Sunday, March 31, 2024
Friday, March 29, 2024
ஆண்டவாின் உயிா்பு மறையுரை -31.03.2024.
👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
ஆண்டவரின் உயிர்ப்பு
31.03.2024
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
உண்மைகள் உயிா்கட்டும்
🔴மனித வாழ்வில் கஷ்டங்கள், தோல்விகள், தடைகளைக் கண்டு சோர்ந்து போகக்கூடாது என்பதற்கு உயிர்ப்பு ஓர் உந்து சக்தி.
🟣சோதனைகளால் உளம் சோர்ந்து போகிறவர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நம்பிக்கையின் ஒளிக்கீற்று.
🔵சாவதற்கு சாவு மணி அடித்து சரித்திரம் படைக்க முடியும் என்பதற்கு இயேசு விசுவாச மூலைக்கல்
🟡கல்லறைகள் உயிர்க்கும், கல்லறைகள் காவியம் ஆகும் என்பதற்கு இயேசுவின் உயிர்ப்பு ஓர் அடிநாதமாய் அமைகிறது.
🟢உயிர்ப்பில் நம்பிக்கையும், ஆன்மீகமும் துளிர்விடுகிறது.
🔴உயிர்ப்பு சாவிலிருந்து புது வாழ்வுக்கு கடக்கிறோம் என்ற கடத்தல் (பாஸ்கா) அனுபவத்தை எடுத்துரைக்கிறது.
🟣உண்மைகள் ஒருபோதும் உறங்கி விடாது உயிா்க்கும் என்பதற்கு "வழியும் உண்மையும், வாழ்வும் நானே" என்பதற்கு இயேசுவே சான்று.
🔵உண்மைக்குச் சான்று பகர்வதே என் பணி என்ற இயேசு இருளிலிருந்து வெளிச்சப்புள்ளியாய் உதித்து உண்மையை உரக்கச் சொன்னார்.
🟡"எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்" என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகள், உண்மை என்பதை தம் உயிர்ப்பின் வழி நிருபணமாக்கினார்.
நிகழ்வு (2024 மார்ச் - ஊடகச் செய்தி)
ஓரளவு வசதிப்படைத்தோர் பயிலும் பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு, உலகின் நடைமுறைகளை புரிய வைக்க முதியோர் இல்லம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். 6,7 மற்றும் 8 - ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள். பிள்ளைகள் அந்த முதியோர் இல்லத்தில் இருந்த நூற்றுக்கு அதிகமான முதியவர்களை தனித்தனியாக சந்தித்தனர். ஒரு சிறுமி திடீர் என்று கதறி அழுதாள். ஒரு வயதானவரை இறுகக் கட்டி அணைத்தவாறு அழுதாள், எல்லாரும் அவளைச் சூழ்ந்து நின்று ஏன் என்று விசாரிக்க உண்மைப் புலப்பட்டது.
இக்குழந்தை அவள் பாட்டியிடம் மிகபாசமாக இருப்பார். பாட்டியும் மிக அன்புடன் இருப்பார். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் பாட்டியை வீட்டில் காணவில்லை. பெற்றோரிடம் விசாரித்தாள். அவர்கள், அவளிடம் பாட்டி உறவினர் வீட்டிற்குச் சென்று இருக்கிறார் என்றனா், அவளும் தினமும் தன் பெற்றோரிடம் பாட்டிக் குறித்து விசாரிப்பார். அவர்கள் ஒரே பதிலைத்தான் கூறினர். உறவினர் வீட்டில் இருக்கிறார் என்று சொல்லப்பட்ட பாட்டியைத்தான் அக்குழந்தை முதியோர் இல்லத்தில் பார்த்து உள்ளம் உடைந்து, உணர்வுகள் பொங்க கட்டித் தழுவி அழுது, அதிர்ந்து போனது. பாட்டியும் கண்ணீரோடு பேத்தியைத் தழுவி கண்ணீர் வடித்தார்.
🟢வயது சென்றால் வாழ்வுக்கு ஆகாது என்று ஒதுக்கி பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் மனிதரின் ஈனச்செயல் இது. பொய்யுரைகளால் உண்மையான பாசத்தையும், நேசத்தையும், அன்பையும் நீ அடைந்து விட முடியாது.
🟣பொய்களை புனைந்து உறவுகளை நீ புதைத்து விட முடியாது.
🔵பிள்ளைகளின் மனங்கள் மலட்டுத்தன்மை எய்தியதால் அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் மலிந்து கிடக்கிறது.
🟡பாசப்பிணைப்பை பொய்களால் புதைத்தாலும் உண்மை உறவுகள் ஒரு நாள் உயிர்க்கும், என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுப் பதிவு.
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்று, உண்மையாகிய கிறிஸ்து எத்தகைய விதங்களில் உயிர்ப்பார் என்பதைச் சிந்திப்பது நல்லது.
1. யோவான் 1:5 "அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. இருள் அதன் மேல் வெற்றிக் கொள்ளவில்லை" மக்கள் சட்டங்கள், பாரம்பரியம், ஆணவம், வீண் ஆடம்பரம் என்ற இருளில் இருந்த போது, கடவுள் எளிமையும், தாழ்ச்சியும், பரிவும் நிறைந்தவராய் ஒளிர்ந்தார்.
யோவான் 8:12 "உலகின் ஒளி நானே" என்ற இயேசு காரிருளில் நடந்த மக்கள் பேரொளியைக் காணுமாறு இருள் நிறைந்த கல்லறையில் இருந்து பேரொளியாய் உதித்தார்.
2. யோவான் 10:10 "ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாய் பெறும் பொருட்டு வந்துள்ளேன்" என்ற நல்லாயன் இயேசு, வழி தவறியவற்றையும், காணாமல் போனவற்றையும், அலைந்து திரிந்தவற்றையும், காயப்பட்டவற்றையும், நலிந்தவற்றையும் நிறைவாழ்வு நோக்கி வழிநடத்த நல்லாயனாய் இயேசு உயிர்த்தார்.
3. யோவான் 11: 25 "உயிர்த்தெழுதலும், வாழ்வும் நானே" என்றவர் மானுடக் குழந்தைகள் பாவ நோயில் புதையுண்டு, மானுடம் மாண்பை இழந்து நின்றபோது வாழ்வு தரும் ஒளியாகிய கிறிஸ்து மானுடக் குடும்பத்தை மீட்கும் இலட்சிய பிடிப்பால் இருளாகிய கல்லறையில் இருந்து உயிர்தெழுந்தார். ஆகவே நாம் வாழ்வடைந்தோம்.
🟢 ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நமக்கு விடுக்கும் அழைப்பு யாதெனில் உண்மையாகிய கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாம் பித்தலாட்டங்கள், புரையோடிய பொய் புரட்டுகள் - இவற்றை நாம் அடக்கம் செய்துவிட்டு உண்மைக்கு உயிருள்ள சாட்சிகளாய் மாற அழைக்கிறது.
🔴 தவறுகளை நியாயப்படுத்தி நம்மை நீதிமான்களாக சித்தரிக்கும் பரிசேய தனங்களைப் புதைத்து, உண்மைக்கு சான்று பகரும் உயிருள்ள சாட்சிகளாய் உயிர்ப்போம்.
🟣 உண்மைக்கு எதிரான பொய் பிரச்சாரங்கள், உண்மைக்கு புறம்பான புரணிகள், இழிவான செயல்களை அடக்கம் செய்துவிட்டு உண்மையை நீதியை நிலைநாட்டுவோம்.
🔵முகத்தின் முன் நல்லது பேசி, பின்னர் பழித்துரைக்கும் பரிசேயர் வெளி வேடங்களில் இருந்து உயிர்ப்போம்.
🟡கடமையைச் செய்யாமல் சோம்பித் திரியும் பொறுப்பற்ற தனங்களிலிருந்து உயிர்ப்போம்.
🔴போதை, மதுவிற்கு அடிமையாகி, மனித மாண்பை இழந்து விலங்கினும் கடையராய் சுற்றித் திரியும் அவல நிலையில் இருந்து உயிர்ப்போம்.
🟢இந்த சமூகத்தில், அருகில் வாழும் மக்களுக்கு நன்மை செய்யும் திறமை, வாய்ப்பு இருந்தும் செய்யாமல் பாராமுகமாய் இருக்கும் பொறுப்பற்ற நிலையில் இருந்து உயிர்ப்போம்.
🟣நான் என்னும் ஆணவம், பொறாமை, இணைந்து பணியாற்ற முன்வராமை, கட்சி மனப்பான்மையை புதைத்து, நாம் எல்லாரும் ஒரே கடவுளின் பிள்ளைகள் என்ற உயரிய சிந்தனையோடு ஒன்றுபட்டு வாழ, உழைக்க கடவுளின் கரங்களாய் உயிர்ப்போம்.
🔵வயது முதிர்ந்தவர்களை மதியாமை, அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமை, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யாமை போன்ற உணர்வற்ற நிலையில் இருந்து விடுபட்டு, இவர்களின் சாமகாவலன், சமாரியன் நான் என்ற இறையாட்சியின் விழுமியங்களை தாங்கியவர்களாய் வாழ புதிதாய் பிறப்பெடுப்போம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
Thursday, March 28, 2024
Tuesday, March 26, 2024
புனித வெள்ளி மறையுரை -29.03.2024.
👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
புனித வெள்ளி
29.03.2024
எசாயா 52 : 13 - 53 : 12,
எபிரேயர் 4 : 14 - 16, 5:7 - 9,
யோவான் 18: 1 - 19:42 .
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
தியாக பலியாய் கிறிஸ்து
🔴உலக வரலாற்றில் பலர், தங்களுடைய உயிரை, மக்களுக்காக, தேசத்திற்காக, தியாகம் செய்துள்ளனர். ஆனால் எந்த மனிதருடைய அல்லது எந்த தலைவர்களுடைய இரத்தமும், மக்களின் பாவக்கறைகளை கழுவியதாக வரலாறு இல்லை.
🔴ஆனால் ஆண்டவர் இயேசுவின் இரத்தமே மக்களை மீட்பதற்காய் சிந்தப்பட்ட இரத்தம்.
மத்தேயு 26:28 "பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" என்று நற்செய்தியாளர் மத்தேயும், உரோமையர் 5:9 "இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவராகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம்" என்று தூய பவுலும் எடுத்துரைக்கின்றனர்.
🔴பிறருக்காய் பலியாய் தன்னை இழப்பதே கிறிஸ்தவம் நல்லாயன் இயேசு, அவரின் மக்களாகிய நாம் நிறைவாழ்வு பெறும் பொருட்டு வந்தார்.
யோவான் 10:10 "நான் ஆடுகள் வாழ்வை பெறும் பொருட்டு அதுவும் நிறைவாக பெறும் பொருட்டு வந்துள்ளேன்" என்றார்.
🔴நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக தன் உயிரைக் கொடுப்பதைப் போல், ஆண்டவர் இயேசுவும் தன் உயிரை தியாக பலியாக்கி நம்மை மீட்டார். அவ்வாறு நம்மை மீட்க இயேசு பலியாகிய நாள் தான் புனித வெள்ளி. இந்த நாள் இயேசுவின் பாடு, மரணம் இவற்றை எண்ணி கண்ணீர் வடிப்பதற்கு அல்ல மாறாக, அவரின் மதிப்பீடுகளை வாழ்வாக்க அழைக்கப்படுகின்றோம்.
நிகழ்வு
1980 - ஆம் ஆண்டு, சிங்கள மற்றும் விடுதலை புலிகளுக்கான போர் நடைபெற்ற நாட்கள். தமிழீழ விடுதலை புலிகளின் பல நூறு குடும்பங்கள் புலம்பெயர்ந்து காட்டுப்பாதை வழியாக இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தனர். சற்றுத் தொலைவில் சிங்கள இராணுவ வீரர்கள் அவ்வழியே வந்தாா்கள். எல்லாரும் அமைதியாய் புதருக்குள் சப்தமின்றி மறைந்தனர். இராணுவம் அருகில் நெருங்கும்போது, குழந்தை ஒன்று அழுதது. இந்தக் குழந்தை அழுகுரல் விடுதலைப்புலி மக்களை இராணுவத்திடம் காட்டி கொடுத்துவிடும். கொள்கைக்காய், விடுதலைக்காய் போராடும் பல நூறு பேர் மாண்டுபோவர். எனவே அக்குழந்தையின் தாய், அழும் குழந்தையின் வாயில் தன் கைகளை வைத்து அடைத்தார். சற்று நேரத்தில் குழந்தை அமைதியானது. ராணுவ வீரர்கள் அவர்களை கடந்து சென்றபின், அத்தாய் தன் குழந்தையைப் பார்த்த போது குழந்தை இறந்திருந்தது. தன் இனத்தை காக்க தன் இலட்சியத்தை அடைய, தன் தேசத்திற்காய் தன் பிஞ்சு குழந்தையை, தியாக வேள்வியாக்கிய நிகழ்வு இது.
இன்றைய நாள் இதை விட கொடுமையான ஒன்றை நமக்கு சுட்டி நிற்கிறது. மானிடர் நாம் தவறுகள் செய்து, கீழ்ப்படியாமல், பாவத்தில் திழைக்க நம்மை சாவிலிருந்து மீட்டு வாழ்வு தர தந்தை கடவுள் தன் ஒரே மகனாகிய கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தம் சிந்தப்பட்ட நாள்.
உலகின் எல்லாச் சமயங்களிலும், அவர்களின் கடவுளுக்காய் மக்கள் தங்களை வருத்துவர். கடவுளுக்காக இரத்தம் சிந்துவர். ஆனால் நம் ஆண்டவர் இயேசு பிள்ளைகள் நமக்காய் துன்புற்று, நொறுக்கப்பட்டு, சிலுவையில் பாவ உரு ஏற்று, பலியான நாள்.
🔴நாம் வாழ தெய்வம் தன்னைப் பலியாக்கிய நாள் தியாகமாய் ஒப்புக்கொடுத்த நாள்.
ஏன் தியாகப் பலியானார் ?
1. நமது செயல்பாடுகள் என்ற பதில் கிடைக்கும்
தொநூ 1:31 "கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார் அவை மிகவும் நன்றாக இருந்தன. என்று மகிழ்ந்த ஆண்டவரின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை காரணம் மனிதன்,
🔴மனிதன் - கடவுளைப்போல் மாற வேண்டும் என்ற பேராசை கொண்டான். வாழ்வு தந்தவரின் வாக்கை நிராகரித்து வாழ்வை எடுப்பவரின் வலையில் விழுந்தான். (தொநூ 3:5)
🔴மனிதன் கீழ்ப்படியாமையால் விலக்கப்பட்ட கனியை உண்டான் (தொநூ 3:6)
🔴மனிதன் - தன் சகோதரன் மீதே பொறாமை வளர்த்தான். பொறாமை கடுஞ்சினமாக மாறியது (தொநூ4:8) கடுஞ்சினம் சூழ்ச்சியாக மாறியது (தொநூ 4:8) சூழ்ச்சி - கொலையாக மாறியது (தொநூ 4:8)
🔴மனிதன் ஒழுக்க கேட்டிற்கு உள்ளானான். நோவா வழி எச்சரித்தார் (தொநூ 6 - ஆம் அதிகாரம்)
🔴மனிதன் - தற்பெருமைப் பாராட்டினான், அவர்கள் பெயர், புகழ் நிலைக்க பாபேல் கோபுரம் கட்டினர் (தொநூ 11) பிற வழிபாடு என்று ஆண்டவரின் அன்புக்கு எதிராய் தவறுகள் செய்து தங்களைக் கடவுளின் அன்பிலிருந்து பிரித்தனர். இப்போது தொநூ 6:6 "மண்ணில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார்" என்று திருமறை அறிவுறுத்துகிறது.
மானுடர்களின் தீய வழியைக் கண்ணுற்ற இறைமகன் இயேசு, அவர்களை மீட்க, தன்னை தியாகப்பலியாய் மாற்ற வேண்டியிருந்தது.
2. பழைய ஏற்பாட்டு காலத்தில் லேவியராகமம் 16 - ஆம் அதிகாரத்தில் கூறப்படுவது போல், இஸ்ரயேல் மக்கள் உயிரோடிருக்கும் ஆட்டுக் கிடாயை கொண்டு வந்து, அவற்றின் மீது கைகளை நீட்டி எல்லா பாவங்களையும் அறிக்கையிடுவார். பின்னர் அது பாலை நிலத்திற்கு அனுப்பப்படும். அந்த வெள்ளாட்டுக் கிடாய் அவர்களின் பாவங்களைச் சுமந்து செல்லும் அதுபோல
புதிய ஏற்பாட்டில் இயேசு பாவத்தைச் சுமக்கும், போக்கு ஆடாக வந்து, பலியாகி, பாவத்தளைகளை அறுத்தார்.
3.விடுதலைப்பயணம் 11 மற்றும் 12 ஆம் அதிகாரத்தில் கூறப்படுவதுபோல், இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் கொல்லப்பட்டன. இஸ்ரயேல் மக்களின் குடும்பங்களின் வாயில் நிலைகளில் செம்மறி அல்லது வெள்ளாடு இவற்றின் இரத்தம் தெளிக்கப்பட வேண்டும். ஆண்டவரின் தூதர் இரத்தத்தை நிலவாயிலில் கண்டால் கடந்து போவார். இஸ்ரயேலருக்கு நிலைவாயிலில் தெளிக்கப்பட்ட இரத்தம், வாழ்வின் அடையாளமாயிற்று.
விப 12:3 "இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன்" இரத்தம் மீட்பின் அடையாளமாயிற்று இஸ்ரயேலருக்கு, புதிய ஏற்பாட்டில் இயேசுவின் விலாவிலிருந்து பாய்ந்த இரத்தம் நாம் பாவத்திலிருந்து கடந்து வர, வாழ்வு பெற உதவியது.
1பேதுரு 1:19 "மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும்" நமது மீட்பின் அடையாளமாய் அமைந்தது.
ஆனால் மனிதர் நாம் பல நேரங்களில் இதை உணர்வது இல்லை. உணர வேண்டும் என்று முயல்வதும் இல்லை. ஆனால் தந்தை கடவுள் நாம் பாவ நிலையிலிருந்து கடந்து வந்து, புது வாழ்வு பெற தன் மகன் கிறிஸ்துவை பாவ நிலை ஏற்கச் செய்தார்.
2கொரி 5:21 "நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவமறியாத அவரைப் பாவ நிலை ஏற்கச் செய்தார்" இறைமகன் இயேசு பாவ உரு ஏற்று தியாக பலியாக ஒப்புக் கொடுத்தபோது எப்படி இருந்தாரெனில் எரேமியா 11:19 "வெட்டுவதற்கு கொண்டுச் செல்லப்படும், சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்" என்று விளக்கப்படுகிறது.
ஆண்டவர் இயேசு தன்னை நமக்காக பாவம் போக்கும் தியாக பலியாக ஒப்புக் கொடுத்திருக்கிறார். இதனை இறைவாக்கினர் எசாயா விவரிக்கும் போது
1. அவர் நம் குற்றங்களுக்காக காயமடைந்தார் (எசாயா 53:5)
2. நமக்கு நிறை வாழ்வை தர அவர் தண்டனை ஏற்றார் (எசாயா 53:5)
3. நம் தீச்செயல்களை தாமே ஏற்றுக் கொண்டார் (எசாயா 53:6)
4.வெட்டுவதற்குக் கொண்டுச் செல்லப்படும் செம்மறிப்போல் நடந்தார் (எசாயா 53:7)
5.அவ்வாறு கொண்டு செல்லும் போது பார்ப்பதற்கேற்ற தோற்றம் இல்லை. உருக்குலைந்து காணப்பட்டார் (எசாயா 53:2)
6. மக்களால் புறக்கணிக்கப்பட்டு இகழப்பட்டார் (எசாயா 53:3)
நமக்காய் இத்தனைத் துன்பங்களை தியாகச் செம்மறி ஏற்றுக் கொண்டது.
இன்றைய வழிபாடு நம்மை சுய ஆய்வற்கு இட்டுச் செல்லட்டும்.
🔴"உமக்கு நாங்கள் ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே" என்று அழுது, புலம்பும் நாம், நம்மோடு வாழும் மக்களின் வேதனை, துன்பங்களைக் கண்டு ஆறுதல் வழங்குகிறோமா?
🔴பொறுத்தருளும் கர்த்தாவே உமது சனத்தின் பாவங்களை ஏற்று பரிதவித்து பாடும் நாம், பிறர் நமக்கு எதிராகச் செய்யும் சிறு தவறுகளை பொறுக்கும் மனநிலையில் வாழ்கிறோமா?
🔴ஆண்டவருக்காய் என்னையே இழப்பேன் என்று கூறும் நாம் அடுத்தவருக்காய், சமூகத்திற்காய், தேவையில் இருப்போருக்காய் சிறு துரும்பைக் கூட இழக்க முன்வருவதில்லையே!
🔴தன்னை நேசிப்பது போல் பிறரை நேசிக்க சொன்ன ஆண்டவர் இயேசுவின் தியாகப் பலியில் கலந்து கொள்ளும் நாம், பிறரை முழு மனதுடன் ஏற்கும், நேசிக்கும் உளப்பாங்கு கொண்டிருக்கிறோமா?
🔴சென்ற இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்து, பிறருக்கு வாழ்வு வழங்கிய இயேசுவைப் போல் நம் நற்செயல்களால் இயேசுவின் பிள்ளைகள் என்பதை உலகறியச் செய்கிறோமா?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
புனித வியாழன் மறையுரை -28.03.2024.
👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
புனித வியாழன்
28.03.2024
விப 12 : 1 - 8, 11-14,
1கொரி 11 : 23 - 26,
யோவான் 13: 1 - 15 .
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
நற்கருணை - அன்புறவு
♦️நற்கருணை - அன்பின், தியாகத்தின், பகிர்வின், அடையாளம்
♦️அன்பு என்றாலே அது கிறிஸ்துவின் அடையாளம். எனவே கிறிஸ்தவ அன்பிற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு.
♦️இயேசு அப்பமாக உடலையும், உயிராகிய இரத்தத்தையும் ஈந்து தான், புதிய உடன்படிக்கையை நிலைநிறுத்தினார்.
♦️எனவே இயேசுவின் அன்பு என்பது, தன்னலமற்ற, தியாகத்தின் அன்பு. இத்தகைய அன்பைத்தான் நாம் வாழ்வாக்க அழைக்கப்படுகின்றோம்.
♦️நற்கருணையிலும், பணியிலும், பாதம் கழுவுதல் வழியாகவும் புதிய இலக்கணத்தை வகுத்தார்.
♦️திருமுழுக்கின் வழியாக இயேசுவின் பணிக் குருத்துவத்திலும், பொதுகுருத்துவத்திலும் பங்குபெறும் நாம், அவருடைய அன்பிலும் பங்கு பெற்று, பிறருக்கு கிறிஸ்துவின் அன்பை வழங்க முன்வரவேண்டும்.
🔴அன்பு என்பது - வல்லமை, ஆற்றல், ஆக்கம்
🔴அன்பு - வாழ்வுக்கு பொருள் கொடுக்கும்
🔴அன்பு - விவரிக்க இயலா அனுபவம்
நிகழ்வு
1951 - ஆம் ஆண்டு "ரீடர்ஸ் டைஜஸ்ட் " என்ற ஆங்கில பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்தி.
இங்கிலாந்தில் "டின்டோ" என்ற மிகப்பெரிய நகைக்கடை, அங்கு ஒரு நாள் ஒரு நான்கு வயது உள்ள குழந்தை உள்ளே நுழைந்தாள். சற்று நேரம் அங்கு இருந்த நகைகளை உற்று நோக்குகிறாள். பின்னர் அந்த நகைகடையின் உரிமையாளர் "பீட்" என்பவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறினாள். அவரிடம் அழைத்துச் சென்றனர். அந்த நான்கு வயது சிறுமி, கடை உரிமையாளரிடம் ரத்தினகற்கள் பதிக்கப்பட்ட மாலைகள் பார்க்க வேண்டும் என்றாள். அவரும் அக்குழந்தைக்கு பல ரத்தின மாலைகளை எடுத்துக்காட்டினார். சற்று நேரம் பார்த்த பின்பு தான் விரும்பிய மாலையைத் தேர்வு செய்தாள். பின் அதை பார்சல் செய்யச் சொன்னாள்.
கடை உரிமையாளர், அக்குழந்தையிடம் இதை யாருக்கு வாங்குகிறாய் என்றுக் கேட்டார். என் அக்காவிற்கு என்று குழந்தை பதில் சொன்னது. குழந்தைத் தொடர்ந்தாள். எனக்கு அப்பா, அம்மா இல்லை. எனக்கு அப்பாவும், அம்மாவும் என் அக்கா தான் நாளை மறுநாள் என் அக்காவிற்கு பிறந்தநாள். எனவே என் அக்காவின் அன்பிற்கும், அவரின் தியாகத்திற்கு ஈடாக இந்த மாலையைப் பரிசளிக்கப் போகிறேன் என்றாள். இதற்கான விலையை யார் கொடுப்பார்கள் என்று அந்த உரிமையாளர் கேட்க, தன் கையில் வைத்திருந்த கைகுட்டையை அவரின் மேசை மீது போட்டாள். அதில் "12 சென்ட்" காசுதான் இருந்தது. ஆனால் அவர் தேர்வு செய்த மாலை அன்றே பல நூறு டாலர் மதிப்புள்ளது. ஆயினும் பிஞ்சுக் குழந்தையின் உள ஆவலையும், தூய அன்பையும் உணர்ந்த கடைக்காரர் கொடுத்து அனுப்பினார்.
மறுநாள் காலை அச்சிறுமி அக்கா, அவளும் குழந்தை தான் ஏழு வயதிருக்கும், அந்தக் கடைக்குச் சென்று இவள் இதை வாங்கியது உண்மையா? என்று கேட்டாள். அவர், அவள் வாங்கியது உண்மைதான். ஆனால் அவளுக்கு இதன் விலை புரியாது. மாறாக அக்குழந்தையின் தூய அன்பிற்கு முன் இது ஒன்றும் பெரிதில்லை. உன் தங்கை உன் மேல் வைத்துள்ள அன்பு விலை மதிப்பற்றது. அதை ஈடு செய்ய முடியாது என்றார்.
இன்றைய நாள் விழாவும் இயேசுவின் எல்லையற்ற அன்பை மூன்று கோணங்களில் புலப்படுத்துகிறது.
நற்கருணை
நற்கருணை - நல்ல + கருணை (இரக்கம்)
இயேசு நம்மை நேசித்ததன் மொத்த அன்பின் வெளிப்பாடு நற்கருணை.
இயேசுவின் பணிவாழ்வில் பரிவாய், இரக்கமாய் , மன்னிப்பாய் வெளிப்பட்டது அன்பு. இப்போது நற்கருணையாய் வெளிப்படுகிறது.
யோவான் 13:1 "உலகில் வாழ்ந்த தமக்குரியவர் மேல் அன்பு கொண்டிருந்த அவா் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்" இந்த அன்பின் வெளிப்பாடு தான் நற்கருணை.
1 கொரி 11:24 "இயேசு அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அதை பிட்டு இது உங்களுக்கான என் உடல்" என்றாா்.
இயேசு தன்னை உடைத்ததால், நாம் வாழ்வு பெற்றோம் இயேசு தன்னை பகிர்ந்ததால் நாமும் அவரைப் போல் பகிர அழைக்கப்படுகின்றோம்.
ஒருவேளை உணவிற்காக, தன் உறவுகளை, தன் மனிதத்தை சிதறடித்து வாழும் மானுடர் நடுவில், அன்புக்காக உறவுக்காக தன்னை நிறைவாழ்வு தரும் உணவாக்கினார் இயேசு.
யோவான் 6:51, 58 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அது உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" என்றார்.
நற்கருணை ஒரு சமத்துவ விருந்தாகிறது. எல்லாரும் ஒன்றாகி, நன்றாக, வேற்றுமை களைய தன்னை உணவாக்கினார். பிறர் வாழ்வடைய தன்னை உணவாக உடைத்தார்.
யோவான் 15:13 "தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்று இயேசு நமக்காக தன்னைப் பலியாக்கி, உணவாக்கினார்.
தொடக்க கால திருஅவை நற்கருணையை மையப்படுத்திய சமூகமாக அமைந்தபோது அது
அனைவரின் நல்லெண்ணத்தைப் பெற்றது.
கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
அந்த இறை சமூகம் வளர்ந்தது. ஏனெனில் அந்த சமூகத்தில், பகிர்வு, அக்கறை, புரிதல் உள்ள அன்புடை சமூகமாக நற்கருணை சமூகம் இருந்தது.
2. குருத்துவம்
திபா 110:4 "மெல்கிசேதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே"
🟡இயேசுவின் குருத்துவம் சற்று உயர்வானது, மாறுபட்டது.
🔴ஏனெனில் இயேசுவே குருவும், பலிபீடமும், பலிப்பொருளுமாய் விளங்கினார்.
🟢நித்திய குருவாய் இயேசு, தன்னையே பலிப்பொருளாய் மாற்றி, நமது பாவம் போக்கும் பலியாகத் தன்னை ஒப்புக் கொடுத்தார்.
மத்தேயு 26:28 "பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" நம் பாவம் போக்க இயேசு பாவம் போக்கும் பலியாக மாறினார்.
🔴பழைய ஏற்பாட்டில் குருக்கள் செம்மறியை பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
🟣புதிய ஏற்பாட்டில் செம்மறியாகி கிறிஸ்து தன்னை பலியாக்கினார்.
🟡பழைய ஏற்பாட்டில் அடிமையில் இருந்து விடுதலை வாழ்வுக்குக் கடந்தனர்.
🔴புதிய ஏற்பாட்டில் பாவத்தழைகளை ஒழித்து புது வாழ்வு பெற்றோம்.
குருத்துவ பணிவாழ்வின் மனநிலை
பிலிப்பியர் 2:5 "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்" என்று தூய பவுல் அறிவுறுத்துகிறார்.
கிறிஸ்துவின் மனநிலை என்ன?
தாழ்ச்சி - வார்த்தை மனு உருவானது (நம்முள் ஒருவராய் வந்தது)
எளிமை - வெறுமையாக்கி, அடிமையாக்கி, மனிதருக்கு ஒப்பாகக் கருதப்பட்டது.
தந்தைக்கு கீழ்ப்படிதல் - சிலுவைச் சாவை ஏற்கும் அளவிற்கு தன்னைத் தாழ்த்தியது. அவரின் கீழ்படிதல்.
பணி அர்ப்பணம் உடையவராய் விளங்கியதைப் போல் குருத்துவ பணியாற்ற அழைக்கப்படுகின்றோம்.
எந்த நேரம் இயேசுவை மக்கள் சந்தித்தனர்
🔵நிக்கோதேம் - நள்ளிரவில் - சந்தித்தார்
🔵தொழு நோயாளர் - ஊருக்கு புறம்பே - சந்தித்தார்
🔵சமாரியப்பெண் - பாவியாக கருதப்பட்டவள் - சந்தித்தார்
🔵கானா திருமணத்தில் - சாமானியர்கள் சந்தித்தனர்
🔵எருசலேம் ஆலயத்தில் - மறைநூல் அறிஞர்கள் சந்தித்தனர்.
♦️இயேசுவின் பணி குருத்துத்தில் கால அட்டவணை இல்லை இயேசு பகுதி நேரம் பணியாளர் அல்ல. எல்லாருக்கும் எல்லாமாய், எப்பொழுதுமானவர். அந்தக் குருத்துவத்தை வாழ்வாக்கத்தான் அழைக்கப்படுகின்றோம்.
♦️இயேசுவின் பணி குருத்துவம் பரிவிரக்கம் நிறைந்த பணியாக இருந்தது. தேவை அறிந்து உதவுவது குருத்துவம். போதனையைக் கேட்க வந்த மக்கள் மீது பரிவு கொண்டு நோய்களை நீக்கி, அப்பம் பலுகச் செய்து உடல் பசியை போக்கினார் (மத் 14:13-21)
♦️ஆன்ம தாகம் கொண்ட சக்கேயுவை அழைத்து, அவனை மாண்புறச் செய்து அவன் ஆன்ம பசியை போக்கிய போது புது மனிதனாகி மீட்பைப் பெற்றான்.
3. பணிவாழ்வு
இயேசுவின் பணிவாழ்வு எப்படிப்பட்டது எனில் மத்தேயு 20:28 "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தன் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்"
🔵பணிவாழ்வின் அடையாளம், எளிமையும், தாழ்ச்சியும்
🟢தம் சீடர்கள் எத்தகைய பணியை முன்னெடுக்க வேண்டும் என்பதை தம் செயல்கள் வழி அறிவுறுத்தினார்.
யோவான் 13:5 "ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து, சீடர்களுடைய காலடிகளைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்" இந்தச் செயல் யூத மரபில் வீட்டிற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள், கால்களை அடிமைகளை அல்லது வேலையாட்களை வைத்து கழுவுதல் விருந்தினர்களுக்குக் கொடுக்கும் மரியாதையாகக் கருதப்பட்டது.
🔴இயேசு ஒரு அடிமையாக தன் பணியைச் செய்தார்.
🟣இத்தகையப் பணியைச் செய்ய உயர்ந்தவன், தாழ்ந்தவன், நான் உயர் பதவியில் இருக்கிறேன், நான் கற்றவன் என்ற ஆணவ வாயை அறுத்து எளிய மனநிலையே பணி வாழ்வுக்கு உகந்தது என்று அறிவுறுத்தினார்.
🟡இயேசுவோடு பயணித்த சீடர்கள், இயேசுவையும், இயேசுவின் பணியையும் சரியாகப் புரியாமல், தங்களுக்குள் யார் பெரியவர், யார் வலப்புறம், இடப்புறம் அமர்வது என்ற யூகங்களுக்குள் புதையுண்டு கிடந்த போது இயேசு புதிய பாடம் கற்றுக் கொடுத்தார் பாதம் கழுவுதல் வழியாக
🔵கிறிஸ்து, கிறிஸ்தவம் என்றாலே பணிதான். சொல்லித்திரிவதோ, விளம்பரப்படுத்துவதோ அல்ல. மாறாக பணிவோடு பணியாற்ற பயணிப்பது கிறிஸ்தவம்.
🟢இயேசு நமக்குச் சுட்டிக் காட்டிய பணி கிறிஸ்தவம் இன்று எப்படி சிதைந்து கிடக்கிறது. அடிப்படைவாதமாக, அதிகாரமாக அடையாளங்களை முன்னிலைப்படுத்துவதாக சிதைந்து திரிந்து கிடக்கிறது.
🔴இயேசுவின் பணிவாழ்வும், இயேசுவின் இலட்சிய தெளிவும் நம்மில் நிலை பெற மன்றாடுவோம்.
🟣இயேசு இந்தப் பணிகளைச் செய்யும் முன், இரவெல்லாம் தனிமையில் கருக்கலோடு செபித்தார். அப்பா அனுபவம் பெற்றார் லாசரை உயிர்ப்பிக்கும் முன் கூட
யோவான் 11:42 "தந்தையே என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்" என்றார். இது இயேசுவின் அப்பா அனுபவம்.
🟡சீடர்கள் அவரின் நிலை பெற பணிந்தார். சீடர்களை அழைத்து அவர்களுக்கு வழங்கிய முதல் அறிவுரை மாற்கு 3:14 "தம்மோடு இருக்கவும்" என்பதுதான், ஏன் அவரோடு இருக்க வேண்டும்?
யோவான் 15:5 "ஒருவர் என்னுடனும், நான் அவருடனும் இணைந்து இருந்தால் அவர் மிகுந்த கனிதருவார்".
🔵மிகுந்த கனிதர, வாழ்வு அர்த்தமுள்ளதாக, பணிகள் பண்பட, வளம் பெற அவரோடு இணைவது அவசியம்.
🟣எனவே இந்த நாளில் உலகம் முழுவதும் பணியாற்றும் குருக்கள், ஆயர்கள், திருத்தந்தைக்காக மன்றாடுவோம். இயேசுவின் பணியை முன்னெடுக்கவும், சாட்சிய வாழ்வு வாழவும் வர வேண்டுவோம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
Monday, March 25, 2024
Sunday, March 24, 2024
Friday, March 22, 2024
குருத்து ஞாயிறு மறையுரை -24.03.2024.
👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
குருத்து ஞாயிறு
24.03.2024
எசாயா 50 : 4 - 7,
பிலிப்பியர் 2 : 6 - 11,
மாற்கு 14: 1 - 15 : 47.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
இலட்சிய மிகு எருசலேம் பயணம்
♦️இயேசுவின் எருசலேம் பயணம் ஒரு எழுச்சிப்பயணம்
♦️இலக்கும், இலட்சிய பிடிப்பும் நிறைந்த இறையாட்சிப் பயணம்.
♦️தன்னை இழக்க இதய உபப்புடன் பயணித்தப் பயணம்.
♦️கடுமையான சட்டங்கள், கொடிய தண்டனைகள், சுமத்தற்கரிய வரிகள் இவற்றால் நொறுக்கப்பட்ட மக்கள், இயேசுவை மீட்பராக ஏற்று ஓசன்னா பாடி அழைத்துச் சென்ற பயணம்.
♦️ஓசன்னா என்றால் "எங்களை விடுவித்தருளும்" எங்களைக் காப்பாற்ற வாருமே என்பதாகும்.
♦️வறியவர், நலிந்தவர்களுக்காய் நிலைப்பாடு எடுத்து, அவர்களுக்காக உழைக்க துணிந்தால் தன்னை பலியாக்க வேண்டும் என்பதை இயேசு நன்கறிவார்.
♦️எனினும் இயேசு பின்வாங்கவில்லை இலட்சியப்பிடிப்போடு, இலக்கை அடைய துணிந்து பயணமானார்.
♦️உரோமையரின் பிடியிலிருந்து எங்களை விடுவித்து நிலையான அரசை நிறுவுவார், அடிமை வாழ்விலிருந்து விடுதலையும், வெற்றியும் தருவார் என்று நம்பியிருந்த யூதர்கள், நம்மைப் பாவத்திலிருந்து விடுவிப்பார், அதற்குப் பலியாக எருசலேம் பயணப்பட்டார் என்பதை அறியாதிருந்தனர்.
♦️ஊரறிந்த கள்ளனோடு (பரபாவோடு) தன்னை ஒப்புமைப்படுத்தி, தன்னை இழிவுப்படுத்திக் கொல்வார்கள் என்பதை தெரிந்தும் இலட்சியத் துடிப்போடு, எழுச்சியோடு பயணமானார் இயேசு எருசலேம் நோக்கி.
♦️மிகத்திறந்த மனநிலையோடு, முள்முடி தாங்கி, கைகால்கள் ஆணிகளால் துளைக்கப்பட, ஆடை களைந்து அவமானப்படுத்தப்பட்டு கழுமரத்தில் ஏற்றுவார்கள் என்பது தெரிந்தும் பாடுகளை ஏற்க எருசலேம் பயணமாகிறார் இயேசு.
நிகழ்வு
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகராகவும், யூனியன் பிரதேசமாகவும் விளங்கும் சண்டிகாரில் பல்ஜிந்தர்சிங் ரியார் மற்றும் டேக்தீர்குர் ஆகியோரின் மகளாகப் பிறந்தவர் ருக்மணி ரியார். சிறுவயதிலேயே IAS கனவைக் கருக்கொண்டவர். தன்னுடைய பள்ளி நாட்களில் ஆறாம் வகுப்பில் தோல்வியடைந்தார். இது ருக்மணி ரியாரின் மனதை சற்று அசைத்தது, சற்று பாதிப்படைந்தாள். ஆயினும் இலக்கை முன்னிறுத்தி, வருந்தி கற்றாள். பள்ளிப்படிப்பு முடிந்ததும் அமிர்தரசிஸ் உள்ள குருநானக்தேவ் பல்கலைக்கழகத்திலும், மும்பையில் உள்ள டாடா உயர்கல்வி நிறுவனத்திலும் கற்றார். பின் IAS தேர்வுக்கான தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்டு வீட்டிலிருந்தே தயாரித்தாள்.
2011-ஆம் ஆண்டு IAS தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் வெற்றிப் பெற்றார். இலட்சிய மிகு பயணம், வெற்றியை வழங்கும். இலட்சிய மிகு பயணம் சாதனைகளைப் படைக்கும். இலக்கை அடைவதற்கு எத்த தடைகள் வந்தாலும் அவற்றை கடந்து வரலாறு படைக்கலாம் என்பதைத் தான் இன்றைய விழா நமக்கு உணர்த்தி நிற்கிறது.
🟣இயேசு தன் பணிக்காலத்தில், கலிலேயா, சமாரியா, கப்பர்நாகூம் , எருசலேம் பகுதிகளில் அதிகமாக சுற்றி வந்தார்.
🔴இயேசு கலிலேயாவில் பணி செய்த போது, அந்தப் பயணத்தில் மகிழ்வு, உற்சாகம், ஏற்றுக்கொள்ளல், புதுமைகள் நிறைந்ததாய் இருந்தது.
🔵இயேசுவின் பணிக்காலத்தில் ஒரு நிறைவான பணித்தளமாக கலிலேயா அமைந்திருந்தது.
🟡இயேசுவின் எருசலேம் பயணம், அவ்வளவு இனிமையானதாக இல்லை, புறக்கணிப்புகள், சதித்திட்டங்கள், அவமதிப்புகள் நிறைந்ததாய் அமைந்தது.
🟢எருசலேம் பயணம் - பாடுகளின் பாதையாய், துன்பம் நிறைந்ததாய் அமைந்திருந்தது.
யோவான் 5 - ஆம் அதிகாரத்தில் யூதர்களின் விழாவிற்காக எருசலேம் செல்கிறார். நோயுற்றவரை நடக்கச் செய்தார். இதனைப் பொறுக்காத பரிசேயர்
யோவான் 5:16 "ஓய்வு நாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரை துன்புறுத்தினார்கள்" அதுபோல
🟣கூடாரத் திருவிழாவிற்காக இயேசு போகிறார். அங்கு அவர் போதிக்கிறார். அவருடையப் போதனையை ஏற்காத பரிசேயர்.
யோவான் 7:30 "அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை" என்று பார்க்கின்றோம்.
🔴எருசலேமில் யூதர்களிடம், தந்தை கடவுளுக்கும் தனக்குமான உறவைக் குறித்துப் பேசுகிறார். ஏற்க மனம் இல்லா பரிசேயர்.
யோவான் 8:59 "அவர் மேல் கல்லறிய கற்களை எடுத்தார்கள் ஆனால் இயேசு மறைவாக, நழுவி கோவிலிலிருந்து வெளியேறினார்”
இத்தகைய புறக்கணிப்பு, வேதனை, அவமானம் நிறைந்த பயணத்தின் உச்சம் தான், இந்த இறுதி எருசலேம் பயணம்.
🔵இந்த எருசலேம் பயணம் ஒரு இலட்சியம் நிறைந்த வெற்றி விழா.
இன்றைய விழாவின் பின்புலம் என்ன?
குருத்து வெற்றியினை உணர்த்தும் ஓர் அடையாளம். கி.மு. 164 - ஆம் ஆண்டு யூதா மக்களே, எருசலேமை பகைவர்களிடமிருந்து, விடுவித்து, தூய்மைப்படுத்திய நேரத்தில், இஸ்ரயேல் மக்கள் குருத்தோலைகளை ஏந்தி வெற்றிப் பவனி நடத்தினார்கள், நன்றி செலுத்தினார்கள்.
2 மக் 10:7 "எனவே தழைகளால் அழகு செய்யப்பட்ட கழிகளையும், மரக்கிளைகளையும், குருத்தோலைகளையும் ஏந்தியவர்களாய் தமது திருவிடத்தை வெற்றிகரமாக தூய்மைப்படுத்தும் படி செய்த கடவுளுக்குப் புகழ்பாக்கள் பாடி நன்றி செலுத்தினார்கள்"
கி.மு. 142 - ஆம் ஆண்டில் சீமோன் தலைமையில் பகைவரை அழித்து எருசலேமுக்கு விடுதலை வழங்கின போது
1 மக் 13:51 "புகழ்பாக்களையும், நன்றிப்பாக்களையும் பாடிக்கொண்டும், குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டும் யாழ், கைத்தாளம், சுரமண்டலம் ஆகிய இசைக்கருவிகள் மீட்பிக்கொண்டும், கோட்டைக்குள் யூதர்கள் நுழைந்தார்கள்"
இந்த நீண்ட வரலாற்றுப் பின்புலத்தை யூதர்கள் மனதில் வைத்திருந்தனர். இயேசுவின் சமகாலத்தில் இஸ்ரேயலர் உரோமையருக்கு அடிமைகளாய் இருந்ததால் யூதா மக்கபேயர், சீமோன் போல இயேசு விடுதலை பெற்றுத் தருவார் என்ற உணர்வோடு விடுதலையின், புதுவாழ்வின், வெற்றி ஆர்ப்பரிப்பின் விழாவாகக் கொண்டாடினர், பாடி மகிழ்ந்தனர்.
🟡 "ஓசன்னா" எந்த எபிரேயச் சொல்லுக்கு "விடுதலை" "வெற்றியை" தாரும் என்று பொருள்படும்.
திபா 118:25 "ஆண்டவரே மீட்டருளும் ஆண்டவரே வெற்றி தாரும்" என்ற தாவீதின் வரிகள் இஸ்ரயேல் மக்கள் விடுதலைக்காக, வெற்றிக்காக ஏங்கினர் என்பது புலனாகிறது.
♦️ஆண்டவர் இயேசு அமைதியின் அரசராக எளிமையின் மன்னராக கழுதை மேல் பவனி வந்தார்.
♦️நாட்டில் அமைதியான காலங்களில் அரசர்கள் மக்களை சந்திக்க நகருக்கு வரும் போது கழுதையில் வந்தார்கள்.
♦️இயேசுவும் கோவேறு கழுதையில் பெத்தானியாவிலிருந்து எருசலேம் நகருக்கு வந்ததை இன்று நாம் நினைவு கூர்கின்றோம். இதன் மூலம் கிறிஸ்து அன்பின், அமைதியின், நீதியின் அரசர் என பொருள் கொள்ளலாம்.
யோ 12:14 "இயேசு கழுதைக் குட்டியைக் கண்டு அதன் மேல் ஏறி அமர்ந்தார்" இந்த நிகழ்வை இறைவாக்கினர் செக்கரியா முன் குறித்துள்ளார்.
செக்கரியா 9:9 "மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு. மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ உன் அரசர் வருகிறார். அவர் நீதியுள்ளவர். வெற்றி வேந்தர், எளிமையுள்ளவர், கழுதையின் மேல் கழுதை குட்டியாகிய மறியின் மேல் ஏறி வருகின்றார்" என்று இறைவாக்குரைத்தார்.
கழுதை மீது வரும் இந்த இலட்சிய வேந்தர் நீதியுள்ளவராக, எளிமை மிக்கவராக, அமைதி கொண்டவராக உலகம் முழுமையும் ஆட்சி புரிபவராக வந்தார்.
இந்த அரசரின் வருகை எதற்கென்றால்
எசேக்கியேல் 34:16 "காணாமல் போனதைத் தேடுவேன், அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டு வருவேன், காயப்பட்டவற்றிற்க்கு கட்டுப் போடுவேன், நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன்"
🟣இத்தகைய கரிசனை, அன்பு, இரக்கமுள்ள அரசின் அன்பு பிள்ளைகள் நாம்.
தாழ்ச்சி, கனிவு, பரிவு, இரக்கம், அன்பு, எளிமை, தூய்மை ஆகிய பண்புகளை வாழ்வாக்க வேண்டும்.
குருத்து மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் அமைந்தது போல, நம் வாழ்வு பிறருக்கு மகிழ்வைக் கொடுப்பதாய் அமைய வேண்டும். (கரிசனை உள்ள பேச்சு, உடனிருப்பு, கனிவான செயல்கள் இவற்றால்)
🔵குருத்து - புதிய உறவை வெளிப்படுத்துவது, புதிய உறவை வலுப்படுத்துவது, குருத்தோலை விழா ஒரு உறவின் ஒன்றிப்பு விழா.
🟡 நாம், உறவோடும், உள அன்போடும், நடந்து கொள்கிறோமா?
🟢நாம் முறிந்த உறவுகளை சரி செய்கின்றோமா?
புதிய குருத்து -
புதிய எதிர்பார்ப்பு
புதிய மாற்றத்திற்கான முன்னெடுப்பு
புதிய வாழ்வின் முன்னடையாளம்
♦️இதை நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம்?
♦️கடவுளுக்கும் - மனிதருக்குமான உறவு பரிமாற்றம்
♦️உடன் வாழ்வோரில் கடவுளைக் காண, உடன் வாழ்வோரை மதிக்க உணர்த்தும் விழா.
சிந்திப்போம்!
செயலாக்கம் பெறுவோம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*