுதலைப்பயண நூலில், ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயிடம் அவர் பக்கமாய் நின்ற இறைவன், தான் ஆண்டவர் என்பதை அறிவித்தபோது, வி.ப. "34:6 - "ஆண்டவர் ஆண்டவர், இரக்கமும், பரிவும் உள்ள இறைவன், சினம் கொள்ளாத் தயங்குபவர் பேரன்பு மிக்கவர், நம்பிக்கைக்குரியவர்" என்று எடுத்துக் கூறுவதை திருமறை வழி அறிகின்றோம். நாம் அந்த இரக்கமிகு கடவுளின், இரக்கத்தையும், கனிவையும், பரிவையும் அன்றாடம் அனுபவிக்கின்றோம். அவர் நம்மீது பரிவும், இரக்கமும் காட்டுவது போல் நாமும் பிறர் மீது இரக்கம் கொள்ள அழைக்கப்படுகின்றோம். மத். 5:7 'இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" என்ற இறைவார்த்தை நம்மில் வாழ்வாக்கப்பட உழைப்பது நம் கடமையாகும்.

இன்றைய நற்செய்தியில் கூட, நல்ல கோதுமை விதைகளை விதைத்தப்போது, தீயவன், களைகளை விதைத்து விட்டுச் செல்கிறான். இரண்டும் முளைக்கிறது. பணியளர்கள் களைகளை பிடுங்கி விடவா என்றபோது மத். 13:29 'வேண்டாம் களைகளைப் பறிக்கும் போது அவற்றோடு சேர்த்து, கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்" என்று அறுவடை வரை காலம் தாழ்த்துவதைப் பார்க்கிறோம். சிறிதளவேனும் தீமைகள், தவறுகள் நடந்து விடக்கூடாது என்பது இறைவனது நீதி.

எசா. 55:7 "கொடியவர் தம் வழிமுறைகளையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டு விடுவார்களாக அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும் அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்" என்று கடவுளின் இரக்கமும், பரிவும், நீதியும் புலப்படுவதைப் பார்க்கின்றோம்.

3. ஆற்றல்படுத்தும் இறைவன்

இறைமகன் இயேசு இறையாட்சியை மக்கள் மனங்களில் பதிவு செய்ய, மக்களின் அன்றாட வாழ்வோடு இயைந்துள்ள பொருட்களை உவமைப்படுத்துகிறார். கடுகுவிதை, புளிப்பு மாவு இவை இறையாட்சியின் செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது.

கடுகு


ஒருசிறு தானியம் இதை நாம் உலர்த்தினால் உடைப்பது கடினம். இந்தக் கடுகை போல் ஆழமான, உறுதியான நம்பிக்கையை நாம் வாழ்வாக்க வேண்டும்.

இச்சிறு கடுகு முளைத்து பெரிய மரமாகிறது. வானத்துப்பறவைகள் தங்கும் மரமாகி பண்படுகிறது. அதுபோல நம் நம்பிக்கை செய்லாக்கம் பெறவேண்டும். சமூகத்துக்கு பயன் பெற வேண்டும். நம்பிக்கை செயல்வடிவம் பெற்றால் அது இறையாட்சியின் செயல்பாடு.

புளிப்பு மாவு


குறைந்த அளவு மாவு - நிறைந்த அளவு உள்ள மாவோடு கலந்து அம்மாவை பண்படுத்துகிறது, சுவையூட்டுகிறது. அதுபோல கிறிஸ்துவின் பிள்ளைகள் நாம் கிறிஸ்துவை இந்த உலகு அறிய, சுவைக்க, நல்ல கருவிகளாக (புளிப்புமாவைப்போல்) செயல்பட அழைக்கின்றார். ஏனெனில் வலுவற்ற, ஆற்றலற்ற நம்மை ஆற்றல்படுத்துவதும், வலுவூட்டுவதும் இறைவன்.

2 கொரி 12:9 "என் அருள் உனக்குப்போதும் வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்று நம்மை ஆற்றல்படுத்துகிறார்.

இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான், நாம் கடுகாக, புளிப்புமாவாக, நல்ல விதைகளாக மாறி நல்ல பலன் கொடுக்க அழைக்கின்றார்.

✝️நலிந்து போன சமூகத்தை நலப்படுத்துபவனாக செயலிழந்த மானுட குடும்பத்தை செய்லாக்கத்திற்கு அழைத்துச் செல்லும் புளிப்பு மாவாக செயலாற்றுகிறேனா? ஏனெனில் நாம் பலவீனப்படும்போது இறைவன் தன் பெலன் தந்து, நம்மை வழிநடத்துகிறார்.

அதேநேரம் மனிதன் சுயநலத்தால், தற்பெருமையால் கடவுளின் ஆற்றலை, அன்பை உணராமல் உதாசீனப்படுத்தும் போது கடவுள் வேடிக்கைப்பார்ப்பது இல்லை என்பதனை

சீஞா. 12:17 "மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும் போது நீர் உம்முடைய ஆற்றலை காட்டுகின்றீர் அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர்" என்ற இறைவார்த்தையால் அறியலாம்.

தொநூல் 11-ஆம் அதிகாரத்தில் பாபேல் கோபுரத்தைத் தங்களின் புகழ், பெருமை, ஆற்றல், வலிமை, அறிவு இவற்றால் கட்டுகிறோம் என்ற ஆணவம் கொண்ட போது ஆண்டவர் அவர்களின் எண்ணங்களைச் சிதறடித்தார். அதே நேரம் எளிய ஆடு மேய்த்த மோசே, தாவீது இவர்களை மாண்புறச் செய்ததையும், ஆற்றல்மிகுத் தலைவர்களாய் மாற்றியதையும் திருமறை வழி அடைகின்றோம்.

நம் வாழ்வுக்குள் பயணிப்போம்


🟢நான் ஆண்டவரில் கொள்ளும் நம்பிக்கை இந்த சமூகம் மாற்றம் பெற, வாழ்வடைய, உயர்வடைய பயன்படுத்துகிறேனா?

🔵கடுகுவிதை, புளிப்புமாவு சிறுதாயினும் பலன் பெரிதாவதைப் போல் நாம், தனிமனிதராகவோ அல்லது குழுமமாகவோ இணைந்து நல்ல மதிப்பீடுகளால் மாண்புறச் செய்கிறோமா?

🟣கடவுள் எனக்குத் தந்த ஆற்றலை, சமூகத்தில் நலிந்தவர் வளர்ச்சிக்கு அர்ப்பணம் செய்யும் மனநிலை கொண்டிருக்கிறேனா?

🔴தூய பேதுரு, என்னிடம் பொன்னும் இல்லை, பொருளும் இல்லை நசரேயனாகிய இயேசு என்னோடு உண்டு, அவரை உனக்குக் கொடுக்கிறேன் என்றுச் சொல்லி, இயேசுவின் பெயரால் முடம் மாற்றி வாழ்வு கொடுத்தது போல் நாம் தீமையின் தளைகளை உடைக்க இயேசுவின் பெயரால் முன் வருகிறோமா?

🟡இன்று நம்மிடையே புரையோடிய சுயநலம், சாதிய வெறித்தனங்கள் என்னும் களைகளை களைய முயற்சிக்கிறோமா?

சிந்திப்போம்! 

செயல்படுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (புனித மகதலா மாியா - விழா) - 22.07.2023 (சனி)


 

Tamil Catholic Status song (மதலேன் மாியாள்) - 22.07.2023


 

இன்றைய இறைசிந்தனை (புனித மகதலா மாியா - விழா) - 22.07.2023 (சனி)




 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (இரக்கம் நிறை இதயத்தோடு வாழ்வோம்) - 21.07.2023 (வெள்ளி)


 

Tamil Catholic Status song (இயற்கை உனது ஓவியம்) - 21.07.2023


 

இன்றைய இறைசிந்தனை (இதயம் நிறை இரக்கத்தோடு பலி செலுத்துவோம்) - 21.07.2023 (வெள்ளி)


 

Friday, July 14, 2023

ஆண்டின் பொதுக்காலம் 15 - ம் ஞாயிறு மறையுரை - 16.07.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 15- ஆம் வாரம் ஞாயிறு)

16.07.2023. 

எசாயா  55 : 10 -11,

உரோமையர் 8:18 - 25,

மத்தேயு  13: 1 - 23.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.



                                          பலன் கொடுப்போம்

♦️மனித கண்டுபிடிப்பின் உச்ச மொழி. வார்த்தை உணர்வுகளின் புறப்பாடு.

♦️வார்த்தை ஒரு அடையாளம், மனித வாழ்வின் உளமாற்றங்களால் ஏற்படும் உணர்வுகளான வெறுப்பு, கோபம், சாந்தம், அமைதி ஆகியப் பண்புகளை வார்த்தை வழி வெளிப்படுத்துகிறோம்.

♦️வார்த்தைகள் ஆக்க சக்தியாகவும் புலப்படும்,  அழிவுசக்தியாகவும் வெளிப்படும்.

♦️வார்த்தைகள் பலன் கொடுக்கவும் செய்யும், பலனை இல்லாமல் ஆக்கவும் செய்யும்.

♦️ஆண்டவரின் வார்த்தைகள் உயிருள்ள, ஆற்றல் மிக்க, இருபுறமும் கருக்கு வாய்ந்த எந்த வாளிலும் கூர்மையானதாக அமைந்துள்ளது.

♦️இந்த வார்த்தை - நம் உள்ளத்தில் நாள்தோறும் விதைக்கப்படுகிறது. ஆனால் நம் வாழ்வில் அது பலன் கொடுக்கிறதா? என்று நம்மை நாம் ஆய்வு செய்ய வழிபாடு அழைக்கிறது. 

🟣இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் சவால் நாம் நூறு மடங்கு பயன் கொடுக்கிறவர்களாக மாற வேண்டும் என்பதுதான்.

🟣நம் வாழ்வு வாழ்வதற்கே, அதை பயனுள்ளதாய் வாழ தான் அழைக்கப்படுகின்றோம்.

🟣நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ்விப்பதும் நம் வாழ்வின் பொருள் உணர்வதுமே, நம்மை பலன் கொடுப்பவர்களாக உருமாற்றுகிறது.


நிகழ்வு

நைஜீரியா நாட்டின் ஃபெமி ஒடெடோலா என்பவர் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பத்து செல்வந்தர்களில் ஒருவர். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்கள் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணம் எது என்று. அவரின் பதில் இவ்வாறு அமைந்தது. என் வாழ்வை நான்கு நிலைகளில் பிரித்துப் பார்க்கின்றோம். முதல் நிலை என் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பருவம். பணம் சேர்ப்பது தான் மகிழ்ச்சி என்று நினைத்து கோடி கோடியாய் பணம் சேர்த்தேன். என்னிடம் பணம் நிரம்பி வழிந்தது. ஆனால் மகிழ்ச்சி இல்லை.

இரண்டாம் நிலையில் பெரிய பெரிய கலைப்படைப்புகள், ரேல்க்ஸ் கடிகாரம், உலகின் விலை உயர்ந்த கார்கள் மற்றும் விலை மதிக்க முடியாத ஏராளமான பொருட்களை வாங்கி சேர்த்தேன். அதிலும் நான் மகிழ்ச்சியை கண்டடையவில்லை.

மூன்றாம் நிலையில் பெரிய project எடுக்க ஆசைப்பட்டேன். இக்காலகட்டத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தின் 95% (விழுக்காடு) டீசல் என் வழியாகத்தான் சந்தைப்படுத்தப்பட்டது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் உள்ள மிகப்பெரிய கப்பல் என்னுடையதுதான். இதுவும் நிறைவையும், மகிழ்ச்சியையும் வழங்கவில்லை.

நான்காம் நிலையில் ஒரு நாள் என் நண்பர் சொன்னார். நைஜீரியாவில் இருக்கும் ஒரு விடுதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு 200 சக்கர நாற்காலி (wheel chair) கேட்கிறார்கள், அவர்கள் அனைவரும் போரில் சிக்குண்டு கை, கால்களை இழந்த பிள்ளைகள் அவர்களுக்கு 200 wheel Chair வாங்கி விட்டு, அதை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்றார். ஆகவே அந்த நிகழ்வுக்கு நான் போனேன் எல்லாரும் 18 வயதிற்கு குறைவானவர்கள். எல்லாருக்கும் Wheel Chair வழங்கிவிட்டு நான் வெளியே செல்ல முற்படும் போது, 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை தன் wheel Chair - இல் இருந்து கீழே இறங்கி மிக விரைவாக ஊர்ந்து என்னிடம் வந்து என் கால்களைப் பிடித்துக் கொண்டது. எதற்கு என் கால்களைப் பிடிக்கிறாள் என்று தெரியாமல் குனிந்து அக்குழந்தையின் கையைப் பிடித்து, என்ன வேண்டும் என்று கேட்டேன். அந்தப் பதினைந்து வயதுக்கு குழந்தை என்னைப் பார்த்துச் சொன்னது. உங்கள் முகத்தை ஒருமுறை நான் பார்க்க வேண்டும். ஏனெனில் இனி உங்களை நான் பார்ப்பேனா என்பது எனக்கு தெரியாது உங்களை நான் சொர்க்கத்தில் பார்க்கும் போது அடையாளம் கண்டு நன்றி சொல்லனும் என்றதாம் அக்குழந்தை. அக்குழந்தையின் வார்த்தை என்னை வெகுவாய் பாதித்தது. இந்த சிறிய உதவி அக்குழந்தைகளுக்கு எத்தகைய மகிழ்வை, நிறைவை கொடுத்தது என்பதை கண்டு கண்கள் பனிக்க மகிழ்ந்தேன்.


வாழ்வின் மகிழ்வு

🔵பணம் சேர்ப்பதில் இல்லை

🔵பெயர் புகழில் இல்லை

🔵அந்தஸ்த்தில் இல்லை மாறாக

🔵அடுத்தவரைத் தூக்கி விடுவதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து என்னையே மாற்றிக் கொண்டேன். என்னை மாற்றத்திற்கு உட்படுத்தியது என் நண்பனின் வார்த்தை என்றார் ஃபெமி ஓடெடோலா.


ஆம் நம் வார்த்தைகள் பயன் கொடுக்கிற வார்த்தைகளா? சிந்திப்போம்!


இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் வார்த்தையின் வல்லமையை எடுத்துரைக்கும் போது, பலன் தராமல் ஒருபோதும் இருப்பதில்லை, என்கிறார். வானத்திலிருந்து பொழியப்படும், பனியும் - மழையும் - நிலத்தினை நனைத்து விதைப்பவனுக்கு விதையும், உண்பவனுக்கு உணவும் கொடுத்து வாழ்விப்பது போல் ஆண்டவரின் வார்த்தையும் வாழ்வு வழங்கும். யோவான் 6:68-ல் இது பேதுரு ஆண்டவரிடம் "நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" என்று ஆண்டவரின் வார்த்தை வாழ்வு கொடுக்கும் ஆற்றல் படைத்தது என்பதை அறிக்கையிடுவதைப் பார்க்கின்றோம். திருவிவிலியத்தில் உள்ள ஆற்றல் மிக்க வாழ்வு வழங்கும் வார்த்தைகள் பலருடைய வாழ்வைப் புரட்டிப் போட்டிருக்கிறது.

🟢உலகத்தின் போக்குகளும், உலகத்தின் இன்பங்களும், கற்ற கல்வியும் கதியென்று பாவத்தில் நிலைத்து நின்ற அகுஸ்தினாரின் உள்ளத்தை உரோமையர் 13: 14 "பகலில் நடப்பது போல் மதிப்போடு நடந்து கொள்வோமாக, களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு ஆகியவற்றைத் தவிரப்போமாக" என்ற பவுலின் வார்த்தைகள் பண்படுத்தியதால் புனித அகுஸ்தினாராக, திரு அவையின் மறை வல்லுனராக மாறினார்.

🟢பாவியான அகுஸ்தினார் புனித அகுஸ்தினராக மாறி பல மடங்கு பலன் கொடுப்பவராக மாறினார்.

🟢கல்வி, பதவி, புகழ், செல்வம், அதிகாரம், குடும்பம், அந்தஸ்து இவைதான் வாழ்வு என்று நினைத்து எவரையும் மதியாது வாழ்ந்த சவேரியார் புனித இஞ்ஞாசியார் உரைத்த திருமறை வார்த்தைகளால் உள்ளம் குத்துண்டு, மாற்றம் பெற்றார்.

மத். 16:26 "மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தன் வாழ்வை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன, அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்" என்ற வார்த்தைகளால் மாற்றம் பெற்று பல ஆயிரம் ஆன்மாக்களை அறுவடை செய்தார் கிறிஸ்துவுக்காக.


🟢ஆன்மாவை காத்துக் கொண்டதன் வழியாக, மாபெரும் புனிதராய், அழியாத உடலாய் உலகிற்கு, சான்று பகர்கிறார்.

இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா,  பனியும், மழையும் நிலத்தை நனைத்து பலன் கொடுப்பதைப் போல், உயிருள்ள ஆண்டவரின் வார்த்தைகள் மிகுந்த பலனைத் தரும் என்கிறார்.

♦️அந்த ஆற்றில் மிக்க வார்த்தைகளால் தான் தொடக்க நூலில், உருவமற்ற உலகை ஒருங்கமைத்து, ஒளி, நிலம், நீர், பயிர், பச்சைகள், விலங்குகளைப் படைத்து எல்லாவற்றையும் நன்று என்று கண்டார்.

♦️நன்றாய் படைக்கப்பட்டவை அனைத்தும் ஆண்டவரின் வார்த்தையில் வந்தவையே 

திபா. 33:9 "அவர் சொல்லி உலகம் உண்டானது. அவர் கட்டளையிட அது நிலை பெற்றது" என்ற இறைவாக்கு, ஆண்டவரின் வார்த்தையின் ஆற்றலை உறுதிப்படுத்துகிறது.

இன்றைய நற்செய்தியில் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளைப் போல் பலம் கொடுக்க அழைக்கிறார் இறைவன்.

நான்கு விதமான மனங்களில் இறைவார்த்தை என்னும் விதை விதைக்கப்பட்ட போது எப்படி பலன் கொடுத்தது என்பதை நற்செய்தி விளக்குகிறது.


வழியோரம்


♦️இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ள விரும்பாதவர்கள்.

♦️பரிசேயர், சதுசேயர், மறை நூல் அறிஞர்

♦️பொறுப்பற்றத்தனமாக, கண்டும் காணாதவர் போல் செல்வது எ.கா. -இக்காலகட்டத்தில் இளைஞர் மற்றும் சிறுவர்கள் - பெற்றோர், ஆசிரியர், பெரியவர்கள், சமூகத்தின் வாழ்வியல் நெறி கேட்டு செவிமடுக்காமல் இருப்பது.

ஊதாரி மைந்தன் உவமையில் வரும் பொறுப்பற்ற மகன்.


பாறை

இறைவார்த்தையைக் கேட்பவர்கள், விட்டுவிடுவார்கள் இதயங்கள் ஈரமற்று, வறண்டு போகும் இயேசுவின் நாட்களில் ஆட்சி செய்த ஏரோது, திருமுழுக்கு யோவானின் தலையைக் கேட்ட ஏரோதியா போன்றவர்கள் பாறை நிலத்திற்கு ஒப்பானவர்கள்.

மத் 13:15 "இம் மக்களின் நெஞ்சம் கொழுத்துப் போய்விட்டது காதும் மந்தமாகிவிட்டது இவர்கள் தம் கண்களை மூடிக்கொள்கிறார்கள்" என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப வாழ்கிறவர்கள்.

எ.கா. - இன்றைய பாசிச ஆட்சியாளர்கள்.


முட்செடி


♦️உள்ளம் வலுவுள்ளது உனுடலோ வலுவற்றது என்ற இயேசுவின் வார்த்தைக்கு ஒப்பானவர்கள்.  நல்லது செய்ய நல்லபடி வாழ ஆர்வமிருக்கும், ஆனால் உள்ள பலவீனத்தில் வீழ்ந்து போவார்கள்.

♦️தொடக்க நூலில் 25 - ஆம் அதிகாரத்தில் வரும் யாக்கோபின் சகோதரன் ஏசா, ஒருவேளை உணவிற்காக வாழ்நாள் ஆசீரை  இழந்தது போல் நாமும் பல நேரங்களில் தவறிப்போகின்றோம்.

♦️பேதுரு, கெத்சமனே - யில் செபிக்கச் சென்ற போது தூங்கினார். இயேசுவை மூன்று முறை மருதலித்தார், ஊனுடல் வலுவற்றது என்பதை நிரூபித்தார்.

♦️இன்று நாம் மதிப்பீடுகளை இழந்து சுய புகழுக்காக அற்ப அரசியல்வாதிகளைப் போல் வாழ்கிறோமா? சிந்திப்போம்.


நல்ல நிலம்



♦️இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அன்னை மரியாள்.

♦️இறைவார்த்தைதான் வாழ்வு, வளம் என்று வாழ்கிறவர்கள் நூறு மடங்கு பலன் கொடுப்பார்கள்.

லூக். 1:38 "நான் ஆண்டவரின் அடிமை" என முழுவதும் சரணாகதி அடைதல்.

♦️முழுவதும் சரணடைகின்றவர்கள் 100 மடங்கு பலன் கொடுப்பர். திருச்சபையில் நாம் கொண்டாடும் புனிதர்கள் எல்லாரும் நூறு மடங்கு பலன் கொடுத்தவர்கள். திபா. 34:8 "ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்" என்ற தாவீதின் வார்த்தைக்கு ஏற்றவாறு ஆண்டவரை சுவைத்து 100 மடங்கு பலன் வழங்கியவர்கள்.

✝️கிறிஸ்துவில் இணைகிறவரும் (மாற்கு 3:14)

✝️ஆண்டவரை சுவைப்பவரும் (திபா. 34:8)

✝️சிலுவையை சுமக்கிறவரும்    (மத் 16:24)

✝️தன்னை இழப்பவரும்                 (மத். 10:39)

✝️ஆண்டவருக்கு தன்னை அடிமையாக்குகிறவரும்              (லூக். 1:38) 

நூறு மடங்கு பலன் கொடுப்பார். நம்மை நாம் - ஆய்வு செய்வோம்.

நூறு மடங்கு பலன் கொடுப்பவராவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (இலட்சிய உறுதிக்கொள்வோம்) - 15.07.2023 (சனி)


 

Tamil Catholic Status song (அன்பென்ற நதி மீது படகாகு) - 15.07.2023


 

இன்றைய இறைசிந்தனை (இலட்சிய உறுதிக்கொள்வோம்) - 15.07.2023 (சனி)


 

Friday, July 7, 2023

ஆண்டின் பொதுக்காலம் 14 ம் ஞாயிறு மறையுரை - 09.07.2023.

  




செக்கரியா  9:9-10,

உரோமையர் 8:9, 11-13,

மத்தேயு  11: 25-30.


அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

------------------------------------------------------------          

நம் மெசியா எத்தகையவர்

------------------------------------------------------------

♦️இன்றைய வழிபாடு மெசியாவின் வருகையின் போது எத்தகைய பண்பு நலன்கள் வெளிப்படும் அல்லது மெசியா எத்தகையவராய் இருப்பார் என்று எடுத்தியம்புகிறது.

♦️மெசியாவாகிய இயேசு, தந்தை கடவுளுக்கு நன்றி கூறி, தாம் வாழ்ந்த நாட்களில் உள்ளம் சேர்ந்து போன மக்களை தன் கனிவாலும் தாழச்சியாலும் ஆறுதல்படுத்துபவராகப் பார்க்கின்றோம்.

♦️இதன்வழியாக நாம் காலத்தின் அறிகுறிகளை உணர்ந்து செயல்படும் கருத்தான, பொறுப்பான, உணர்வுளள்வர்களாய் வாழ அழைக்கப்படுகின்றோம்.

♦️மெசியாவின் வருகையின் போது நாம் அவரிடம் இருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பண்புகளாக வழிபாடு சிலவற்றை முன் வைக்கிறது.


1. எளிமை - தாழ்ச்சி என்ற புனிதத்தை நமக்கு உணர்த்தி நிற்கிறது. 

இன்றைய நற்செய்தியில் கூட மத். 11:29 “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்” என்று ஆண்டவர் இயேசு தம்மை அறிமுகப்படுத்துகிறார். இன்றைய முதல் வாசகத்திலும் செக் 9:9 "கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் ஏறி வருகின்றார்” என்று செக்கரியா அறிவுத்துவதன் வழி மெசியா எளிமையும், பரிவும் கனிவும் உடையவர் என்று உணரலாம்.

நம் திருவிவிலியத்தில் “குதிரை” போர் வீரர்களோடு இணைத்து கூறப்படும், விடுதலைப்பயணம் நூலும் செக்கரியா நூலும் இதை நமக்கு நன்கு உணர்த்துகிறது. வி.ப. 14:9 "பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், படை….” என்றும் செக். 1:8 "இதோ சிவப்புக் குதிரைமேல் ஏறிவந்த மனிதன் ஒருவரை நேற்றிரவு கண்டேன்” என்ற இறைவார்த்தைகள் குதிரை, மற்றும் அதில் ஏறிவருவோர் பெரும்பாலும் போர்வீரர் அல்லது குதிரைவீரர், அல்லது வீரமிக்கவர் என்று பொருள்படுகிறது. ஆனால் மெசியா எளியவர். கழுதை சாந்தத்தை, அமைதியை, எளிமையை அடையாளப் படுத்துகிறது.

தொடக்கநூலில் யாக்கோபு தன் புதல்வனாகிய யூதாவைக் குறித்துச் சொல்லும் போது. தொ.நூ. 49:11 "அவன் திராட்சைச் செடியில் தன் கழுதையையும் செழுமையான திராட்சைக் கொடியில் கழுதைக் குட்டியையும் கட்டுவான்” என்றும். 1 அரசர்கள் முதல் அதிகாரத்தில் தாவீது தன் மகன் சாலமோனை தனக்குப்பின் அரசராகத் திருப்பொழிவு செய்ய அழைத்துவரும் போது 1அரசர் 1:33 "என் மகன் சாலமோனை என் கோவேறு கழுதையின் மேல் அமர்த்தி  கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று அறிவுறுத்துவதையும் திருமறைவழி அறிகின்றோம்.

மெசியாவாகிய இயேசுவைக் குறித்து மத்தேயு கூறும் போது இயேசுவை அமைதியின் காவலராக எளிமையின் இலக்கணமாக விளக்குகிறார்.

மத். 21:5 : "கழுதையின் மேல் ஏறிவருகிறார், கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்" என்று இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் செக்கரியா அறிவுறுத்துவதை மத்தேயு உறுதி செய்கிறார். எனவே எளிய மெசியாவின் அன்புப் பிள்ளைகள் நாம் தாழச்சியும், சாந்தமும்,

எளிமையும், பரிவும் உள்ள மக்களாக மாற அழைக்கப்படுகின்றோம்.


2. நீதி, நேர்மை

மெசியாவைக் குறித்து இறைவாக்கினர் செப்பனியா கூறும்போது. செப் 2:3 "அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள் நேர்மையை நாடுங்கள்” என்று அறிவுறுத்துவதிலிருந்து நீதியையும், நேர்மையையும் இறைவனிடமிருந்துப் பிரித்துப் பார்க்க இயலாது, மேலும் இறைவாக்கினர் எசாயா.

எசா 32:17 "நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு நீதியின் வினாவன என்றுமுள அமைதியும் நம்பிக்கையும்” என்று விளக்குகிறார் திருப்பாடல் ஆசிரியர். தி.பா. 96:13 “ஏனெனில் அவர் வருகின்றார் மண்ணுலகிற்கு நீதி தீர்ப்பு வழங்க வருகின்றார்” என்றும் தி.பா. 99:4 'வல்லமை மிக்க அரசரே நீதியை நீர் விரும்புகின்றீர் நேர்மையை நிலைக்கச் செய்கிறீர்” என்று மெசியாவின் செயல்கள், எவ்வாறு அமையும் என்பதை தாவீது எடுத்தியம்புகிறார், ஆண்டவர் இயேசுவும் தம் மலைப்பொழிவில், நீதி நிலை நாட்டும் வேட்கைக் கொண்டோரையும், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோரையும் பேறுபெற்றோர் என்றார். மெசியாவின் வருகையின் போது நீதியும், நேர்மையும் சிறப்புற நிலைபெறும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.


3. சமாதானம் அருள்பவர்

இன்றைய முதல் வாசகத்தில் செக்கரியா இறைவாக்கினர் செக். 9:10 "எருசலேமில் குதிரைப் படையை அறவே ஒழித்து விடுவார், போர்க்கருவியான வில்லும் ஓடிந்து போகும் வேற்றினதாத்ருக்கு அமைதியை அறிவிப்பார் என்றும் சமாதனத்தின் அடையாளமாய் மெசியா வருவார்" என்கிறார். போர்கருவிகளின் அழிவு -  போரின் முடிவு, 

அமைதி - சமாதானத்தின் தொடக்கம் இறைவாக்கினர் எசயாயவும் முடிவில்லா அமைதியை அருள்பவர் இறைவன் என்றும், போர்க்கருவிகள் எல்லாம் உழைப்பதற்கான வாழ்வின் கருவிகளாக மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவுறுத்துகிறார். எசா 2:4 "அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள். ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது” என்கிறார் மேலும்.

எசா. 9:5 *"அமளியுற்ற போர்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளும்,

இரத்தக்கறை படிந்த ஆடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்”* என்பதிலிருந்து போர்வன்மங்கள் மறைந்து சமாதானமும், அமைதியும், மெசியாவின் வருகையில் நிலைபெறும். எங்கெல்லாம் போருக்கு எதிரான, அநீதிக்கு எதிரான குரல்கள் ஒங்கி ஒலிக்கின்றனவோ அங்கே மெசியாவின் பிரசன்னம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டவர் இயேசுவின் பிறப்பின் போது தூதரின் வாழத்தும் இயேசு உயித்தெழுந்த பின் தம் சீடர்களைத் திடப்படுத்தும் போது வாழ்த்திய வாழ்த்தும் உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என்பதுதான். எனவே மெசியா அமைதியை விரும்புகிறவராக வெளிப்படுகிறார்.


4. இரக்கமும், பரிவும்

இறைவன் மனதுருகும் கடவுள் பிள்ளைகள் துயருறுவதை விரும்பாதவர். ஆகவேதான் மக்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் தவித்தபோது பரிவு கொண்டார் என்றுப் பார்க்கின்றோம் இயேசு பாவத்தை வெறுத்தார். ஆனால் பாவிகளை நேசித்தார். இயேசு, துன்புறுவோர், துயருறுவோர், ஒடுக்கப்பட்டோர், பாவிகள், சட்டத்தால் நசுக்கப்பட்டோர் மீது இரக்கம் காட்டுவார். மத். 11:28 "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்கிறார் நமதாண்டவர் இயேசு.

தி.பா. 34:18 "உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார். நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்" என்று தாவீதும் ஆண்டவரின் பரிவையும், இரக்கத்தையும் எடுத்தியம்புகிறார். எங்கு பரிவு, இரக்கம் குடிகொள்கிறதோ அங்கே மனிதம் குடிகொள்ளும்.

மானுடநேயப் பண்புகள் செழிக்கும், மனிதம் வாழும்.


நிகழ்வு 


29.06.2023 சமூக ஊடகச்செய்தி

நடிகர் படவாகோபி. ஹரிதா தம்பதியரின் மகள் ஆத்யா. ஆத்யா தன் ஐந்தாவது வயதில் திடீரென காலமானர். அவருடைய இறப்பிற்கு பிறகு, அவருடைய பிறந்தநாளை அக்டோபர் 18, 2007 "Aadya's Hug” என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்றை நிறுவினார்கள். இதுவரை அந்த டிரஸ்ட் மூலமாக 260 குழந்தைகளைக் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இந்த டிரஸ்ட் - ன் நோக்கம் வாழ்வு மறுக்கப்படும் குழந்தைகட்கு வாழ்வும், அக்குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைக் கொண்டாடக் கற்றுக் கொடுப்பதுமாகும் என்கிறார். சுயநலங்கள் மலிந்த இந்த உலகத்தில் இரக்கமும், பரிவும், பொது நல்நோக்கம் கொண்ட பல நல்ல மனிதகளால் தான் உலகம் இன்றும் வாழ்கிறது. ஆண்டவர் இயேசுவின் வேண்டுதல் கூட, எளியவரை மையப்படுத்தியதாய் அமைந்தது. அகங்காரமும் ஆணவமும் கொண்ட ஞானிகளைத் தவிர்த்து எளிய, தாழச்சியுமான

குழந்தைகளை முன்னிலைப்படுத்துகிறார். எனவேதான் மத.; 11:25 “இயேசு, தந்தையே விண்ணுக்கும், மண்ணுக்கும் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து குழந்தைகட்டு வெளிப்படுத்தினீர்” என்று வேண்டினார். நம் ஆன்மாவில் பயணப்பட வழிபாடு நமக்கு அழைப்பு கொடுக்கிறது.


மெசியா, நாம் வாழ்வாக்க அழைப்பு விடுக்கும் மதிப்பீடுகள் நம்மில் நிலைபெறுகிறதா சிந்திப்போம்.


✝️ஆண்டவர் இயேசு கனிவும், மனத்தாழ்மையும் உடையராய் வாழ்ந்தது போல் நாம் நம் வாழ்வில் எளிமையும், கனிவையும், மனத்தாழ்ச்சியையும் வாழ்வாக்குகிறோமா?

✝️ஆண்டவர் இயேசு அநீதியோடும், உண்மைக்குப்புறம்பாக நேர்மையற்றும் இருந்த பரிசேயர்களை - வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே என்று கண்டித்தது போலவும் அநீதிகள் நடைபெற்ற எருசலேம் ஆலயத்தில் தனி ஒருவராய் நீதியின் சாட்டையை ஏற்றியது போல் அநீதிகளை, நேர்மையற்றவைகளைக் களைய முன்வருகிறேனா?

✝️அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுபவர் என்ற ஆண்டவர் இயேசுவின் குரலுக்கு செவிமடுத்து அமைதியின் கருவியாய் நாம் செயலாற்றுகிறோமா?

✝️இரக்கமுடையோரையும், கனிவுடையோரையும் பாராட்டும் இறைவன், இந்த சமூகத்தை நாம் கனிவோடும், இரக்கத்தோடும் பார்க்க அழைக்கிறார். நாம் எத்தகைய உள்ளம் கொண்டு இந்த சமூகத்தைப் பார்க்கிறோம்.


சிந்திப்போம்!

மெசியாவின் அன்பு பிள்ளைகளாவோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (மனித நேயம் போற்றி வாழ்வோம்) - 08.07.2023 (சனி)


 

Tamil Catholic Status song (உன் போல பிள்ளை) - 08.07.2023


  

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (இரக்கத்தின் முகமாவோம்) - 07.07.2023 (வெள்ளி)






 

Tamil Catholic Status song (உன்னைத் தேடி தேடி அலைந்தேன்) - 07.07.2023


 

இன்றைய இறைசிந்தனை (இரக்கத்தின் முகமாவோம்) - 07.07.2023 (செவ்வாய்)